ஜோதிடம் அறிவோம்! - இதுதான்... இப்படித்தான்..!

Discussion in 'Astrology Numerology & More!' started by Bhaskaran, Oct 24, 2018.

  1. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    ராகு கேது தோஷ விபரங்களைப் பார்த்தோம். இப்போது தோஷம் வேலை செய்யுமா, செய்யாதா?

    என்பதையெல்லாம் பார்ப்போம்.


    ராகுவும் கேதுவும் உலக இயக்கம் என்னும் பிறப்பு மற்றும் பிறப்பின் பயனால், பிறப்பற்ற மோட்சம் எனும் உயர்நிலை என இவற்றைத் தருவதே சர்ப்பங்களின் வேலை.

    அதனால்தான் யோக முத்திரைகளிலும் மருத்துவ முத்திரைகளிலும், சர்ப்பங்கள் இடம் பெறுகின்றன.

    வாசி யோகத்தில் அதாவது சுவாசத்தில்... மூச்சை உள் இழுத்தல் ராகு, அதாவது வாழவேண்டும் என்ற ஆசையை உண்டாக்குவது.

    மூச்சுக் காற்றை வெளியிடுவது கேது, அதாவது வாழும் ஆசையை போதும் என வலியுறுத்துவது கேது. ஆக, மூச்சை உள்ளிழுப்பது ராகு. மூச்சை வெளியே விடுவது கேது.

    இந்த இரண்டையும் சமப் படுத்துவது யோகக் கலை.

    குண்டலினி தத்துவமும் இதுதான். இப்படித்தான் வரையறுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

    எனவே வாழ்வதற்கான ஆதாரமான ராகு கேதுக்கள் எப்படி தோஷத்தைத் தருவார்கள்,

    நாம் ஏற்கெனவே பார்த்தபடி சர்ப்ப தோஷ பரிகாரம் என்பது சமீபகாலத்தில் உருவானது.

    எனவே திருமணப் பொருத்தத்தில் தோஷங்களைப் பார்க்கவே வேண்டாம் என்பதை உறுதியாகவே சொல்கிறேன்.

    5 ம் இட தோஷ விபரங்களை மட்டும் இப்போது பார்ப்போம்

    5ல் ராகு தோஷமா?... அளவற்ற ஆண் குழந்தைகள் பிறக்கும்.

    5ல் கேது... குழந்தை உண்டு. ஆனால் ஆரோக்கியப் பாதிப்பு உள்ள குழந்தை அல்லது ஆரோக்கியமாக இருந்தாலும் பிற்காலத்தில் பெற்றோரைப் பிரிந்து தனிமையை ஏற்படுத்தும் குழந்தை என்கிற நிலை உண்டாகும்.

    என் அனுபவத்தில் இங்கே ஒன்றைச் சொல்கிறேன். சுமார் 30 வருடங்களுக்கு முன் காளஹஸ்தி கோயிலுக்குச் செல்லும் போது அங்கே ராகு கேது பரிகாரம் என்று பெரிய அளவில் நடந்து பார்த்ததேயில்லை.

    தற்போது பெரிய அளவில், ஒரே நாளில், ஒரே சமயத்தில் சுமார் 100 முதல் 200 பேர் அமர்ந்து பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.

    மீண்டும் மீண்டும் கூறுகிறேன். எந்த பரிகாரம் செய்தாலும் தோஷம் விலகாது. தோஷம் தோஷம்தான்..! அதை அனுபவித்தே தீரவேண்டும்

    அப்படியெனில்.. தோஷம் பாதிக்குமா? என்ற கேள்விக்கு என்னுடைய பதில்... ஆமாம், பாதிக்கும். அதை அனுபவித்துதான் தீரவேண்டும்.

    ஒவ்வொருவரும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை சந்தித்துகொண்டுதான் இருக்கிறோம்,

    அதெல்லாம் நாம் நினைப்பதுபோல் ஒரு நிகழ்வு என்றே கடந்துவிடுகிறோம்.

    உண்மையில் அனைத்தும் கிரகங்களின் ஆளுமையே என்பதை மனதில் கொள்ளுங்கள்.

    இன்று நீங்கள் உடுத்தும் உடை, உண்ணும் உணவு, சந்திக்கும் விஷயங்கள், பிரச்சினைகள் என அனைத்தும் கிரகங்களே தீர்மானிக்கின்றன.

    யோசித்து பாருங்கள்... பாக்கெட் நிறைய பணம் இருந்தும், பசியில் இருந்திருப்பீர்கள்,

    வீட்டில் இருந்து உணவு கொண்டு சென்றாலும் உண்ண முடியாத நிலையும் வந்திருக்கும்.

    இவை அனைத்தும் கிரகங்களின் வேலைகளே!

    எனவே தோஷத்தை கண்டு பயப்படாமல், அதனுடன் சேர்ந்து பயணிப்பதே நம் வாழ்வைச் சிறப்பாக்கும். செழிப்பாக்கும்!

    ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

    தோஷம் என்பது தோஷம்தான். ஆனால் இந்தத் தோஷத்தில் இருந்து முற்றிலுமாக விலகிவிடலாம் என்று சொல்கிற, செய்யச் சொல்கிற பரிகாரங்களால் ஏதும் நிகழப்போவதில்லை என்பதை உணருங்கள்.

    மிகப்பெரிய ஹோமங்களோ பரிகாரங்களோ செய்துதான் தோஷ நிவர்த்தியாகவேண்டும் என்றில்லை. எல்லாப் பரிகாரங்களும் பூஜைகளும் தோஷங்களின் தாக்கத்தைக் குறைக்க உதவும் என்பதே உண்மை.

    இரண்டே இரண்டு விஷயங்கள். இதுவே பரிகாரங்கள். முதலாவது, தினமும் வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். பூஜையறையில் ஒருபத்துநிமிடமேனும் அமர்ந்து ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பிரார்த்தனை செய்யுங்கள். சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுங்கள். சொல்லப்போனால், ஆலயங்களுக்குச் சென்று தரிசித்து வழிபடுகிற சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பாக்கெட்டில் உள்ள பணம் குறையும் போது, ஏடிஎம் சென்று பணம் எடுத்து, பர்ஸில் வைத்துக் கொள்கிறோம்தானே. அதேபோல், வழிபாடுகளும் தரிசனங்களும் பிரார்த்தனைகளும் தோஷங்களின் தாக்கத்தை வெகுவாகக் குறைத்துவிடும் சேமிப்பே பிரார்த்தனை, வழிபாடு என்பதை மறக்காதீர்கள்.

    எனவே ராகு கேதுவைக் கண்டு பயப்படாதீர்கள். அவர்கள்தான் நம் மூச்சுக் காற்று என உணர்ந்தால், எல்லாம் நன்மையே... எல்லாம் நன்மைக்கே என்று கூறி, தோஷங்களுக்கான பரிகாரங்களைப் பார்க்கலாம்.

    -தெளிவோம்

    நன்றி :- தி இந்து
     
  2. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    தினமும் வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். பூஜையறையில் ஒருபத்துநிமிடமேனும் அமர்ந்து ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பிரார்த்தனை செய்யுங்கள். சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுங்கள். சொல்லப்போனால், ஆலயங்களுக்குச் சென்று தரிசித்து வழிபடுகிற சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.


    பாக்கெட்டில் உள்ள பணம் குறையும் போது, ஏடிஎம் சென்று பணம் எடுத்து, பர்ஸில் வைத்துக் கொள்கிறோம்தானே. அதேபோல், வழிபாடுகளும் தரிசனங்களும் பிரார்த்தனைகளும் தோஷங்களின் தாக்கத்தை வெகுவாகக் குறைத்துவிடும் சேமிப்பே பிரார்த்தனை, வழிபாடு என்பதை மறக்காதீர்கள்.

    எனவே ராகு கேதுவைக் கண்டு பயப்படாதீர்கள். அவர்கள்தான் நம் மூச்சுக் காற்று என உணர்ந்தால், எல்லாம் நன்மையே... எல்லாம் நன்மைக்கே என்று கூறியிருந்தேன்.

    அதையடுத்து, தோஷங்களுக்கான பரிகாரங்களைப் பார்க்கலாம் என்று சொன்னேன் அல்லவா.

    முதலில் ஒரு விஷயம்... ஒரு விளக்கம்...

    தோஷங்களை அனுபவிக்க வேண்டும், பரிகாரம் செய்து தோஷ வீரியத்தை குறைத்துக்கொள்ளலாம் என்று நான் பதிவிட்டது நிறைய பேருக்கு குழப்பத்தைத் தந்திருக்கும்.

    இதில் குழப்பம் வேண்டாம். கலவரப்படத் தேவையில்லை.

    திருமணப் பொருத்தம் பார்க்கும் போது இந்த தோஷங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்பதே என்னுடைய கருத்து. இதையே ஜோதிட சாஸ்திரமும் வலியுறுத்துகிறது

    மற்றபடி, நம் வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளுக்கு, தோஷ விபரங்களைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற பரிகாரங்களைச் செய்து வந்தால், தோஷ வீரியத்தைக் குறைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

    திருமணம் நடைபெற பரிகாரங்கள் என்ற பெயரில் பெருமளவு பணத்தை வீண்டிக்காதீர்கள் என்பதே எனது வேண்டுகோள்.

    ஆலயத்தில் ஏற்றப்படும் ஒரு விளக்கு, உங்கள் வாழ்விலே ஒளி வீசும், வழிகாட்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    முடிந்தவரை அன்னதானம் செய்யுங்கள். எத்தனையோ தானங்களை வாரிவாரிக் கொடுத்திருந்தாலும் கர்ணன் அன்னதானம் செய்யவில்லையே... என்று பின்னாளில் வருத்தப்பட்டதும் அந்தப் பெரும்பலன், தனக்குக் கிடைக்கவில்லையே என்று நொந்துகொண்டதும் புராணம் கூறும் உண்மை. ஆகவே, அன்னதானத்தைப் போல மிக உன்னதமான தானம் ஏதுமில்லை என்பதை மறக்காதீர்கள்.

    அடுத்து... வசதி இருப்பின் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். இன்னும் முடிந்தால், திருமணத்தையே நடத்திக் கொடுக்கலாம்!

    கட்டில், மெத்தை என தானம் தருவது உங்கள் பிள்ளைகளின் திருமணத்தையும், திருமணத்திற்குப் பின் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் அமைத்துக் கொடுக்கும். சந்தான விருத்தி எனப்படும் குழந்தை பாக்கியத்தை விரைவில் தரும்.

    தோஷம் தரும் வீடு எதுவோ, அதன் பஞ்சபூதத் தன்மைக்கு ஏற்றார் போல் தானம் வழங்குங்கள். நிச்சயம் நல்ல பலனைத் தரும்.

    ராசிகளின் பஞ்சபூதத் தன்மை குறித்த விவரங்களை முன்பே சொல்லியிருக்கிறேன். ஆனாலும் மீண்டும் ஒருமுறை பார்த்துவிடுவோமா?

    மேஷம், சிம்மம், தனுசு —— நெருப்பு,

    ஆலயங்களில் விளக்கேற்றுதல், அல்லது விளக்கேற்ற எண்ணெய் தானம் தருவது மிகவும் விசேஷமானது.

    கோதுமை, மிளகு முதலான தானியங்களில் செய்த உணவை தானமாக வழங்குங்கள்.

    வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு மிகவும் சக்திவாய்ந்தது. அல்லது வெள்ளெருக்கு விநாயகரை யாருக்கேனும் தானமாக வழங்குவது அதைவிட புண்ணியம்!

    ரிஷபம், கன்னி, மகரம் —— நிலம்

    ஆலயங்களுக்கு தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் தானம் தருவது சிறப்பு. முக்கியமாக கும்பாபிஷேகத்தின் போது தானம் வழங்குங்கள்.

    மரம் நடுதலும் அவற்றை தண்ணீரும் உரமும் இட்டுப் பராமரிப்பதும் தோஷங்களை விலக்கும் மாமருந்து. அதேபோல், விலங்குகளை பராமரித்தலும் தோஷங்களை நிவர்த்தி செய்யும். எப்போதெல்லாம் முடிகிறதோ... அன்னதானம் செய்துகொண்டே இருங்கள்!

    மிதுனம், துலாம், கும்பம் ——- காற்று

    தெரிந்த மந்திரங்களைச் சொல்லி வழிபாடு செய்யுங்கள். தியானப் பயிற்சியில் ஈடுபடுங்கள். வீட்டில் வாயு மூலை கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதாவது வாயுமூலையில், காற்றானது வீட்டுக்குள் வந்துசெல்லும்படி கதவோ ஜன்னலோ இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதேபோல், வீட்டு ஹாலில் சரம் போலான அமைப்பு கொண்ட, அழகிய வேலைப்பாடு கொண்ட மணியைத் தொங்கவிடுவது நல்லது. காற்றானது அதில் பட்டு, மெல்ல ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும். மனதுக்கு இதமும் அமைதியும் தரும் அந்த ஒலியும் காற்றும் சேர்ந்து தோஷங்களையெல்லாம் விரட்டிவிடும்.

    மாணவர்களுக்கு பென்சில், பேனா, நோட்டு புத்தகங்கள் வழங்குதல், ஏழைகளின் கல்விக்கு உதவுங்கள். முடிந்தால் அவர்களின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்ளுதல் நன்மை தரும்.

    கடகம், விருச்சிகம், மீனம் ——— நீர்

    அபிஷேகப் பொருட்களை அதாவது பன்னீர், இளநீர், சந்தனம், திரவியப்பொடி முதலானவற்றை ஆலயங்களுக்கு வழங்குங்கள். கோடைகாலங்களில் தண்ணீர் பந்தல் அமைப்பதற்கு உதவுங்கள். முடிந்தால், தனியாகவே தண்ணீர்ப் பந்தல் அமையுங்கள்.வசதிகள் இருப்பின் ஏரி, குளம் தூர்வாருவதற்கு உதவுங்கள். உதவி செய்தல் இவையெல்லாம் உங்கள் தோஷத்தின் வீரியத்தைக் குறைக்கும். சந்தோஷத்தைப் பெருக்கும்!

    இன்னும் பல விபரங்களை அடுத்து பார்ப்போம்!

    -தெளிவோம்

    நன்றி :- தி இந்து
     
  3. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    இப்போது பரிகாரம் குறித்து என்னெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் என்னெல்லாம் செய்யவேண்டும் என்பதைப் பார்ப்போம்.

    ஒருவருக்கு இரு தாரம் எனும் தோஷம் இருக்கிறது.

    இரு தார தோஷம் என்றால் என்ன?

    அதாவது, மூன்று வகையாக இதைச் சொல்லலாம்.

    முதலாவது... துணை (கணவன் அல்லது மனைவி) இறந்து போக, இன்னொருவரை மணம் புரிவது! அதாவது இரண்டாவதாகத் திருமணம் செய்வது!

    இரண்டாவது... விவாகரத்து பெற்று, அடுத்து வேறொருவரை மணம் புரிவது!

    மூன்றாவது... கணவன் அல்லது மனைவிக்குத் தெரியாமல், ரகசியமாக இன்னொரு துணையை தேடிக் கொள்வது.

    ஆக, இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக, இரு தார தோஷம் என்று சொல்கிறார்கள். இந்த தோஷத்துக்குப் பரிகாரம் உண்டென்றும் சொல்கிறார்கள். இதுதான் பரிகாரம் என்றும் சொல்கிறார்கள்.

    என்ன செய்வது? அவருக்கு இரண்டு திருமணம் செய்விக்க முடியுமா? நடைமுறைக்கு சாத்தியமா? சட்டம்தான் ஏற்றுக்கொள்ளுமா?

    என்ன செய்வது?

    இந்தப் பரிகாரங்கள் குறித்துதான் கேள்விகள் இருக்கின்றன.

    வாழை மரத்துக்கு தாலி கட்டிவிட்டு, அதை வெட்டிச் சாய்த்துவிட்டால், தோஷம் போய்விடும் என்கிறார்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள். சிலர் பார்த்திருக்கவும் செய்யலாம். இன்னும் ஒரு சிலர்... அந்தப் பரிகாரத்தைக் கூட செய்திருக்கலாம்!

    ஆனால் நடப்பதென்ன? பரிகாரம் செய்பவர்... ஒரு வாழை மரத்தை வெட்டி கொண்டுவந்திருப்பார். அந்த வாழை மரத்துக்கு தாலிகட்டி அந்த வாழைமரத்தை வெட்டி விடுவார், பரிகாரம் முடிந்தது. அப்படித்தானே!

    இது சரியா?

    ஏற்கெனவே வெட்டப்பட்ட மரம் எப்படி உயிரோடு இருக்கும்?

    ஏற்கெனவே வெட்டப்பட்ட மரம் எனில், அது இறந்த மரம்தானே?

    இறந்த மரத்திற்கா தாலி கட்டினார்? இறந்த மரத்தை மீண்டும் வெட்டி என்ன பயன்?

    நான் இங்கே அபசகுன வார்த்தை பிரயோகிப்பதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

    ஆனாலும் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டியிருக்கிறது.

    எனக்கு தெரிந்து... வாழைத்தோப்பில் வைத்து குலை தள்ளாத மரத்திற்கு தாலி கட்டி, அதை வெட்டினால் தோஷம் நீங்கும் என்பதை எடுத்துக்கொள்ளலாம்,

    அது என்ன குலை தள்ளாத மரம்? என நீங்கள் கேட்பது புரிகிறது, அதாவது குலை தள்ளாத மரம் கன்னிக்கு ஒப்பானது! கன்னித் தன்மைக்கு நிகரானது!

    ஆனால் இதுவும் தவறுதான், இதனால் இரு தார தோஷம் நீங்கிவிடாது,

    இதில் என்ன ஆச்சரியம் என்றால், சமீபத்தில் ஒரு பெண்ணின் பெற்றோர் தங்கள் பெண்ணுக்கு திருமணம் தடை பெற்றுக்கொண்டே இருக்கிறது என்றும், மகளுக்கு இரு தார தோஷம் இருப்பதாக ஒரு ஜோதிடர் சொன்னதால், அவரின் வழிகாட்டுதல் படி இந்த வாழைமர பரிகாரம் செய்ததாகவும் சொன்னார்கள்.

    நான் வாயடைத்துப் போனேன், ஆணுக்கு இந்த பரிகாரத்தை பரிந்துரைப்பது போய், பெண்களுக்கும் இந்தப் பரிகாரத்தை வழிமொழியும் ஜோதிடர்களை என்னவென்று சொல்வது?

    இது எவ்வளவு பெரிய அபத்தம். ஜோதிடம் என்பதே ஒருவரின் காலநிலையை அறியும் கலை. அவர் யார்? எப்படிப்பட்டவர்? அவருடைய எதிர்காலம் என்ன? அவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? செழிப்பான வாழ்வா? போராட்ட வாழ்வா?

    என காட்டும் மாயக்கண்ணாடிதான் ஜோதிடம்!

    எனவே ஜோதிடம் என்பது வருவதை அறிந்து கொள்ளும் அற்புதக் கலையே தவிர, நாம் எதிர்கொள்ள இருக்கும் எதையும் மாற்றித் தரக்கூடியதல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    சரி... இந்த இரு தார தோஷத்திற்கு என்னதான் வழி? பரிகாரம் இருக்கிறதா?

    வழி இருக்கிறது. அது மிக மிக எளிமையான பரிகாரம்தான்.

    திருச்செங்கோடு நகரில் அமைந்துள்ள அர்த்ததாரீஸ்வரர் ஆலயத்திற்கு வருடாவருடம் செல்வதும், அந்த சிவசக்தி சொரூபப் படத்தை வைத்து வழிபடுவதும் சிறப்பு வாய்ந்தது.

    ஸ்ரீராமபிரான் பட்டாபிஷேகத் திருவுருவப் படத்தை வைத்து வழிபடுவதும் இரு தார தோஷ நிவர்த்தியாகும்!

    திருமலை வேங்கடவன் ஶ்ரீநிவாசப் பெருமாளை வருடாவருடம் தரிசிப்பதும் நல்ல பலனைத்தரும்.

    இங்கே நன்றாக கவனியுங்கள்.

    ஏதோ ஜோதிடர் கூறினார் என்பதற்காக ஒரே முறை ஆலய தரிசனம் செய்துவிட்டு தன் தோஷத்திற்குப் பரிகாரம் நடந்துவிட்டதாக நிறையபேர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இது தவறு. அந்த ஆலய தரிசன பரிகாரம் வருடத்திற்கு ஒருமுறை அல்லது நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்றுவரவேண்டும்.

    உதாரணமாக ராகு கேது தோஷத்திற்கு திருக்காளத்தி சென்று வந்தாலே, அதாவது காளஹஸ்தி சென்று வந்தாலே பரிகாரம் ஆகிவிடாது. ஆறுமாதங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாகச் சென்று வரவேண்டும் மற்றும் அருகில் உள்ள புற்றுக்கோயிலுக்கு வாராவாரம் சென்று வரவேண்டும்.

    இது போன்ற பரிகாரங்களை விடுத்து, சிறிதும் நடைமுறைக்கு ஒப்பாத, விஷமத்தன பரிகாரங்களை செய்து உங்கள் பணத்தையும் நிம்மதியையும் கெடுத்துக்கொள்ளாதீர்கள்.

    - தெளிவோம்.
    நன்றி :- தி இந்து
     
  4. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    இரு தார தோஷங்கள் குறித்து பார்த்துக் கொண்டிருந்தோம்.

    இரு தாரமோ... ஒரு தாரமோ... எந்த தோஷமாக இருந்தாலும் அந்தத் தோஷங்களைத் தாண்டி நமக்கெல்லாம் தேவை... சந்தோஷம்தான்! அந்த சந்தோஷம்... மன அமைதியில் இருந்து கிடைக்கிறது. மன அமைதி என்பது, தெய்வ வழிபாட்டின் மூலமே நமக்குக் கிடைக்கும். ஆகவே, தெய்வ வழிபாட்டைத் தொடர்ந்து கொண்டே இருங்கள் அன்பர்களே!


    சரி... இரு தார தோஷங்கள் பற்றிப் பார்ப்போம்.

    இது முதல் வகை தோஷமான களத்திர இறப்பும்

    அதனால் ஏற்படும் மறுமணம் என்னும் தோஷ விபரங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    திருமணப் பொருத்தத்தின் போது, பொதுவாக ஜோதிடர்கள் வெறுமனே பொருத்தம் மட்டும் பார்ப்பார்கள் என நினைக்க வேண்டாம்.

    ஒரு ஜாதகத்தைப் பார்க்கும் போது முதலில் கவனிக்கப்படவேண்டியதும் கணிக்கப்பட வேண்டியதும் என்ன தெரியுமா? ஜாதகத்தில்... என்ன தசாபுத்தி நடக்கிறது என்பதும், ஆயுள் ஸ்தானமும், அதன் அதிபதி நிலையும், திரேக்கணம் என்கிற ராசிக் கட்டத்தையும் தான் பார்ப்பார்கள்.

    அதாவது ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் மேலே சொன்ன அமைப்புகளை ஆராய்ந்த பிறகே பொருத்தம் பார்க்கப்பட வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

    அதாவது ஆயுளுக்கு பங்கம் இருக்கிறதா என்பதே முதல் கேள்வி. ஆகவே, ஆயுளுக்கு பங்கம் இல்லை என்றால்தான் மற்ற விஷயங்கள் பார்க்கப்பட வேண்டும்,

    ஆனால் எத்தனை ஜோதிடர்கள் இதை கடைபிடிக்கிறார்கள்... எத்தனை ஜோதிடர்களை இவற்றையெல்லாம் கடைப்பிடிக்க வைக்கிறோம் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

    நான் அறிந்தவரை அதிகம்பேர் வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே’ பார்க்கிறார்கள். இந்த நட்சத்திரப் பொருத்தத்தைக் கொண்டே திருமணம் செய்யலாம் என்று சொல்லிவிடுகிறார்கள்.

    கடந்த இருபது வருடங்களுக்குள்ளாக, யூஸ் அண்ட் த்ரோ பேனா என வரத் தொடங்கியது. ரீஃபில் போடுவதற்கு எந்தப் பாதையும் இருக்காது. முழுக்க ‘மோல்ட்’ செய்யப்பட்டிருக்கும். எழுத எழுத, தீர்ந்துவிட்டால், தூக்கிப் போட்டுவிட வேண்டியதுதான். இதற்குக் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால், யூஸ் அண்ட் த்ரோ என்று தெரிந்து வாங்குகிறோம். தீர்ந்து போய், தூக்கிப் போட்டாலும் அடுத்து ஐந்து ரூபாய் கொடுத்து இன்னொரு பேனா வாங்கிக் கொள்வோம்.

    ஆனால் திருமணம் அப்படியில்லைதானே! கல்யாணம் ஆயிரங்காலத்துப் பயிர் என்பது சத்திய வார்த்தை அல்லவா! வாழையடி வாழையென சந்ததி வளர்க்கிற ஆயுள் பரியந்த உறவு அல்லவா.. கணவன் மனைவி பந்தம்!

    அப்படியிருக்க, ஆயுள் பரியந்தமான உறவுக்குள் நுழைவதற்கு முன்னதாக, ஆயுள் குறித்த விஷயத்தைப் பார்ப்பதுதானே சரியாக இருக்கும். இருக்கிறது என்று தெரிந்த பிறகுதானே அடுத்தடுத்த பொருத்தங்கள் பார்ப்பது முறையாக இருக்கும்.

    உண்மையில், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் குறைந்தது 17 நட்சத்திரங்கள் பொருந்தும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஜோதிட வல்லுநர்களும் இதையே வலியுறுத்துகிறார்கள். அறிவுறுத்தி உள்ளார்கள். அப்படி இருக்க வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே போதுமா? போதுமானதா?

    போதாதுதானே!

    ஜாதக ரீதியான பொருத்தம் பார்த்து, ஆயுளைக் கணித்து, மாரக திசை கவனித்து, அதன் பிறகே நட்சத்திரப்பொருத்தம் என்கிற தசவித பொருத்தத்தைப் பார்க்க வேண்டும்.

    இனிய அன்பர்களே! அன்புக்கு உரிய வாசகர்களே! இங்கே ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். நம்மில் பலரும் அதாவது பொருத்தம் பார்க்க வருபவர்களும்... இந்த ஆய்வுக்கெல்லாம் நேரம் தராமல் “ எத்தனைப் பொருத்தம் இருக்கு” என பரபரப்பாக வந்து, பரபரப்பாகக் கேட்டு, பரபரப்பாக ஓகே ஓகே என்று சொல்லி பறந்துகொண்டே இருக்கிறார்கள். கிட்டத்தட்ட, ஃபாஸ்ட் ஃபுட் உலகில், மிக வேகமாகப் போய்க்கொண்டிருக்கும் இந்த பரந்துபட்ட உலகில், ஜோதிடத்திலும் ஜாதகத்திலும் ஜாதகப் பொருத்தங்களிலும் வேகமாக இருக்க வேண்டாமே! கொஞ்சம் ஆழ்ந்து நிதானித்து கூர்ந்து அலசி ஆராய்வதே உத்தமம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!

    ’எங்கெங்கயோ அலைஞ்சாச்சு. போகாத கோயில் இல்லை; பாக்காத பொண்ணு இல்லை. எப்படியாவது பிள்ளைக்கு திருமணம் நடந்தால் போதும். இனியும் நம்மால் அலைய முடியாது’ என்று ஒருவித அயர்ச்சியில் முடிவெடுக்கிறோம். இது சரியா? சரியாகுமா?

    இன்னொரு விஷயம்...

    அப்படிப்பட்ட திருமணங்களே இன்று நீதிமன்றத்திலும், இணைய முடியாமல் வீட்டிலும் என மனக்காயங்களுடன் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள் பலரும்! மனமொத்து வாழ்வதுதான் வாழ்க்கை. ஆனால் மனமொத்துப் பிரிகிறார்கள் என்பது வேதனையான் ஒன்றல்லவா!

    எனவே உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? சும்மா (சுமையில்லாமல் இருத்தல்) இருந்தாலே போதும்.

    அதெப்படி சும்மா இருந்தால் திருமணம் நடக்குமா?

    நடக்கும். நடந்தே தீரும். கல்யாணத்துக்கு மொய் செய்யச் சென்றவர், மாப்பிள்ளை ஆன கதைகள் நம்மூரில் நிறையவே உண்டு.

    அது போலத்தான் கங்கணம் எனும் கல்யாண நேரம் வந்து விட்டால் , தானே திருமணத்தை தரும். திருமணம் இனிதே நடந்தே தீரும். அதைவிடுத்து அலையோ அலையென்று நீங்கள் எவ்வளவு அலைந்தாலும், நடக்கும்போதுதான் நடக்கும் என்பது சத்தியம்!

    சரி... இப்ப என்ன சொல்ல வர்றீங்க என்கிறீர்களா?

    இருதார தோஷம் இருக்கா? இல்லையா? இருந்தா என்ன செய்யணும்? என்ன பரிகாரம் செய்யணும்? அதை சொல்லுங்க... என்கிறீர்கள்தானே!

    உங்களுக்கோ அல்லது உங்கள் பிள்ளைகளுக்கோ இருதார தோஷம் இருந்தால், உங்கள் வருங்கால மாப்பிள்ளை அல்லது மருமகள் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மற்றும் 11 ம் இடம் பார்த்து மணம் செய்வதே பரிகாரம். இதுவே முதலும் முடிவும் முழுமையான பரிகாரம்! அப்படியொரு பரிகாரமே ஆகச் சிறந்தது. ஒரே வழி; நேர்வழி என்பார்களே. அது இதுதான்... இப்படித்தான்!

    வேறு எந்த பரிகாரமும் வேலை செய்யாது என்பதே உண்மை.

    ஆனானப்பட்ட திரௌபதி எனும் பாஞ்சாலி, ஐவருக்கு மனைவியானாள்.

    ஆனானப்பட்ட ஸ்ரீராமரே மனைவியைப் பிரிந்து, மனைவியைத் தேடியலையும் சூழல் ஏற்பட்டது என்கிற புராணக் கதைகள்... நமக்குள் தெளிவைத் தருவதற்காகவே வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

    ஆகவே அன்பர்களே! ஜாதகப் பொருத்தமே முக்கியம். மிக மிக முக்கியம். மிக மிக மிக முக்கியம்!

    அடுத்து... நட்சத்திரப் பொருத்தம் பற்றிய தகவல்களைப் பார்ப்போமா?

    - தெளிவோம்

    நன்றி :- தி இந்து
     
  5. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    சென்ற பதிவில் திருமணம் நடக்க வேண்டுமா?' ‘சும்மா' இருங்கள் எனச் சொல்லியிருந்தேன்.


    நிறைய பேர், 'அதெப்படி, எம் பிள்ளைங்களுக்கு கல்யாணம் செஞ்சு, எங்கள் கடமையை நிறைவேத்த வேணாமா? அதுக்கு நாலுபத்து இடங்கள்னு ஓடியாடி தேடினாத்தானே நல்லதா இடம் கிடைக்கும். ஜம்முன்னு கல்யாணமும் பண்ணிவைக்கலாம். கல்யாணம் பண்ணி வைச்சாத்தானே, எங்க கடமை முழுசா நிறைவேறும்’’ என்றார்கள்.

    “ ஆயிரம் பேரைப் போய் பார்த்து சொல்லி வைத்தால் தானே திருமணம் நடக்கும்” என்ற பழமொழி உங்களுக்கு தெரியாதா?’’ என்றார்கள் இன்னும் சிலர்.

    முதலில் ஜோதிடத்தை ஏன் பயன்படுத்துவது? எதற்காகக் பயன்படுத்துவது? எப்படிப் பயன்படுத்துவது? என்பதே அடிப்படைத் தத்துவம். இவற்றை நன்றாக அறிந்துகொண்டால், திருமணம் என்றில்லை... வேறு எது குறித்தும் எப்போதும் அலைச்சலுறத் தேவையில்லை. அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமும் கிடையாது.

    விவசாயி ஒருவர், மாதக்கணக்கில் பாடுபட்டு, பயிரிட்ட உணவுப் பொருளை, மொத்த வர்த்தகர் ஒருவர், உட்கார்ந்த இடத்திலேயே அதை தனக்கு உரிமையாக்கி கொள்கிறார்.

    அதுபோலத்தான் இந்தத் திருமண விஷயத்தில் நீங்கள் விவசாயியாக இருக்கப்போகிறீர்களா, அல்லது வர்த்தகராக இருக்கப்போகிறீர்களா, என்பதே என் கேள்வி. விவசாயியைப் போல் இருப்பதும் தவறில்லை. வர்த்தராக இருப்பதும் தப்பில்லை.

    இருட்டுப்பாதையில் கையில் விளக்கோடு பயணிப்பது போல, வழியில் என்ன இருக்கிறது, அதை எப்படித் தாண்டிச்செல்வது என்று வழிகாட்டும் ஒளிவிளக்குதான் ஜோதிடம்!

    ஜோதிடத்தை நம்பினால்தான் பலனா? நம்பாவிட்டால் பலனில்லையா என்றும் சிலர் கேட்கிறார்கள்.

    ஜோதிடத்தை நம்பாதவர்களுக்கு என்ன செய்யும்? ஒன்றும் பிரச்சினையில்லை! விதி செலுத்தும் வழியாக பயணிப்பார். அடுத்து என்ன ஆகும் என்றே தெரியாத ஒரு அட்வெஞ்சர் பயணம்... அதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம். அவ்வளவுதான்.

    எனவே ஜாதகத்தை ஆராய்ந்து, திருமண நேரம் வந்துவிட்டதா என்று பாருங்கள். அதன் பிறகு, திருமண ஏற்பாடுகளை தொடங்குங்கள். அனைத்தும் சுபமாக நடந்தேறும் என்பது சத்தியம்.

    சரி விரைவில் திருமணம் நடக்கவும், நல்ல வாழ்க்கை துணை அமையவும் என்ன மாதிரியான பரிகாரம் செய்யலாம் என்பதையெல்லாம் பார்ப்போமா.

    பெண்களுக்கு திருமணம் நடக்கவும், நல்ல துணை அமையவும் “ ஆண்டாள் அருளிய திருப்பாவை தினமும் காலை, மாலை இரு வேளையும் படித்து வர நல்ல கணவன் அமைவார். அதாவது காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்கேற்றுங்கள். திருப்பாவை பாராயணம் செய்யுங்கள். முடிந்ததும் ஆண்டாளுக்கு, அம்பாளுக்கு, மகாலக்ஷ்மிக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்யுங்கள்.

    அதேபோல், ஆண்கள்... தினமும் அபிராமி அந்தாதி படியுங்கள். மனமொருமித்து அபிராமி அந்தாதி பாடி, சிவ பார்வதியை ஆத்மார்த்தமாகப் பிரார்த்தனை செய்யுங்கள். நல்ல பெண்... வாழ்க்கை துணையாக அமைவார். மனைவி என்பவளே உங்களுக்கு வரமாவார்!

    ’அட... எங்களுக்குக் கல்யாணமாகி, பையனும் பொண்ணுமா பெத்து அவங்களே எங்க தோள் உசரத்துக்கு வளர்ந்துட்டாங்க. அவங்களுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறோம்’ என்கிறீர்களா.

    உங்கள் பிள்ளைகளுக்கு சீக்கிரம் நல்ல வரன் அமைய... தினமும் காலையில் முருகப் பெருமானை வழிபடுங்கள்.சஷ்டி கவசம் படியுங்கள். தினமும் மாலையில் துர்கையை வழிபடுங்கள். துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றுங்கள். விரைவில் நல்லது நடக்கும். வீட்டில் கெட்டிமேளம் முழங்கும்!

    இன்னொரு விஷயம்...

    ஏழு சுமங்கலிகளை வீட்டுக்கு அழையுங்கள். அவர்களுக்கு புடவை, ஜாக்கெட், விரலிமஞ்சள், குங்குமம், வளையல் என மங்கலப் பொருட்களை வழங்குங்கள். சீக்கிரமே... மாங்கல்ய வரன் அமைந்துவிடும். மங்கல காரியங்கள் ஊரும்பேரும் சிறக்க கோலாகலமாக நடந்தேறும்.

    கும்பகோணம் அருகே உள்ள திருமணஞ்சேரி, மதுரை மீனாட்சியம்மன் முதலான ஆலயங்களுக்குச் சென்று இறை தரிசனம் செய்யுங்கள். மனதார வேண்டிக் கொள்ளுங்கள். விரைவில் கல்யாண மாலை தோள் சேரும் என்பது உறுதி!

    அனைத்து பிரச்சினைகளும் தீரவேண்டும் எனில்,

    “திருச்செந்தூர் ஆண்டவர்” தான் கதியென்று கந்தவேலனைச் சரணடையுங்கள்.

    செந்தில் வேலன் அங்கே சிவமயமாகவும் இருக்கிறார். குரு பகவானாகவும் திகழ்கிறார். தலையெழுத்தை மாற்றும் பிரம்மாவாகவும் அருள்பாலிக்கிறார். வாழ வைக்கும் திருமாலாகவும் அருளாட்சி செய்கிறார். சக்திவேல் தாங்கி சக்தி சொருபமாகவும் வீற்றிருக்கிறார். அவரைத் தரிசிப்பவர்களின் பிரச்சினைகளையெல்லாம் தீர்க்கும் வள்ளலாகவும் எழுந்தருளியிருக்கிறார்.

    இவை அனைத்துமே எளிய பரிகாரங்கள். ஆனால் வலிமையான பரிகாரங்கள். அதிக பணம் பிடுங்குகிற பள்ளிக்கூடமே நல்ல பள்ளிக்கூடம் என்று நாம் நினைக்கிறோம் அல்லவா. அப்படித்தான்... அதிகம் செலவு செய்யும் பரிகாரங்களே சிறந்த பரிகாரங்கள் என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி நம்மை நினைக்க வைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த எளிமையான அதேசமயம் சக்தி வாய்ந்த பரிகாரங்களைத் தந்திருக்கிறேன். பயன்படுத்தி நன்மை பெறுங்கள். நலமுடனும் வாழ்க்கைத்துணையுடனும் இனிதே வாழுங்கள்.

    சரி... திருமணப் பொருத்தம் என்கிறோம். பத்துப் பொருத்தம் என்கிறோம். பத்துப் பொருத்தங்கள் என்னென்ன? இந்தப் பத்தும் நம் இல்லற வாழ்வில் நமக்கு எப்படியெல்லாம் துணை நிற்கும்?

    இந்தப் பொருத்தங்கள் திருமணத்திற்கு மட்டும் தானா? வாழ்வியலுக்கும் தொடர்பு உண்டா?

    அடுத்தடுத்துப் பார்ப்போம்,

    மேலும் உங்கள் நட்சத்திரமும், அதற்கு நன்மை செய்யும் நட்சத்திரங்கள் எவை? என்பதையும்,

    ஆச்சர்யப்படும் அளவுக்கு சின்னச்சின்ன மாற்றங்கள் எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும் என்பதையும் அடுத்தடுத்த தொடர்களில் பார்ப்போம்,

    அதற்கு முன்னதாக இன்னும் சில தோஷங்கள், பரிகாரங்களையும் பார்க்கலாம்!

    - தெளிவோம்

    நன்றி :- தி இந்து
     
  6. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    இறையருளும் குருவருளும் இருந்தால், எந்தத் தடையையும் வெல்லலாம். எந்த தோஷத்தின் வீரியத்தையும் குறைக்கலாம். ஆகவே கவலை வேண்டாம் என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

    ஆனாலும் திருமணத்திற்குத் தடை தரக்கூடிய சில விஷயங்களை மட்டும் பார்ப்போம்,


    இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பெண் என்னிடம் ஆலோசனை கேட்க வந்தார், 33 வயது,7 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

    அவருக்கு ஒருமுறை அல்ல இருமுறை திருமணம் நடந்துள்ளது, ஆனாலும் தற்போது தனியாகத்தான் உள்ளார்.


    ஏன்? என்ன ஆனது?

    முதல் கணவர் விபத்தில்உயிரிழந்தார். (இவருக்குப் பிறந்த குழந்தைதான் இந்தப் பையன்).

    இரண்டாவதாக விவாகரத்து பெற்றவரை மணந்தார், ஆனால் அவர் சில மாதங்களிலேயே தன் முதல் மனைவியோடு மீண்டும் சேர்ந்து வாழத்தொடங்கிவிட்டார். இந்தப் பெண் மீண்டும் தனிமையாக வாழ்ந்து வருகிறார்.

    இப்போது அந்தப் பெண்மணியின் கேள்வி... எனக்கு ஏன் திருமணம் நிலைக்கவில்லை? ஏதாவது தோஷம் உள்ளதா?

    நன்றாக கவனியுங்கள். இவருக்கு செவ்வாய் தோஷம் இல்லை. ராகு கேது தோஷமும் இல்லை.

    ஆனாலும் ஏன் மணவாழ்க்கை நிலைக்கவில்லை?

    மிக எளிமையான விஷயம்தான். அதாவது மிகச் சாதாரணமான விஷயம்தான் நடந்திருக்கிறது அப்போது.

    இவருடைய முதல் திருமணம் நடக்கும் போது கேது திசை நடந்தது.

    இரண்டாவது திருமணமும் அதே கேது திசையில் தான் நடந்தது,

    எனவேதான் இரண்டும் நிலைக்கவில்லை.

    முதல் கணவர் இறந்தது அவர் ஜாதகப்படி மாரக திசை,

    இந்தப் பெண்ணுக்கு கேதுதிசையின் காரணமாக நிலைக்காத கணவர் அமைய வேண்டும் என்பது விதி. ஆகவே அது நடந்தது.

    இரண்டாவது கணவர் ஆயுளுக்கு பங்கம் இல்லை. அதனால் மனம் மாறி முதல் மனைவியிடமே அவரைக் கொண்டு சேர்த்தது,

    இப்போது சொல்லுங்கள்... தோஷமே இல்லாதவருக்கும் மணவாழ்வில் பிரச்சினைகள் ஏற்படுகிறதா? இல்லையா?

    எனவே தோஷங்களுக்கு முக்கியத்துவம் தராதீர்கள்,

    உங்கள் ஜாதகத்திற்கும் இன்றைய கிரக நிலைகளுக்கும் உள்ள தொடர்பை கவனித்து, என்ன திசா புத்தி நடக்கிறது என ஆராய்ந்து மண வாழ்க்கை அமைத்துக் கொண்டால் சிறப்பைத் தரும்.

    சரி... கேது திசையில் திருமணம் செய்யக்கூடாதா? என நீங்கள் கேட்பது புரிகிறது.

    அதற்கு முன்னதாக, முதலில் கேதுவைத் தெரிந்து கொள்வோம்,

    ஓரிரு வரிகளில் சுருக்கமாகவே சொல்லிவிடுகிறேன்.

    சர்க்கரை நோயாளியிடம் லட்டு கொடுத்தால் என்ன செய்வார்? அவர் சாப்பிடமாட்டார். சாப்பிட்டால், இன்னும் சர்க்கரை அளவு அதிகமாகிவிடும். வேறுயாரிடமாவது கொடுத்து விடுவார்.

    அதுபோலத்தான் கேது பகவான் ஒருவருக்கு பொருளைக்கொடுத்துவிட்டு அதை அனுபவிக்க விடமாட்டார். அல்லது அந்த பொருளினால் பிரச்சினைகளைக் கோர்த்துவிட்டு வேடிக்கைப் பார்ப்பார்,

    கேதுவின் திசா ஆண்டுகளான 7 வருடமும் இது நீடிக்கும்.

    இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்?

    ஒரே பதில்... ஏழு வருடத்தையும் அமைதியாக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எதன் மீதும் பற்றில்லாமல் துறவியைப்போல் வாழ்ந்தால், துன்பம் இல்லாமல் கடந்து போய்விடலாம். எதன் மீதாவது ஆசையோ பற்றோ வைத்தால் அவ்வளவுதான்... அதை உங்களுக்கு உடனடியாகக் கொடுத்து அதன்மூலமாக பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே போவார்.

    வேறு பரிகாரமே இல்லையா என்று கேட்கிறீர்களா?

    மீண்டும் மீண்டும் சொல்கிறேன். பரிகாரம் என்பது தோஷத்தின் வீரியத்தைக் குறைக்குமே தவிர, தோஷத்தையே இல்லாமல் செய்துவிடாது.

    தோஷ வீரியத்தை எப்படிக் குறைக்கலாம்? உங்களுக்கு ஒரு பழமொழி சொல்கிறேன்.

    “பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை” என கேள்விப்பட்டிருப்பீர்கள். அதன் உண்மையான அர்த்தம் பிள்ளையாரில் தொடங்கி அனுமனிடம் முடிக்க வேண்டும் என்பதே.

    காரணம் கேது என்பவர் பாம்பின் வால் பகுதி ஆவார், எனவே துதிக்கை உள்ள விநாயகரும், வால் உள்ள அனுமனும் கேது திசையின் வீரியத்தை கட்டுப்படுத்தவார்கள்.

    மேலும் கேது பகவானின் அதிதேவதை வழிபாடும் பலம் சேர்க்கும்.

    யமதர்ம ராஜனின் உதவியாளர், நம் பாவபுண்ணியங்களை கணக்கிட்டுவரும் “சித்ரகுப்தன்” தான் கேதுவின் அதிதேவதை.

    அவர் காஞ்சிபுரத்தில் தனிக் கோயிலில் அருள்பாலிக்கிறார் சித்திரகுப்தன். அந்தக் கோயிலுக்குச் சென்று 7 விளக்குகள் ஏற்றி வழிபடுங்கள். நன்மை நடக்கும். அப்படிக் கோயிலுக்குச் செல்லும் போது, மறக்காமல் உங்கள் ஜாதகத்தையும் எடுத்துச் சென்று அவர் காலடியில் வைத்து வணங்குங்கள்.

    பௌர்ணமி அல்லது சனி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் தரிசனம் செய்யுங்கள். நல்ல மாற்றத்தை உணருங்கள்.

    இன்னும் சில பரிகாரங்கள்...

    நவக்கிரகத்தில் உள்ள கேது பகவானுக்கு சித்ரான்னம் எனும் உணவு அல்லது புளியோதரை சாதம் நைவேத்தியம் செய்து தானம் வழங்குங்கள். நன்மை கிடைக்கும்.

    இதையெல்லாம் செய்ய முடியாவிட்டால், சித்தன் போக்கு சிவன் போக்கு” என அமைதியாக இருங்கள். எல்லாம் நன்மையே.

    ஆமாம் அந்தப் பெண்ணுக்கு என்னதான் தீர்வு சொன்னீர்கள்? என்று கேட்கிறீர்களா?

    3 வது திருமணமே நிலைக்கும் எனச் சொன்னேன்.

    - தெளிவோம்
    நன்றி :- தி இந்து
     
  7. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    மாங்கல்ய பலம் கேள்விப்பட்டிருக்கிறோம்தானே. அதேபோல் மாங்கல்ய தோஷம் என்பதையும் அறிந்திருப்போம்.

    அது என்ன மாங்கல்ய தோஷம்?


    அதாவது ஒரு ஜாதகத்தில் 8ம் இடம் தான் மாங்கல்ய ஸ்தானம். குறிப்பாக பெண் ஜாதகத்திற்கு மட்டுமே பெரும்பாலும் பார்க்கப்படும். அப்படியானால் ஆண்களுக்கு பார்க்கமாட்டார்களா? என்று யோசிக்கலாம்.

    திருமணப் பொருத்தத்தின் போது “ பெண் ஜாதகத்திற்குத்தான் ஆண் ஜாதகம் பொருந்துகிறதா” என்று பார்க்கப்படுமே தவிர, ஆண் ஜாதகத்திற்கு பெண் ஜாதகத்தைப் பார்க்கக்கூடாது.

    இரண்டுமே ஒன்றுதானே. என்னங்க இது... என்று யாரேனும் சொல்லலாம். ஆனால் பார்க்கப்படும் முறையானது இப்படித்தான்.

    உதாரணமாக “பெண் பார்க்கப் போகிறோம்” என்று தான் கூறுவார்கள், மாப்பிள்ளை பார்க்கப்போகிறோம் என்று கேள்விபட்டிருக்கிறீர்களா?

    மாப்பிள்ளை வீடு பார்க்க போகிறோம் என்றுதான் சொல்லுவோம். சொல்லுவார்கள்.

    அதுபோலத்தான் “ பெண்ணுக்குத்தான் ஆணே தவிர, ஆணுக்குப் பெண் அல்ல”

    சரி விஷயத்துக்கு வருவோம்.

    இப்போது புரிகிறதா மாங்கல்ய தோஷம் பெண்ணுக்குதான் முக்கியத்துவம் தரப்படுகிறது என்று.

    என்ன செய்யும் மாங்கல்யதோஷம்.

    திருமணத்திற்குப்பின் கணவனுக்கு “மாரக கண்டம் “ ஏற்படுத்தும் என்பதே, பெரும்பாலோர் சொல்லுவது!

    இது உண்மையா? எட்டாம் இடம், அதன் அதிபதி கிரகத்தின் நிலை, நவாம்சநிலை இவையெல்லாம் கவனிக்கப்பட வேண்டும்.

    மாரகம் மட்டுமே தான் தருமா? இல்லை,

    கணவன் மனைவி சேர்ந்து வாழ்வதுதான் சிறப்பு. அதைவிடுத்து கணவன் ஒரு பக்கம், மனைவி ஒரு பக்கம் என வாழ்ந்தால் அதில் என்ன மகிழ்ச்சி இருக்கிறது?

    இதுவும் மாங்கல்யதோஷம்தான்.

    பெண் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் எந்த இடத்திலும் சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருந்தாலும் அதுவும் மாங்கல்யதோஷம்தான்.

    நிச்சயமாக அவருடைய கணவர் சம்பாத்தியத்திற்காக வெளியூர் அல்லது வெளிநாட்டில் தான் இருப்பார்.

    சில மாதங்களுக்கு முன், சென்னையில் தேசிய வங்கி ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர் என்னிடம் ஜாதகம் பார்க்கவந்தார்,

    அவர் சொன்னதை அப்படியே சொல்கிறேன்.

    “எனக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகின்றன. எங்கள் திருமணத்தின்போது என் கணவர் மும்பையிலும், நான் பெங்களூரிலும் பணியில் இருந்தோம்.

    என் கணவர் வாரம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வருவார். பிறகு அவர் போராடி சென்னைக்கு மாறுதலாகி வந்தார்,

    அதன்பின் நான் கஷ்டப்பட்டு சென்னைக்கு மாறுதல் வாங்குவதற்குள், அவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துச் சென்று விட்டார்,

    நான் இங்கு என் மாமியாருடன் இருக்கிறேன். நானும் என் கணவரும் எப்போது தான் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வோம்? என்று கேட்டார்.

    நான் இவர் ஜாதகத்தைப் பார்த்தவுடன் தெரிந்த விஷயம் மண வாழ்க்கை சிறப்பில்லை என்பதுதான்.

    ஆனால் தோஷத்தையும் சில தியாகங்கள் மூலமாக சரிசெய்ய முடியும்.

    அவரிடம் நீங்கள் வேலையை ஏன் விடக்கூடாது? வேலையை விட்டுவிட்டால் உங்கள் கணவரோடு சேர்ந்து வாழமுடியுமே... எனக்கேட்டேன்.

    அவர் தன் வேலையை விட முடியாது என சொல்லிவிட்டார். “ அப்படியானால் இப்படித்தான் உங்கள் வாழ்க்கை இருக்கும்’’ என்று உறுதியாய்ச் சொன்னேன்.

    தோஷ பரிகாரம் என்பது ஆலய வழிபாட்டால்தான் சரியாகும் என்பதில்லை,

    இப்படி சில தியாகங்களாலும் சரியாகும்.

    அதாவது ஜாதகத்தில் ஒவ்வொரு கட்டமும் “பொருள்பற்று, உயிர்பற்று” என இரண்டு விஷயங்களை உள்ளடக்கியதாகும்.

    பொருள்பற்று என்பது பொருளாதாரம் சார்ந்தது,

    உயிர்பற்று என்பது வாழ்க்கை சார்ந்தது,

    நிச்சயமாக, உறுதியாக இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் அனுபவிக்க கொடுத்துவைக்கப்படும். மற்றதை விலக்கியே வைக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

    நோயற்று இருந்தால், பணம் தராது. பணம் தந்தால் எதையும் அனுபவிக்க உடல் ஒத்துழைக்காது. இது யதார்த்தமான உண்மை.

    இன்னும் சில விஷயங்கள்... அடுத்தடுத்துப் பார்ப்போம்.

    என் நண்பனின் திருமணத்தன்று மாங்கல்யம் காணமல் போனது.

    இது ஏன்? எதனால்? பார்ப்போம்.

    - தெளிவோம்.

    நன்றி :- தி இந்து
     
  8. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    கேது திசையில் ஆண்களுக்கும் திருமணம் செய்யக்கூடாதா?

    ஆம் ஆண்,பெண் யாராக இருந்தாலும் கேது திசை நடக்கும் போது, திருமணம் செய்யக்கூடாது. ஒருவேளை திருமணம் செய்தால் சிறப்பிருக்காது.

    மேலும் பரிகாரங்கள் உள்ளனவா?

    கேதுவுக்கு உரிய தானியம் கொள்ளு. எனவே, கேது திசை நடந்தாலும், உங்கள் ராசியில் கேது வந்தாலும் (தற்போது மகர ராசியில் கேது இருக்கிறார்) தினமும் சிறிதளவு கொள்ளு பேப்பரில் மடித்து இரவில் தலையணைக்கு அடியில் வைத்து உறங்குங்கள். பிறகு காலையில் அதை எடுத்து பூஜை அறையில் வைத்துக்கொள்ளுங்கள்.

    இப்படி வாரம் முழுவதும் சேர்த்த கொள்ளு தானியத்தை சனிக்கிழமை அன்று நவக்கிரகத்தில் உள்ள கேது பகவான் காலடியில் சமர்ப்பித்து அதன் மீது விளக்கேற்றி வழிபட கேதுவின் ஆதிக்கம் குறையும்.

    மேலும் சனிக்கிழமைகளில் கொள்ளு சுண்டல் செய்து கேது பகவானுக்கு நைவேத்தியம் செய்து தானமாக வழங்குங்கள். கேதுவின் கருணை கிடைக்கும்.

    கேது என்பவர் சாதுக்கள், சந்நியாசிகள், வாழ வழியில்லாதவர்கள், நோயாளிகளைக் குறிப்பவர் என்கிறது ஜோதிட சாஸ்திரம். எனவே இவர்களுக்கு உங்களால் ஆன உதவிகளை செய்துவாருங்கள். நல்ல பலன் கிடைக்கும் என்பது உறுதி.

    சரி... இப்போது மாங்கல்ய தோஷம் பற்றி பார்க்கலாம். சென்ற பதிவில் இணைந்து வாழ முடியாத தம்பதியரைப் பார்த்தோம்.

    இந்தப் பதிவில் என் நண்பனின் திருமணத்தில் என்ன நடந்தது எனப் பார்ப்போம்.

    என் நண்பனின் திருமணம். அப்போது தாலி கட்டுவதற்கு முன்பு மாங்கல்யத்தை அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்க அனுப்பினார்கள். அதன்படி மண்டபத்தில் எல்லோரிடமும் ஆசி பெறப்பட்டது. பிறகு மணமேடைக்கு வந்து தாம்பூலத் தட்டைப் பார்த்தபோது, ஐயர் உட்பட சுற்றி நின்றவர்கள் அதிர்ந்து போனார்கள். ஆமாம்... திருமாங்கல்யத்தைக் காணவில்லை!

    ஆசிர்வாதம் செய்த எவரோ ஒருவர் மாங்கல்யத்தைக் களவாடிவிட்டார்.

    வேறு வழியே இல்லை. அவசர அவசரமாக விரலிமஞ்சள் வைத்து மாங்கல்யம் தயார் செய்து தாலி கட்டினார் நண்பர்,

    ஒருமாதம் கழித்து என்னைப் பார்த்தவர் “ ஏன் இப்படி நடந்தது? இது ஏதாவது அபசகுனமா?’’ என்றும் கேட்டார்.

    இங்கே ஒரு விஷயம்... நண்பருடையது காதல் திருமணம். எனவே, ஜாதகம் ஏதும் பார்க்கப்படவில்லை.

    நான் அவர் ஜாதகத்தையும் அவர் மனைவியின் ஜாதகத்தையும் பார்த்துவிட்டு ஒரே வரியில் சொன்னேன்... “ஒன்றும் பயப்பட வேண்டாம். இது “புனர்பூ தோஷம்” மட்டுமே. மாங்கல்ய தோஷம் ஏதும் இல்லை என்று சொல்லி, தைரியம் தந்து அனுப்பினேன்.

    அவருக்கு திருமணம் முடிந்து தற்போது 27 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றளவும் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.

    அது என்ன புனர்பூ தோஷம் என்று கேட்கிறீர்களா?

    ஜாதகத்தில் “சனிபகவானும் சந்திர பகவானும் சேர்ந்திருந்தாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும், அவர் வீட்டில் இவரும், இவர் வீட்டில் அவர் இருந்தாலும் அதாவது பரிவர்த்தனை அடைந்திருந்தாலும், இந்த புனர்பூ தோஷம் வேலை செய்யும்.

    அப்படி என்னென்ன செய்யும்?

    இந்த தோஷம் திருமணத்தின்போது மட்டுமே வேலை செய்யும், அதாவது திருமணத்தின் போது சண்டை சச்சரவுகள் , மண்டபம் மாறுதல் என பல குழப்பங்களைத் தந்து திருமணமே நின்று போகும் அளவுக்கு பாதிப்பைத் தந்து மன உளைச்சலைத் தரும்.

    உண்மையில் என் நண்பரின் மனைவிக்கு மாங்கல்ய தோஷம் உள்ளது. ஆனாலும் அது தன் தோஷ வீரியத்தைக் காட்டியதால்தான் மாங்கல்யம் களவு போனது.

    அவருக்கு 7 ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய் அமர்ந்து தோஷத்தைத் தந்தது. களவு போனதால் தோஷம் நீங்கியது.

    களவு போகாவிட்டால் என்ன நடந்திருக்கும்?

    இங்கே சில விளக்கங்கள் சொல்லியாகவேண்டும்.

    சூரியன், செவ்வாய் சேர்க்கை என்பது 12 ராசிகளில் அமர்ந்திருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் வேலை செய்யும்.

    நான் பெரிய விளக்கம் தந்து உங்களை குழப்பப்போவதில்லை,

    1) இப்படி மாங்கல்யம் களவு போவது

    2) மாங்கல்யத்தில் பின்னம் ஏற்பட்டு அதை சரி செய்து மீண்டும் அணிவது( எப்படியும் ஒருமுறையாவது கழட்டி மாட்டவேண்டி வரும்)

    3) வேதனையோடு சொல்கிறேன், குறைந்தபட்சம் அடகு வைக்கப்படும் சூழல் உண்டாகும்.

    4) திருடர்களிடம் பறிகொடுப்பது

    5) ஏதோ ஒரு சூழ்நிலையில் வேண்டுதலுக்காக ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுப்பது.

    இப்படி பல வகையிலும் தோஷம் தன் வீரியத்தைக்காட்டும்.

    ஆனால் ஒருபோதும் யாருடைய விதியையும் முடித்துவிடாது.

    விதி முடியாமல் யாரும் இறைவனை அடைய முடியாது.

    எனவே மாங்கல்யதோஷம் என பெரிய பரிகாரங்கள் செய்ய வேண்டியதில்லை என்பதே என் கருத்து.

    அப்படியானால் என்ன மாதிரியான பரிகாரங்கள் செய்யலாம்?

    திருமணம் முடிந்து 3 வது மாதத்தில் தாலி கோர்த்தல் என்ற வைபவம் நடக்கும் அல்லவா! அப்போது அந்த திருமாங்கல்யத்தை ஏதாவது அம்மன் ஆலயத்தில் செலுத்திவிட்டு, புதிதாக மாங்கல்யம் செய்து அணிந்து கொள்ளலாம்.

    ஏழைப்பெண்ணுக்கு அவர்களின் திருமணத்திற்கு உங்கள் செலவில் மாங்கல்யம் செய்து தாருங்கள், மிகப்பெரிய புண்ணியம் உண்டாகும்,

    தர்மம் செய்வது (யாருக்கும் தெரியாமல்) எப்படிப்பட்ட தோஷத்தையும் இல்லாமல் செய்துவிடும்.

    இனி அடுத்த பதிவுகளில் இன்னும் பல விஷயங்களைப் பார்ப்போம்.

    இந்த புனர்பூ தோஷம் வேறு ஏதாவது பாதிப்பைத் தருமா?

    அதையும் பார்க்கலாம்.

    - தெளிவோம்
    நன்றி :- தி இந்து
     
  9. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    புனர்பூ தோஷங்களைப் பார்த்தோம். அதற்கான பரிகாரங்களைப் பார்க்கலாம்.

    புனர்பூ தோஷம் என்பது சனிபகவான் மற்றும் சந்திரபகவான் இணைவதால் ஏற்படும் தோஷம் என்பதை நாம் அறிவோம்.

    சனிபகவான் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை ஆண்டுகள் ஆகும்.

    அதேசமயம் சந்திரன் ஒரு ராசியைக் கடக்க வெறும் இரண்டே கால் நாட்கள் மட்டுமே ஆகும்.

    சனி, ஈஸ்வரன் பட்டம் பெற்று “சனீஸ்வரன்” என்று அழைக்கப்படுகிறார் என்ற கதை விளக்கம் உண்டு, ஆனால் நான் அதற்குள் செல்லவில்லை,

    உண்மையில் “சனை” என்றால் மெதுவாக என்று அர்த்தம்,

    “சரம்” என்றால் வேகம் என்று பொருள். நகருதல் என்றும் அர்த்தம்.

    எனவே இவரை “சனைச்சரம்” என்றுதான் அழைக்கப்பட்டார், இதுவே மருவி சனீஸ்வரன் என்று நிலைத்தது.

    சனைச்சரம் என்றால் மெதுவாக நகர்பவர் என அர்த்தம் ஆகும்.

    ஆனால் சந்திரன் “ மன காரகன்” மனம் என்பது எவ்வளவு வேகமானது என்பதை நான் சொல்லத்தேவையில்லை. நீங்களே அறிந்ததுதான்.

    இப்போது உங்களுக்கேப் புரிந்திருக்கும்,

    இரட்டை மாட்டு வண்டியில் ஒருமாடு வேகமானதாகவும், மற்றொரு மாடு மெதுவானதாகவும் இருந்தால் வேலைக்கு ஆகுமா?

    அதுபோலத்தான் இந்தக் கிரக இணைவு.

    மனம், எண்ணம் வேகமாக இருக்கும், ஆனால் உடல் ஒத்துழைக்காது.

    அதாவது இரவு படுப்பதற்க்குமுன் “நாளைக்கு நேரமா எந்திரிக்கனும். 7 மணிக்கெல்லாம் அவரை பார்த்துவிட்டு, 9 மணிக்கெல்லாம் EB பில் கட்டிட்டு, 10 மணிக்கு ஆபீஸ் போயிரனும்”

    என்றெல்லாம் பிளான்பண்ணி , காலையில எந்திரிக்கிறதே 8 மணியாத்தான் இருக்கும். மொத்த பிளானும் காலி!

    இதுதான் ஐயா நிதர்சனம். இதைப் பரிகாரங்களால் மட்டுமே நிவர்த்தி செய்ய முடியாது.

    உங்கள் பழக்கவழக்கத்தால் மட்டுமே மாற்றியமைக்க முடியும்.

    மிக முக்கியமாக “ தியானம் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தும்.”

    என்னால் தியானத்தில் அமர முடியவில்லை, அமர்ந்தாலும் ஏதேதோ கற்பனைகள் ஓடுகிறது, என்பவர்களுக்கு...

    “தியானத்தில் அமர்ந்து ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரிக்கிறீர்களா? ஆம் என்றால் இனி எந்த மந்திர உச்சாடனமும் செய்யாதீர்கள்.

    “ கண்களை மூடி உங்கள் கவனத்தை உங்கள் மூக்கு நுனியை மட்டும் கவனியுங்கள், அதாவது எந்த மூக்கின் வழியாக (வலதா,இடதா) சுவாசம் நடைபெறுகிறது என்பதை மட்டும் கவனியுங்கள்”

    சத்தியம் செய்கிறேன்... அதிகபட்சம் 15 நாட்களில் உங்கள் தியானத்தில் எந்தக் கற்பனைகளும், எண்ணங்களும் மனம் அலைபாயும் செயல்களும் வரவே வராது.

    மனம் ஒருமுகப்படும். இப்போது உங்களுக்குப் பிடித்த மந்திரத்தை மனதால் உச்சாடனம் செய்யுங்கள். அனைத்தும் உங்கள் வசப்படும்.

    இதுவே சித்தர்கள் சொன்ன ரகசியம்.

    சரி இப்போது ஆலயப் பரிகாரங்களை பார்க்கலாம்,

    திருமலையில் உள்ள சீனிவாசபெருமாள் சனி அம்சம் என கருதப்படுபவர், அதேசமயம் அந்த திருமலை சந்திர ஸ்தலம் என்று போற்றப்படுகிறது.

    எனவே வளர்பிறை காலத்தில் திங்கட்கிழமை அன்று இரவு முழுவதும், அல்லது பௌர்ணமி நாளில் இரவு முழுவதும் திறந்தவெளியில் இருந்து பெருமாளை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்,

    அதன் பிறகு ஏற்படும் அற்புதத்தைப் பாருங்கள்.

    திருமலையில் ஶ்ரீவராகசாமி ஆலயம் திருக்குளத்திற்கு அருகே உள்ளது. அவரையும் தரிசித்து விட்டு, குளத்தில் உள்ள மூன்றாவது படியில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்யுங்கள், நீங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்,

    ஏன் அந்த படி?

    அங்கே கொங்கணர் சித்தர் உள்ளார். ரசவாதம் அறிந்தவர். மக்கள் வறுமையில்லாமல் இருக்கவேண்டும் என்று ஒரு மலையையே தங்கமாக மாற்ற முயன்றவர். அந்த முயற்சி ஆரம்பிக்கும் போதே சிவனால் தடுக்கப்பட்டு திருமலைக்கு அனுப்பப்பட்டவர். அவர் அங்கே ஜீவசமாதி ஆனவர்.

    இப்போது புரிகிறதா! ஏன் திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படுகிறதென்று?

    சரி திருப்பதி சென்று வருகிறோம். வேறு ஏதாவது பரிகாரம் உண்டா? உண்டு.

    சனி சந்திரன் சேர்க்கை என்பது மன உறுதியைக் குலைக்கும், எனவே காலை சூரியோதயத்தில் அதிலும் அருணோதயத்தில்( சூரிய பகவானின் தேரோட்டி அருணன் ஆவார், சூரிய உதயத்திற்கு முன்பு தேரோட்டியான அருணனே முதலில் தோன்றுவார்) ஆதித்யஹிருதயம் படிக்கவோ அல்லது கேட்கவோ செய்யுங்கள். அது மன உறுதியைக் கொடுக்கும். எடுக்கின்ற முயற்சியில் தெளிவும் வெற்றியும் கிடைக்கும்.

    ஶ்ரீஅனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபட மன உறுதி கிடைக்கும்.

    சக்திவடிவான அம்மன் ஆலயங்களில் தொடர்ந்து வழிபாடு செய்ய நல்ல பலன் கிடைக்கும்,

    ஐயப்பனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட நல்லது நடக்கும்.

    எல்லை மற்றும் காவல் தெய்வங்களான அதிலும் பெண் தெய்வங்களை வழிபட அற்புதமானப் பலன்கள் கிடைக்கும் ( திரௌபதி அம்மன், மாரியம்மன், மாகாளி போன்ற தெய்வங்கள்).

    இன்னும் சில..

    மாற்றுதிறானாளிகளுக்கு முடிந்தவரை உதவுங்கள். வசதி இருந்தால் மூன்றுசக்கர வாகனம், ஊன்றுகோல், இன்னபிற வசதிகளை செய்து தாருங்கள்.

    ஆன்மிக நடைப்பயணம் செல்பவர்களுக்கு வசதிகளைச் செய்து தாருங்கள். தண்ணீர் பந்தல், நீர்மோர் வழங்குதல் போன்ற தானங்களைச் செய்யுங்கள்; வாழ்க்கை சிறப்பாகும்.

    இன்னும் சில தோஷங்கள், பரிகாரங்களை அடுத்தடுத்து பார்ப்போம்.

    - தெளிவோம்
    நன்றி :- தி இந்து
     
  10. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    கடந்த அத்தியாயத்தில், பரிகாரங்களைப் பார்த்தோம். பூட்டுக்குச் சாவி கையில் இருந்தால்தானே தைரியமாகப் பூட்டுவோம். அதனால், பரிகாரங்களை முதலில் உங்களுக்கு எடுத்துரைத்தேன். இப்போது பரிகாரம் தெரிந்துவிட்டது அல்லவா. புனர்பூ தொடர்பான தோஷங்களையும் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும் பார்ப்போம்.

    ‘விபத்து நடக்கும் இடம்’ என்ற அறிவிப்புப் பலகை, சாலையோரத்தில் இருக்கும், பார்த்திருக்கிறோம்தானே. அப்படித்தான் இதுவும்!


    வாருங்கள்... தோஷங்களையும் பிரச்சினைகளையும் பார்க்கலாம்.

    புனர்பூ தோஷமானது திருமணத்தில் எப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தருகிறது என்று பார்த்தோம். மேலும் சிலரது திருமணங்களில் என்னவெல்லாம் நடந்தது என பார்ப்போம்,

    இப்போதும் என் நண்பரின் திருமணத்தில் நடந்த ஒரு விஷயத்தைத்தான் சொல்லப் போகிறேன்.

    என் நண்பரின் திருமணத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இனிதாக நடந்து மாங்கல்யமும் கட்டி முடித்தார். ஆனால் மாங்கல்யத்தை மணமாலைக்கு உள்ளே விட்டு கட்டியதால், மாலைமாற்றும் வைபவத்திற்கு மாலையை எடுக்க முற்படும்போதுதான் இந்த விபரம் தெரிய வந்தது,

    மாலையை எடுத்தால் மாங்கல்யமும் சேர்ந்தே வரும், என்ன செய்வது கட்டிய மாங்கல்யத்தை பிரிக்கக்கூடாது,

    எனவே மாலையைப் பிரித்து மீண்டும் கட்டிவிட்டு இந்த மாலைமாற்றும் வைபவத்தைச் செய்தார்கள்,

    இதில் கவனிக்கப்படவேண்டியது, எத்தனை விழிப்புடன் இருந்தாலும் கிரகங்கள் தன் கடமையை செய்யத் தவறுவதே இல்லை என்பதுதான்.

    ஒரு பதட்டத்தை, குழப்பத்தை ஏற்படுத்துவதுதான் புனர்பூ தோஷத்தின் மகிமை.

    இன்னும் ஒரு சம்பவம் சொல்கிறேன்.

    என் குடும்ப நண்பரின் மகளுக்கு நடந்த திருமணம் பற்றியது இது.

    அந்தப் பெண் ஒருவரைக் காதலித்தார். ஆனால் என் நண்பர் ஏற்றுக்கொள்ளவில்லை.

    என்னிடம் ஆலோசனை கேட்டார். நான் இந்த புனர்பூ தோஷம் உங்கள் மகளுக்கு இருப்பதாலும், அவர் ஜாதகப்படி காதல் மணம்தான் நடக்கும் என்று சொன்னேன்,

    ஆனால் அவர் இது கௌரவ பிரச்சினை எனக் கூறி, மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து பத்திரிகையும் அடித்து விட்டார்.

    ஆனால் அதன் பிறகு மாப்பிள்ளை வீட்டார் நடந்து கொண்ட விதம் சரியாக இல்லாததால் திருமணத்தை நிறுத்திவிட்டார்,

    இப்போதும் என்னிடம் ஆலோசனை கேட்டவரிடம் காதலித்த பையனையே மணம் முடித்து விடுங்கள் என்றேன். ஆனால், கேட்கும் மனநிலையில் அவர் இல்லை.

    அடுத்ததாக இன்னொரு வரனை நிச்சயம் செய்து மீண்டும் பத்திரிகை அடிக்கப்பட்டது, முதல் பத்திரிகையை, குலதெய்வத்தின் சந்நிதியில் வைக்க சொந்த ஊர் சென்றார்.

    அப்போது மாப்பிள்ளை போன் செய்து ஏதோ கேட்க, குலதெய்வத்திற்கு பத்திரிக்கை வைக்காமல் அப்போதே திருமணத்தை நிறுத்திவிட்டார்.

    இப்போது வாடிவதங்கி என்னிடம் வந்தவர், காதலித்த பையனையே பேசி முடிக்கிறேன். இருவர் ஜாதகமும் நன்றாக உள்ளதா எனக்கேட்டார். அ ற்புதமாக உள்ளது , சேர்த்து வையுங்கள் என பிரச்சினையை முடித்து வைத்தேன்.

    யோசித்துப் பாருங்கள்... அவரின் வறட்டுப் பிடிவாதம் எவ்வளவு செலவு, அலைச்சல், மனநிம்மதி என பாதிக்கப்பட்டது. எப்படியெல்லாம் உளைச்சலுக்கு ஆளானார்.

    என்னதான் முயற்சி செய்தாலும் கிரகங்களின் வீரியத்தைத் தடுக்க முடியாது என்பதை உணர்ந்தாலே, பரிகாரம் என்ற பெயரில் செலவு செய்வது வீண் என்பதை உணர்ந்துகொள்வோம். அப்படி நீங்கள் உணர்ந்தாலே, இந்தத் தொடரின் வெற்றி என மகிழ்வேன்.

    பிரச்சினைகளைக் கண்டு பயந்து பரிகாரம் செய்கிறேன் என்று ஒளிவதை விட இறைவனின் துணையோடு அதை எதிர்கொண்டு கடந்து போவதே உண்மையான பரிகாரம்!

    சரி இப்போது நாம் , “வாழ்க்கையில் என்ன செய்யும் இந்த புனர்பூ தோஷம்” என்பதை பார்க்கலாம்,

    ஒரு நினைவூட்டல்:- ஒருவர் ஜாதகத்தில் சனிபகவானும், சந்திரபகவானும் சேர்ந்திருந்தாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும், அவர் வீட்டில் இவர், இவர் வீட்டில் அவர் என பரிவர்த்தனை அடைந்தாலும் இந்த புனர்பூ தோஷம் வேலை செய்யும்.

    இது திருமணத்தில் தரும் பாதிப்பைப் பார்த்து விட்டோம். வேறு என்ன செய்யும்? அதையும் பார்க்கலாம்.

    இந்த தோஷம் இருப்பவர்கள், எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுக்கத் திணறுவார்கள், முடிவெடுத்த பின் செயல்படுத்தவும் தயங்குவார்கள்.

    இதையெல்லாம் தாண்டி ... எடுத்த முடிவு.... பாவம் முடிவுக்கே வராது இழுத்தடிக்கும். அதாவது நடைபெறாத முயற்சியாகவே இருக்கும்.

    இன்னும் என்ன? குழப்பவாதி, தானும் குழம்பி, மற்றவரையும் குழப்பிவிடுபவர், முடிவெடுக்க தயங்குபவர், தவறான முடிவுகளை எடுப்பவர் என்றெல்லாம் பெயர் சம்பாதிக்க நேரிடும்.

    அலைச்சல் மிகுந்த வேலை செய்பவர், (மார்க்கெட்டிங்) டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட் தொழில் செய்பவர், ஓட்டுநர், உணவுத்தொழில்,

    அடிக்கடி வேலை மாறிக்கொண்டே இருப்பவர்,

    அதாவது நிலையாக ஒரே இடத்தில் வேலையில் இருக்கமாட்டார்,

    எந்த வேலை அல்லது தொழில் செய்தாலும் மனநிறைவு இல்லாதவர், அடிக்கடி கன்னத்தில் கை வைத்துக்கொள்பவர்,

    ஜாதகம் பலமாக இருந்தால் நாடுநாடாக சுற்றி பொருள் ஈட்டுபவர்,

    மனசஞ்சலம் உடையவர், ஜாதகம் பலவீனமாக இருந்தால் மனநல பாதிப்பை அடைவார்,

    இருளுக்கு பயப்படுவார், அமானுஷ்யத்தில் நம்பிக்கை உடையவராக இருப்பார்.

    மதுப் பழக்கம் ஏற்பட்டால் மீளமுடியாதவர்.

    இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்.

    பகல் தூக்கம் விரும்புபவர்.

    இளமையிலேயே நரைமுடி ஏற்படும், உடலில் நீர்ச்சத்து குறைபாடு உடையவர். அடிக்கடி வாயுதொல்லை ஏற்படும்.

    இவற்றில் இருந்து விடுபடுவதற்கு, தானம் செய்யுங்கள். திருமலை திருப்பதிக்குச் சென்று தரிசியுங்கள். தியானம் பழகுங்கள்.

    தண்ணீர்ப் பந்தல், மோர்ப்பந்தல் அமைத்து எல்லோருக்கும் வழங்குங்கள் என்று கடந்த அத்தியாயத்தில் சொல்லியிருந்தேன்.

    சரி... அடுத்த அத்தியாயத்தில், இன்னும் சில தோஷங்கள் குறித்தும் பரிகாரங்கள் குறித்தும் சொல்கிறேன்!

    -தெளிவோம்

    நன்றி :- தி இந்து
     

Share This Page