கண்ணனவன் பேரைச் சொல்லக் கல்லிதயம் கனியும் மெல்ல மன்னனவன் புகழைச் சொல்ல மன்பதைகள் மயங்கும் மெல்ல கண்ணன் சொன்ன கீதையதைப் பாவையென்று கோதை சொல்ல தத்துவங்கள் புரியும் மெல்ல உண்மையிது பொய்மை அல்ல ! தேவகியின் திருவயிற்றில் தேவனொரு பாலனென்று தன்னையேக் கருவடைத்தான் சிறையில் உருவெடுத்தான் அரவுக்குடைப் பிடிக்க நள்ளிரவில் சிறைவிடுத்தான் தீமையை அழித்திடவே கண்ணன் அன்று பிறப்பெடுத்தான் ! யாதவர்கள் மகிழ்ந்திடவே நந்தனவன் நாயகியைத் தந்தனதுத் தாயெனவேக் கண்ணனும் தேர்ந்தெடுத்தான் விந்தனந்த கோவிந்தனை வந்துபலர்த் துதித்திடவே விந்தைகளைக் காட்டுகிறான் சிந்தை நிலை நாட்டுகிறான் யமுனா நதிக்கரையில் நிலவின் தணியிரவில் பொழியும் குழலோசை குழையும் உயிரோசை இராசலீலைக் கண்டபடி மோட்சநிலை அருளுகிறான் நேசிப்பவர் நெஞ்சினிலேத் தன்னைத் தான் நிரப்புகிறான் கோகுலத்தில் பசுக்களெல்லாம் கோபாலன் கீழ்ப்பணியும் வியாகுலத்தைப் போக்குபவன் பாதங்களில் சரணடையும் பாலகர்கள் கூட்டமுண்டு பாடலுடன் ஆடலுண்டு காவலுக்குக் கண்ணனுண்டு கவலைகள் எதற்கு அங்கு ? பாலலீலை நடத்துகின்றான் மோகவலைப் பின்னுகின்றான் நாவினிக்கப் பேசிடுவான் கோபியரை மயக்கிடுவான் வெண்ணையதைத் திருடியுண்பான் பெண்களிடம் பொய்யுரைப்பான் குறும்புகள் புரிந்திடுவான் குழந்தை போல் நடித்திடுவான் அரக்கரை மாய்த்திடுவான் ஆநிரை மேய்த்திடுவான் இன்பங்கள் துய்த்திடுவான் ஈரேழுலகம் காட்டிடுவான் உண்மைக்குத் துணையிருப்பான் ஊழ்வினைப் போக்கிடுவான் என்றைக்கும் நிலைத்திருப்பான் ஏக்கம் நீக்கி சுகமருள்வான் ஐயமில்லை அவனிருக்க ஒல்லை தொல்லையேதுமில்லை ஓடிவந்துக் காத்திடுவான் ஒளடதமாய்ப் பிணியறுப்பான் கண்ணனவன் தோழியென்று என்னையும் ஏற்றிடுவான் என்னுயிரில் கலந்துவிட்டான் கண்ணன் எந்தன் தலைவனன்றோ ! கண்ணனெனும் கள்வனையேக் கண்களால் தேடுவமே கள்ளவிழிப் பார்வையைத்தான் பெண்களும் நாடுவமே சின்னமணிச் சதங்கையொலி உங்களில்லம் நிரப்புகையில் எங்களுக்கும் சொல்லிடுங்கள் கண்ணன் வந்த சேதியினை ! மனவாசல் திறந்தபடிக் காத்திருக்கிறேன் கண்ணா எனதாசை நிறைவேற உட்புகுந்து வா கண்ணா வெண்ணெயென மனமுருகும் பெண்மையெனைப் பார்க் கண்ணா உண்மையினை உணர்வித்து என்னை நீயாள் கண்ணா ! எதிர்வரும் ஜன்மாஷ்டமிக்கு என் மனம்கனிந்த வாழ்த்துகள் ! Regards, Pavithra
@PavithraS பவி தங்கள் கவிதையில் கண்ணன் உருவம் கண்டேன் .வெண்ணைய் போல் உருகும் மனதை கண்டு ஓடோடி வருவான் அந்த கள்ளன் கண்ணன் .மிக அழகான கவிதை.வாழ்த்துக்களுக்கு நன்றி மா .தங்களுக்கும் என் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
பவித்ரா கண்ணன் வரும் சேதி கேட்டேன் பரவசமா அவன் வரும் வழி நோக்கினேன் சதங்கையொலி போல் சிரிப்பு கேட்டேன் சுற்றும் முற்றும் நான் நோக்கினேன் என்னுள்ளிருந்து கேட்டது ஒரு குரல் அடி பெண்ணே உன் உள்ளத்தில் நான் இருக்க ஊர் எல்லாம் தேடுகிறாயே உன்னுள்ளே நான் என்னுள்ளே நீ இதை என்று உணர்வாயோ என உரைத்தான் என்னுயிர் கண்ணன்
உங்கள் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி பெரியம்மா ! கண்ணனை இனித் தாங்கள் வேறெங்கும் தேடவேண்டாம். அவன் உங்களுக்குள்ளேயே இருக்கிறான்.அண்டவெளியிலிருந்த கண்ணன் உங்கள் மனவெளியில் உறைந்துவிட்ட சேதியினை மிக அழகாக உரைத்துவிட்டீர்கள்,பெரியம்மா. மிக்க மகிழ்ச்சி !