4) ஆண்டாள் பாடல் (மார்கழி நோன்பிருக்க வளம் செழிக்கும் வகையில் மழைக்காக வருணனை வேண்டி) ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி, ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியம் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து, தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். பாசுரப் பொருளுரை " மழை பொழிவதற்குக் காரணமாக இருக்கும் வருணனே ! நாங்கள் இந்த மார்கழி நோன்பு நோற்பதற்கு நீராடி மகிழ நீ செய்ய வேண்டியது என்னவென்று கேள். மாதம் பொழிய வேண்டிய மூன்று முறை தவறாது நீ மழை பொழிய வேண்டும். அதற்கு முதலில் கடலில் நுழைந்து ஆழத்தில் சென்று நீரை முகர்ந்து கொண்டு பெரும் சத்தத்தோடு மேலே வானத்தை அடைந்து, காலங்களின் தொடக்கத்திலும் முடிவிலும் இருப்பவனாகிய கருநிறக் கண்ணனுடைய வண்ணத்தைப் பெற்று (கருமேகமாய்), அழகும் வலிமையையும் பொருந்தியவனான தாமரைப் பூவினை நாபியில் வைத்துள்ள இறைவனின் வலக்கையில் இருக்கும் ஒளி பொருந்திய ஸுதர்ஸனச் சக்கரம் போல் மின்னல் வெட்டி, இறைவனது இடக்கையில் இருக்கும் பாஞ்சசன்யம் எனும் சங்கின் ஒலியைப் போல் இடி இடித்து, பரமனுடைய கையிலிருக்கும் ஸார்ங்கம் எனும் வில்லில் இருந்து நீங்கி வரும் அம்புகளை ஒத்து பூமியெங்கும் தாமதமின்றி மழைச் சரம் பொழிய வேண்டும் !" பாசுரக் குறிப்பு இப்பாசுரத்தில் , இறைவன் திருவடியை நமக்குக் காட்டித் தர வல்லவர்களான நல் ஆச்சார்யர்களின் பெருமைகள் பற்றிக் கூறப்படுகிறது.சரணாகத நீராடலுக்கு ஞானமழை பொழிய,ஆண்டாள் ஆச்சாரியர்களை வேண்டுகிறாள். அவதார பஞ்சகத்தின் கீழ் ஊழி முதல்வன்,- பரமாத்ம நிலை, பற்பநாபன் கையில் ஆழி, வலம்புரி, சார்ங்கம்- வ்யூஹ நிலை இரண்டும் குறிக்கப்படுகின்றன. சுவையான செய்தி: ஆண்டாளின் தந்தையார் பெரியாழ்வார் தன் பாசுரத்தில் 10 முறை தமிழ் மொழியின் சிறப்பு மிகுந்த எழுத்தான , 'ழ'கரத்தைப் பயன்படுத்தியுள்ளார். தந்தையையே தனக்கு ஆச்சார்யனாகவும் பெற்ற மகள் ஆண்டாளோ, குருவை மிஞ்சிய சிஷ்யையாக இப்பாசுரத்தில் 11 முறை 'ழ'கரத்தைப் பயன்படுத்தியிருக்கிறாள் ! பெரியாழ்வார் பாசுரம் : (ஆறாம் திருமொழி , நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 285 ஆம் பாடல்) பலஸ்ருதியாக அமைந்த இப்பாசுரத்தில் பாடலாசிரியரின் பெருமிதச் சுவை உண்டு .(தற்பெருமையல்ல) குழலி ருண்டுசுருண் டேறிய குஞ்சிக் கோவிந்த னுடைய கோமள வாயில் குழல்மு ழைஞ்சுகளி னூடு குமிழ்த்துக் கொழித்தி ழிந்தஅமு தப்புனல் தன்னை குழல்முழ வம்விளம் பும்புது வைக்கோன் விட்டு சித்தன் விரித்ததமிழ் வல்லார் குழலை வென்றகுளிர் வாயின ராகிச் சாது கோட்டியுள் கொள்ளப்படு வாரே. "கருத்துக் சுருண்டிருக்கும் கேசத்தையுடைய கண்ணன் அழகுடைய தன் வாயில் வைத்து ஊதும் குழலில் ஏற்படும் நீர்க்குமிழ்கள் உடைந்து (குழலூதும் போது வழியும் கண்ணன் உமிழ் நீர் ) வெளிவருவது எப்படி அமுதத்திற்கு ஒப்போ, அது போலவே திருவில்லிபுத்தூரின் தலைவனாகிய இந்த விஷ்ணுசித்தன் செய்த இப்பாசுரங்களைப் படிப்பவர்கள், , கண்ணன் குழலோசையை விஞ்சும் வாக்கு வன்மை பெற்று, இறையடியார் குழுவில் மிகவும் மதிக்கப்படுவர்." உபரிச் செய்தி - இப்பாசுரத்தின் மூலம் வைணவ குரு பரம்பரைப் பெருமையை, வைணவ நெறியாளர்கள் கொண்டாடுகிறார்கள்.காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அன்னங்கராச்சார் ஸ்வாமிகள் விளக்கம். இது சற்றே சமயச் சாயம் அதிகம் பூசப்பட்டாலும், சுவை கருதிக் குறிப்பிடுகிறேன், உள்நோக்கில்லை. "நம்மாழ்வார் என்ற கருமேகம் ஆனவர்,லக்ஷ்மி நாராயணர்களென்னும் பாற்கடலில் ஆழ மூழ்கி, அவர்களது கருணையென்னும் நீரை முகர்ந்தெடுத்து, நாதமுனிகளென்னும் மேருவின் மேல் பொழிந்து, அம்மலையினின்று உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி என்னும் ஊற்றுகள் வழிந்து, ஆளவந்தாரென்னும் ஆற்றில் கலந்து, இராமானுஜரென்னும் பெரும் ஏரியில் இறங்கி, 74 தீர்த்தங்களாக ஆங்காங்கேப் பொருந்தி (74 வைணவ ஆச்சார்யர்கள், ஸிம்மஹஸனாதிபதிகள் ) இறையடியார்களுக்கு, சீவாத்மாக்களுக்கு, ஸம்ஸாரிகளுக்கு இறைஞான நீரைப் பருகத் தருகிறார்கள்".
பதார்த்தம் -- சொற்பொருள் பொங்குப் பெருங்கடல் போல் திரண்டு, எங்கும் செழிப்புறவே மழை பெய்து, எங்கள் குறை தீர்க்கும் வருணோனே ! தங்கு தடையின்றி சிறுக்காது -மண் எங்கும் பெரிதாகப் பொழிந்திடக்- கடல் முங்கி அடியாழம் வரைச் சென்று, சிங்கமெனப் பாய்ந்து நீர் நுகர்ந்து, அங்கம் கருத்தக் கண்ணன் போல், ஓங்கி மேற்சென்று விண்ணில் நின்று, பங்கய நாபன் திண்ணழகுத் தோளில் தங்கும் சக்கரமாய் மேனி மின்னி, சங்காம் பாஞ்சசன்யம் அது போலே, எங்கும் அதிர இடியொலி செய்து, பங்கமில்லா அவன் கைவில் தன்னை நீங்கி வருகின்ற சரங்களைப் போல், எங்கள் விரதம் யாம் குறையின்றி, மங்கா இன்பமுடன் நடத்த -மண்ணில் எங்கும் செல்வங்கள் பெருகும் வகை, பொங்கிப் பெய்வாய் நீ பெருமழையே ! ஆழி மழைக்கண்ணா - கடல் போன்று பெரு மழை பொழியும் வருணன்,மழைக்கடவுள்.வைணவ நெறியைச் சார்ந்தவர்கள் நாராயணனைத் தவிர்த்து வேறெந்த தேவதைகளையும் தொழ விரும்பார்கள் என்பதைக் குறிக்கும் விதத்தில் தான், மழைக்குரிய தேவனான வருணனை வர்ணிக்கும் போதும், ஆழி மழைக் கண்ணா என்று கண்ண நாமத்தைச் சேர்த்தே ஆண்டாள் பாடியிருக்கிறாள். அவளுக்கு எங்கும் கண்ணன் நாமம், எதிலும் கண்ணன் உருவமே ! அது மட்டுமின்றி, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளால் எனும் அனைத்திற்கும் காரணமானவனான அந்த ஆதிமூலனாகிய பரந்தாமன் தன்னுடைய பிரதிநிதிகளாகவே , படைத்தல் தொழிலை பிரம்மாவிடத்தும் ,அழித்தலை உருத்திரனிடத்தும் தந்தாற்போல, மண்ணுலகிலெங்கும் மழை பொழிந்து, வளம் சிறக்கச் செய்யும் பொறுப்பை வருணனுக்குக் கொடுத்தான் என்பதையும் குறிப்பாலுணர்த்துகிறாள். ஒன்று நீ கைகரவேல் - உயிர்கள் எல்லாம் செழித்து வாழும்படி, குறைவிலாது மழைபொழிய வேண்டும் என வருணனை வேண்டுதல்.கைகரவுதல்- பின் வாங்குதல், நிலையினின்று தவறுதல் .முந்தைய பாசுரத்தில் மும்மாரி என்றாளல்லவா?அதில் ஒன்றும் குறைக்காமல் பொழிய வருணனை வேண்டுகிறாள். ஆர்த்தேறி - மகிழ்ச்சியைக் குறிக்கும் ஆரவாரம் செய்து விண்ணின் மேலேறி. எங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருள் தனது முகத்தைக் காட்டாமல், இதை நானே செய்தேனென்று விளம்பரப்படுத்தாமல் அருளும். ஆனால் கருமுகில்களோ,நாங்கள் தான் மண் வளத்தின் காரணமென்று உரைக்குமாப்போலே ,யாவரும் காணுமாறு விண்ணிலெங்கும் பரவி,மின்னல் வெட்டி இடி முழங்கி ,ஆரவாரித்து மழை பொழியும். இங்கேயும் மறைந்திருந்தருளும் இறைத்தன்மையை உயர்த்திப் பிடிக்கிறாள், ஆண்டாள் ! ஊழிமுதல்வனுருவம் போல் மெய்கறுத்து- என்னதான் அந்தக் கண்ணனுடைய திருமேனியைப் போல் மழை மேகங்களின் மேனி கருமை நிறமானாலும், அந்தப் பரந்தாமனது கருணை மழையைப் போல அவற்றால் பொழிய இயலாது என்று குறிப்பாலுணர்த்துகிறாள், ஆண்டாள் ! பாழி அம் தோள் - வலிமையும் அழகும் பொருந்திய தோள் ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,தாழாதே சார்ங்கம் - சக்கரம்- ஸுதர்சனம் , சங்கு- பாஞ்சஜன்யம், வில்- சார்ங்கம். ஊழி முதல்வனாக இருக்கக்கூடிய பத்மநாபன் என்னும் திருநாமம் பெற்ற அந்த இறைவனின் கையிலுள்ள அரிய ஆயுதங்களின் பெயர்களை இப்பாசுரத்தில் குறித்தாள். திருமாலின் சக்கரத்தைப்போல மின்னல் வெட்டி, சங்கினைப் போல இடி முழங்கி,வில்லிலிருந்து இடைவிடாது நீங்கி வரும் அம்புகளைப்போல மழை கொட்டிப் பெய்ய வேண்டுமென விண்ணப்பம் செய்கிறாள். நாங்களும் மார்கழி நீராட - மார்கழிப் பாவை நோன்பிற்கு நீராடும் வகையில், பெருமழை பெய்து அருள வேண்டிப் பாடுகிறாள் வாழ உலகினில்- நீரின்றி அமையாது உலகு, மழையின்றி இருக்காது நீர் , எனவே மழையை வேண்டுகிறாள். மூன்றாம் பாசுரத்தில் , மார்கழி நோன்பிருந்தால் நாட்டில் செல்வவளம் நிறையும் என்று அறிவித்துவிட்டாளல்லவா ? அத்தகைய செல்வநிலை ஏற்பட வேண்டுமெனில், அதற்கு மழை நன்றாகப் பொழிந்தால் தானே இயலும் ? எனவே தான் தனது வாக்கை மெய்ப்பிக்க வேண்டி மழை மேகங்களையும், வருணனையும் பிரார்த்திக்கிறாள்.
தத்வார்த்தம் ---- உட்பொருள் மறையோதி இறுதி வரை ஆராய்ந்து, குறை ஒன்றுமில்லாமல் அதில் காணும், இறைஞானம் தெளிவாகத் தாம் பெற்று, அறியாத அடியார் பால் இரக்கமுற்று, குறையாத கருணையுடன் அருள் செய்து, மறைத்துக் கிடக்கும் மூன்று மந்திரமும், இறையடியும் யாம் அடைய வழிகாட்டும், ஏறொத்துத் திகழும் பெரும் அறிஞர்காள் ! இறையின் தன்மை தனை ஒத்திருக்கும் நிறைந்த கருணையுடன் மனம் வைத்துக், கறையிலா ஞானத்தின் பேரொளி காட்டி, மறை கூறுமுண்மைகள் உரத்து சொலி, இறை ஞானமதை பெருத்த மழையாக , நிறுத்தாமல் யாமுணரும் வரை பெய்து, இறையடியில் யாம் செய்யும் சரணமது, சிறப்பாக நிறைவேற அருள் செய்வீர் ! சென்ற பாசுரத்தில் ஞானப் பாலைப் பொழியும் ஆச்சார்யர்களை'வள்ளல் பெரும்பசுக்கள்' என்று குறித்த ஆண்டாள், இப்பாசுரத்தில், ஞானமழையைப் பொழியும்'ஆழிமழைக்கண்ணா' என்று குறித்தாள். ஆழிமழைக் கண்ணா -பகவத் அனுபவம் வாயிலாக பெருமழை ஒத்த ஞானத்தைக் கொண்டிருக்கும் ஆச்சார்யர்கள். ஆழி எனக் குறித்தது வேதாந்தங்கள் எனப்படும் உபநிடதங்கள் , மழையெனக் குறித்தது கருணையோடு ஆசிரியர்கள் நமக்குப் புகட்டும் மெய்ஞானம்) மழைக்கண்ணா - நீர்மை (பிறருடைய மனது புண்படாமல் நடப்பவர், உலக நடப்பு தெரிந்தவர், பண்பாளர் ) என்கிற நற்குணம் பொருந்திய நல்லாச்சார்யரின் நயன தீட்சை, அருட்பார்வையால் இறையறிவைப் புகட்டி,அறியாமையை நீக்குவார் ஆழியுட் புக்கு - வேத உபநிடதங்கள் ஆகிய பெருங்கடலில் ஆழ்ந்து, முகந்து கொடு - அவற்றை தெளிவாக கற்று, அர்த்தங்களை உணர்ந்து ஆர்த்தேறி- ஏறு - ஆண் சிங்கம் ,இங்கே கம்பீரமாக எழும் அறிவிற் சிறந்த ஆசிரியர்களைக் குறிக்கும் ஒன்று நீ கைகரவேல் -சரணாகதி செய்யும் அடியவர்களுக்கு உபதேசிக்க வேண்டிய ,இரஹஸ்யத் த்ரயத்தின் மூன்று மந்திர உபதேசத்தில் ஒன்றும் ஒழிக்காது முழுதும் அறிவுறுத்துதல் ஊழிமுதல்வ னுருவம் போல் மெய் கருத்து - கருமேனியனான பரமனை சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தியதால், ஆச்சார்யரும் பரமன் போலவே கருநிறமும், தயாள குணமும் பெற்றவராகி விடுகின்றனர். ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து- மின்னலெனக் குறித்தது ஞான ஒளி ,இடிமுழக்கம்- அந்த ஞானத்தை உரத்து அடியவர் மனதில் நன்கு பதியுமாறு, அழுத்தமாக ஆசான் உரைப்பது. வலம்புரி போல் நின்றதிர்ந்து - ஹயக்ரீவ கோஷத்தின் உருவகம் தாழாதே பெய்திடாய் - விடாது பெய்யும் மழையாவது, அடியவர்கள் சரணாகதம் எனும் தத்துவத்தை முழுதும் உணர்ந்து கொள்ளும் வரை அவருக்கு ஆசிரியர் கருணையோடு தொடர்ந்து பாதை காட்டுவது வாழ உலகினில் அடியவர்கள் வீடுபேறு பெற்று இறைப்பணியில் ஆழ்கின்றப் பேரானந்த நிலையை அடைய வழி செய்யும் வகையில், இறைஞானத்தை ஆச்சார்யர் புகட்டுதல் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்- ஆசிரியர்களே, அடியவர்களாகிய நாங்கள் இறைவனுடன் கலக்கின்ற வீடுபேற்றினை அடைய ,சரணாகதி செய்வதற்கு, மனமகிழ்ந்து வழிகாட்டி அருளுங்கள் !
பவித்ரா திருப்பாவையை மேலோட்டமாக படித்ததுண்டு .பொருள் உணர்ந்ததுண்டு .உள்ளார்ந்த பொருள் நீங்கள் தந்த இந்த பதிவுகளை படித்தே அறிந்து கொண்டேன் .
மிக்க மகிழ்ச்சி , பெரியம்மா ! இங்கே பதியும் விளக்கங்கள் முற்றும் முடிவல்ல என்பதையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்களென நம்புகிறேன். தங்களைப் போன்ற, விருப்பமுள்ள வாசகர்கள் மனதில் , மேலும் ஆன்றோர் விளக்கங்களைத் தேடிப் படித்து இன்புற வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டும் முன்னோட்ட முயற்சியே இது.என்னை ஊக்கப்படுத்தும் பின்னூட்டங்கள் மூலமாகத் தாங்கள் தெரிவிக்கும் உங்கள் அன்பிற்கும், தொடர் ஆதரவிற்கும், நன்றி ! நேரம் செலவிட்டு வாசித்து,விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி @rai !
PavithraS, A simple person like me has not delved deep into திருப்பாவை , though i read it every year. நீங்கள் ஆழ்ந்து, ஆரா ய் ந்து, அறி ந்து யெழுதுவதை படித்து தெரிந்துக் கொள்ள ஆர்வம் இருப்பினும் ஆக்கப்பூர்வமா க பங்கெடுக்க இயலவில்லை. Your efforts to explain the word/ phrase /sentence wise meanings & the cross references you cite are highly appreciable as it will be useful to people who are interested & no doubt to Tamil scholars .
உங்கள் நேரத்தை செலவிட்டு இத்தொடர்ப் பதிவைப் படித்து வருவதற்கு நன்றி ! இதனால் உங்களுக்குத் திருப்பாவையில் இன்னும் ஆர்வம் மேலிடுமானால், அதுவே எனக்கு மகிழ்ச்சி ! Rai, Thank you for the generous appreciation But I am just an amateur. This whole effort is out of my curiosity and purpose of sharing is to help my quest to know more, from my readers.
இந்த 4ம் பாசுரத்தில் கோபிகள் பர்ஜன்ய தேவன் ( மழைக் கடவுள் ) தங்கள் எதிரே நிற்பதாகவும் அவர்களது கட்டளைக்கு அடிபணிய காத்திருப்பதாகவும் நம்புகிறார்கள்.பர்ஜன்ய தேவன் அவர்களுக்கு கண்ணனாகவே காட்சி கொடுக்கிறான். 'ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து " இந்த சொற்றொடர் விசித்திரமானது. சாதாரணமாக ஒரு தெரியாத வஸ்துவை விளக்க தெரிந்த ஒரு பொருளை உவமானமாகக் காட்டுவதே வழக்கம். ஆண்டாள் கருமேகத்து க்கு உவமானமாகக் கண்ணனின் திருமேனியைக் காட்டுகிறாள். அவளுக்கு கார் மேகத்தை விடக் கண்ணன் நெருங்கிவன் என்று காட்டுகிறாள். மேலும் இது சாதாரண மழையைப் பற்றியல்ல. ஆச்சாரியர்களின் அறிவு மழை , கருணை மழை பற்றியதாகவும். இன்னொரு விஷயம்-கருணையைப் பாபிகள், புண்ணியம் செய்தவர்கள் என்று பார்க்காமல் 'வாழ உலகினில் பெய்திடாய்'-இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தாராளமாக சமமாக வழங்கக் கூறுகிறாள் கோதை.இது ஒரு சோசியலிஸக் கருத்துக் போல் தோன்றுகிறது. இந்த பாட்டைப் பாடினாலாவது சென்னையில் மழை வருமா தெரியவில்லை.ஐப்பசி பாத்து முடிந்து விட்டது.மழையின் இல்லை. ஆழி மழைக்கு கண்ணன் அருள வேண்டும் Jayasala 42
அம்மையீர், தாங்கள் தொடர்ந்து பின்னூட்டம் வழங்கி ஊக்குவிப்பதற்கு நன்றி ! ஆம் ! முதல் பாசுரத்தில் கார்மேனி என்றவள் நான்காம் பாசுரத்தில், கண்ணன் மீதான தனது ஆழமான அன்பையும் , நெருக்கத்தையும் இப்படி உவமானம் செய்து நிறுவுகிறாள். நல்ல சிந்தனை ! மழை பொழிய கண்ணன் கட்டாயம் அருள்வான். (ஆரம்பித்துவிட்டதாக செய்தி படித்தேன் )