25) ஆண்டாள் பாடல் ( கண்ணனே தங்களது காவலன் என்று சொல்லுதல்) ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் பாசுரப் பொருளுரை "வசுதேவரின் மனைவியான தேவகி தேவியின் வயிற்றில் மைந்தனாய் அவதரித்து, பிறந்த இரவிலேயே, வசுதேவரால் ஆயர்பாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கே இடையர்குலத் தலைவன் நந்தகோபனின் மனைவியும் அன்னை யசோதையின் மகனாக, (உனக்குத் தீங்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில்!) ஒளித்து வளர்க்கப்பட்ட காலத்தில்,அதைப் பொறுக்காது, உன்னை அழித்து விட வேண்டும் என்ற உன் மாமனாம் அரக்கன் கம்சனின் தீய நோக்கத்தை பயனற்றதாக்கி, (அவ்வரக்கன் அழியும் காலம் வரை!) அவனது வயிற்றில் அச்சம் என்கிற அணையா நெருப்பாய்க் கனன்று நின்ற கண்ணபிரானே ! நாங்கள் பணிவுடனும், பக்தியுடனும் நோன்புக்கான பறை வேண்டி உனை விரும்பி வந்துள்ளோம் ! எங்கள் விருப்பத்தை நீ நிறைவேற்றுவாய் எனில், இலக்குமிக்கு ஒப்பான உன் செல்வ அழகையும், உன் ஒப்பிலாப் பெருமைகளையும் பாடி, உன் பிரிவினால் வந்த துயர் நீங்கி, பாவை நோன்பிருந்து உன்னை வணங்கி வழிபட்டு, நாங்கள் மகிழ்ச்சியுடன் இருப்போம். " பாசுரக் குறிப்பு 5 X 5 + 5 இல் ஐந்தாம் ஐந்தின் நிறைவு. இப்பாசுரத்தில் பிறப்பிறப்பற்ற இறைவனின் கிருஷ்ணாவதார இரகசியம் போற்றப்படுகின்றது. அடியவர்களைக் காக்கும் பொருட்டு தானும் ஒரு ஜீவாத்மாவைப் போன்றே கருவிலடைந்து பிறந்த பரமாத்மாவின் கருணை பேசப்படுகின்றது.இறைவனையே பெரிதெனக் கருதி, அவனைப் பணிந்து தொழும் அடியவருக்குத் (ஆயர்பாடி மக்கள்) தனது கருணையினைக் காட்டி அறவருள் செய்யும் இறைவன், உலகத்தின் சிற்றின்பங்கள் என்னும் பிடியில் சிக்கிய அரக்க இயல்புகளோடு மயங்கும் சீவர்களை(கம்சன் ) மறவருள் செய்து காக்கின்றான். இறைவனின் நற்குணங்களை நன்குணர்ந்த அடியார்கள்,இறைவனைப் போற்றிப் பாடித் துதித்து, என்றும் திருமகளைப் போலவே அவன் பணி செய்யும் பேற்றையே, அடியவர்கள் விரும்ப வேண்டும் அதுவே பிறவியென்கிற வருத்தத்தைத் தீர்த்து, மகிழ்ச்சியைத் தரும் என்பது கருத்து. இஜ்யா கால பஞ்சகத்தின் கீழ் வரும் பாசுரம். இறைவனுக்கு உளமாரச் செய்யும் ஆராதனை (மானஸீக ஆராதனம்), இறைவனது குணங்களின் பெருமையினைப் போற்றிப் பாடுதல் (அருத்தித்து வந்தோம்) என்பதைக் குறிக்கும் பாசுரம்.
பதார்த்தம் - சொற்பொருள் பெருமழை இரவிலே கம்சனின் சிறையிலே, இருளிலே ஒளியென பெற்றவர் மகிழவே, பெருந்தவம் செய்திட்ட தேவகி தேவியின் பெரியதோர் புண்ணியப் பலனென அவளது கருவிலே சிசுவெனப் பிறந்ததும் -அன்றே பெருவன்பு உடைய அடியவர் மகிழ்ந்திட, இரவொடு இரவென சிறையினை வெளிவந்து, பெருநதி யமுனையும் பணிவொடு வழிவிட, அரவொரு குடையென கோகுலம் புகுந்துமே, பெருமைகள் மறைத்தே தானொரு குழவியாய், அருந்தவ அன்னை யசோதையின் மகனென, அருமையாய் வளர்ந்தாய் ,மாயன் கண்ணனே! கருவண்ணன் நீயுமே கோகுலம் வளர்வதை, செருக்குடைக் கஞ்சன் பொறுக்கிலனாகி பல் அரக்கரை ஏவியழித்திட எண்ணவும்-அவன் கருதிய தீமைகள் பொய்த்திடும் வகையில் நெருப்பொத்த அச்சமாய் வயிற்றிலே கனன்று, அரக்கனை அழித்திட்ட நெடுமாலே, நாங்களுன் பெருமைகள் பலவும் பாடியேப் பணிந்துன் திருவடிப் பேற்றினை யாசித்து வந்தோம் ! விரும்பிடும் பறையினை எமக்கருள் செய்தால், திருமகள் தானும் விரும்புமுன் செல்வமாம், கருணையும் குணங்களும் தொழுது பணிந்து, திருவடி நிழலிலே என்றும் இருந்தெங்கள் வருத்தங்கள் தீர்ந்து மகிழ்ச்சியும் பெறுவோம் ! ஒருத்தி மகனாய் - எத்தனையோ பெண்கள் இருக்கலாம், ஆயினும் கண்ணனைத் தன் கருவில் சுமந்து ஈன்று புறம் தந்த பெருமைக்குரிய பெண் தேவகி தேவி மட்டுமே ! இராமாவதாரத்திலும் கோசலையின் மணிவயிற்றில் உதித்தாலும், அவ்விடம் தந்தை தயரதன், வசிட்டர் உதவியோடு, புத்திர காமேட்டி யாகம் செய்து மூன்று மஹாராணிகள் வயிற்றிலும் ஒவ்வோர் அம்சமாகத் தோன்றினான். ஆனால் கிருஷ்ணாவதாரத்திலே தேவகியும், வஸுதேவரும் பெரிதாய் ஏதும் தவம் செய்யாமலே, கருவிலே திருவாய் அமர்ந்து பிறந்தான். அப்படிப்பட்டப் புண்ணியமுடையவள் தேவகி தேவி ! ஆயர்குலத்திடையே கண்ணன் 'தோன்றினான்' ஆயினும் தேவகியின் வயிற்றில் பிற சீவாத்மாக்களைப் போலவே கருவிருந்து பிறந்தானல்லவா ? இப்படிப்பட்ட பாக்கியத்தை தேவகி செய்ததை ஒட்டித்தான் அவள் 'ஒருத்தி' என்று குறிக்கப்படுகின்றாள். அவளைப் போன்றே போற்றுதலுக்கு உரியவள் கண்ணனை நெஞ்சிலே சுமந்து வளர்த்தெடுத்த யசோதை தேவி ! "திருவிலேனொன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதைபெற்றாளே " என்ற குலசேகர ஆழ்வாரின் தேவகி புலம்பலால், அவளைக் காட்டிலும் உயர்ச்சியுடையவள் யசோதை என்பது புலனாகிறது. ஆகவே தான் அவளையும்' ஒருத்தி' என்று புகழ்கிறாள் ஆண்டாள். ஒருத்தி (unique) என்ற குறிப்பால் இருவரின் பெருமையையும் ஆண்டாள் உரைக்கிறாள். தேவகி கண்ணனைப் பிறந்த குழந்தையாகத் தான் பார்த்தாள். யசோதையோ ,அவன் பால லீலைகளையெல்லாம், திகட்ட திகட்ட அனுபவித்தாள் .அவள் பெருமைக்கு ஈடே இருக்க முடியாது. வெண்ணை உண்டதோடு அல்லாமல் மண்ணையம் உண்ட அவனது திருவாயினுள் ஆண்ட பேரண்டங்கள் இருந்ததைக் கண்டாள் ! என்ன தவம் செய்தாளோ ? எத்தனைக் குறும்பு செய்தாலும், கண்ணன் வர சற்று தாமதமானாலும் தவித்துப் போகும் தாய்மை யசோதையுடையது ! ஓர் இரவில்- அப்படிப்பட்ட இரவு அதற்கு முன்பும் நிகழவில்லை, பின்னரும் இருக்கவில்லை ! ஆதலால் எப்படி 'ஒருத்தி' என்ற பதம் unique என்பதைக் குறிக்குமோ, அது போலவே 'ஓர் இரவு' என்ற பதமும் unique ஆகும்.கண்ணன் பிறப்பிடம் மதுராவில் சிறைச்சாலை என்றாலும், தன்னை வெறுத்த மாமன் கம்சனின் இடத்தில் அவன் ஒரு இரவு கூட தங்கவில்லை. பெற்றோரைப் பிணைத்திருந்த விலங்குகள் உடைபட, பூட்டியிருந்த சிறைக்கதவுகள் திறக்க, காவலிருந்த வீரர்கள் மயங்க, ஒரு கூடையை தனது ஆசனமாக்கி, யமுனை வழிவிட, ஆதிசேஷன் குடையாக, தன்னை மிகவும் நேசிக்கவிருக்கும் அன்புள்ளம் கொண்ட சாதாரண ஆயர்குலத்தினர் வாழும் கோகுலத்திற்குச் சென்று விட்டான் அல்லவா ? தன்னை வெறுக்கின்றவரிடம் இறைவனும் ஒதுங்கியே இருப்பான். சமயம் வரும்போது தானே அவர்களை அழிக்க வேண்டும் ? தன்னை நேசிக்கிறவர்களோடு தானும் ஒருவனாய் என்றும் கலந்து மகிழ்ந்திருப்பான். அடியவரைக் காப்பதும், தீயவர்களை அழிப்பதும் தானே இறைவன் கருத்து ? ஒளித்து வளர- பிறந்த போதே இவன் இறைவன் என்று அறியும் வகையால் தன் விஸ்வரூபத்தைப் பெற்றோருக்குக் கட்டியருளிய கண்ணன், தன்னுடைய அடியவர்களின் மீது தனக்கிருக்கும் அன்பின் காரணத்தால், தான் யாரென்பதை மறைத்துக் கொண்டு சாதாரணச் சிறுவனாக ஆயர்பாடியில் வளர்ந்தான். அரக்கன் கம்சனுக்கு அஞ்சி ஒளியவில்லை. அவனைக் கொல்வதற்கான சமயம் வரும் வரை காத்திருந்தான். எங்கே கம்ஸனால் கண்ணனுக்குத் தீங்கு வந்து விடுமோ என்று அஞ்சிய தேவகியின் மனம் சமாதானம் ஆவதற்காகவே, கண்ணன் மதுராவை நீங்கி ஆயர்பாடியில் யசோதையிடம் வளரத் தலைப்பட்டான். ஒருபோதும் கம்ஸனுக்கு அஞ்ச வேண்டிய அவசியம் கண்ணனுக்கு இல்லை. ஆடும் வரை அவன் ஆடட்டும் என்றே கம்ஸனை சிறிது காலம் விட்டுப் பிடித்தான். இறுதிவரை கம்ஸன் கண்ணனைத் தெரிந்து கொள்ளாமலே மாண்டான். எப்படி சீவாத்மாக்களின் உள்ளே அந்தர்யாமியாக இறைவன் மறைந்திருக்கிறானோ, அப்படித்தான் கண்ணன் மண்ணுலகில் மறைந்திருந்தான். அவனைத் தெரிந்தவர்களுக்குத் தெரிவான், மறுப்பவர்களுக்குப்,புலப்படான். தரிக்கிலான்- ஒரே இரவில் தான் பிறந்த இடத்தை நீங்கி, மாயாதேவியை அவ்விடத்தில் சேர்த்து அவளைக் கொல்ல கம்சன் முயன்றபோதில், அவள் மூலமே தான் பாதுகாப்பாய் நந்தகோபருடைய ஆயர்பாடியில் வளரும் செய்தியைக் கொடிய கம்சனுக்கு அறிவித்தக் கண்ணனைப் பொறுக்க முடியாத, கம்சனால் ஓரிடத்தில் உடலைத் தரிக்க முடியவில்லையாம். வெறுப்பும், அச்சமும் அவனை அலைக்கழித்தனவாம். அவன் தன்னைக் கொன்று விடுவான் என்றஞ்சிய கம்சன், கண் காணாத இடத்தில் கண்ணன் வளர்வதையும் பொறுக்காமல் அவனைக் கொன்றுவிட தன் அரக்கர் படையை ஏவியவண்ணம் இருந்தான். தனது இறைத்துவத்தை நிலைநாட்டுவதற்கு தெய்வம் விரும்புவதில்லை, அப்படிச் செய்ய வேண்டிய அவசியமும் அதற்கு இல்லை. நிர்குணப் பரப்பிரம்மமாகவே இறைவன் இருக்கிறான். பாவச்சுமையை அதிகப்படுத்திக் கொள்ளும் சீவாத்மாக்கள் தாமே தான் தம்முடைய அழிவுக்குக் காரணமாகிறார்கள் . தன்னை அண்டிய இந்திரனுக்காக அல்ல வாமனாவதாரம், தனது பக்தன் மஹாபலிச் சக்ரவர்த்தியின் பெருமையை உலகில் நிலைநாட்டவே ! ந்ருஸிம்ஹ அவதாரமோ தனது பக்தன் பிரஹலாதனின் வாக்கை மெய்ப்பிக்க வந்தது. இராமாவதாரத்தில் நல்லவர்களுக்குத்,தவசிகளுக்குத் தனது அரக்கப் பிரதிநிதிகளின் மூலம் இடையூறு விளைவித்து அச்சமூட்டியதோடல்லாமல் தன் மனைவியையும் கவர்ந்து என்று பிழையிழைத்தமைக்காகவே இராவண வதம். கிருஷ்ணாவதாரத்தில் ஸிஸுபாலன் கண்ணனை வெறுத்தே மாண்டான். கம்ஸன் கண்ணன் மீது பொறாமை கொண்டு அவன் வாழ்வதை சகிக்க முடியாமல், என் எதிரி சுகமாக வாழ நான் எப்படி நிம்மதியாக வாழ்வேன் என்று உயிரை உடம்பில் தரிக்க முடியாமல், எப்போதும் கண்ணனுக்குத் தீங்கு நினைத்தே, தானே தன் நிம்மதியை இழந்து, கடைசியில் அவனே தனது மரணத்தை வரவழைத்துக் கொண்டான். தீங்கு நினைத்தக் கருத்தைப் பிழைப்பித்து - கம்சனின் எண்ணத்தைப் பொய்யாக்கி.குழந்தையாக இருந்த போதிலிருந்தே கண்ணனைக் கொன்று விடவேண்டி பூதனை, கேசியசுரன்,தேனுகாசுரன், சகடாசுரன், கபித்தாசுரன், வத்ஸாசுரனென்று பற்பலரை ஏவியபடியே இருந்தகனல்லவா கம்சன் ? ஆயினும் கண்ணனைக் கொல்லும் அவனது தீய எண்ணம் நிறைவேறவில்லையே ! அவற்றையெல்லாம் கண்ணன் பொய்த்துப் போகும்படிச் செய்திட்டானே ! ஆயிரம் கரங்கள் மறைத்திருந்தாலும் ஆதவன் மறையுமா ? ஆண்டவன் இல்லையென்று கூச்சலிட்டாலும், அது உண்மையாய் ஆகுமா ? எல்லோரும் இறுதியில் அடைவது அவனடிக் கீழே தானல்லவோ ? வயிற்றில் நெருப்பென்ன நின்ற - கம்சனுக்கு உயிரச்சம் ஏற்படுத்தும் நெருப்பாக, அவன் வயிற்றெரிச்சலாக இருந்து கடைசியில் கொன்றும் போட்ட கண்ணன். தன்னுடைய அன்பர்களின் மத்தியில் சாதாரனச் சிறுவனாக வளர்ந்த கண்ணன், அசுரர் குணங்கள் நிறைந்த கம்சனுக்கு வயிற்றில்ட்ட நெருப்பாக தகித்தான். கண்ணன் பிறக்கும் வரை தேவகியின் வயிற்றில் கம்சன் அச்சத்தை நெருப்பாக வைத்தான். கண்ணன் பிறந்த பின்னே அதே நெருப்பை கம்சனின் வயிற்றுக்கு மாற்றி விட்டான். தன்னுடைய குழந்தைகளையெல்லாம் இந்தப் பொல்லாத கம்ஸன் கொல்லுகிறானே என்ற அச்சம் தேவகியின் வயிற்றில் நெருப்பாய் தகித்தது. கண்ணன் பிறந்த நொடியே, அந்த அச்சம் அவளை நீங்கிக் கம்ஸனது வயிற்றில் குடிகொண்டு விட்டது. கம்ஸனுக்குக் கண்ணன் மீதில் இருந்த பொறாமையால், அவன் மனதில் எப்போதும் அச்சம் நிலவிக் கொண்டிருந்தது. அது அவன் வயிற்றில் நெருப்பாகக் கனன்று கொண்டிருந்தது. மரணத்தை விடவும் மரணபயம் நெருப்பு போன்றது. ஒருமுறை தான் இறப்பு ஆனாலும் அதற்குள் எத்தனை முறை இறந்து போகின்றோம் பலர் ? கம்சன் அப்படிப்பட்டவர்களின் உருவகம் தான். கண்ணனைத் தனது பரம எதிரியாய் நினைத்தாலும், எப்போதும் இறைவனால் அவனைப் பற்றியே சிந்தித்து வந்ததால் (எப்படிக் கொல்லலாமென்று தான் !) கண்ணன் கையாலேயே மாண்டு வைகுண்டம் மீண்டது தனிக்கதை ! இறைவனை எதிர்ப்பவர்கள் தான் அடியார்களை விடவும் அவனை சதா சர்வகாலமும் எண்ணியபடி இருப்பார்கள். இதை அவர்களே மறுக்க முடியாது ! நெடுமாலே- கண்ணா,எங்கும் நீக்கமற நிறைந்த இறைவா. நீண்டு நெடிதெங்கும் நிறைந்தவன், அடியவர் மீதில் அளவற்ற அன்பு கொண்டவன்,தன் அடியவருக்கு அபயமளித்துக் காப்பவன் ,இறைவன், என்பதே நெடுமால் என்பதன் பொருள். அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் - உன்னைப் போற்றி பணிகின்ற எமக்கு நோன்பிற்குரிய பறைக்கருவியை அளித்தால் ." கண்ணா , எங்கள் நோன்பிற்குண்டான பறையை நீ எப்படிக் கொடுப்பதற்குத் தகுதியுடையவனாக இருக்கிறாயோ, அதைப் போலவே நாங்களும் அந்தப் பறையைப் பெறுவதற்குத் தகுதியோடு, உன்னைப் பணிந்து,அருத்தித்துப் போற்றிப் பாடி வந்தோம். நீ அன்று மஹாபலியிடம் மூன்றடி மண்ணுக்கு யாசகம் செய்யவில்லையா ? அதைப் போலவே இன்று நாங்கள் உன்னிடம் பறையை யாசித்து வந்துள்ளோம். அன்று உனக்குக் கிடைத்தது மூன்றடி நிலம். இன்று நாங்கள் வேண்டுவதோ ஒன்றே ஒன்று, பறை. அதை எங்களுக்கு நீ கொடு கண்ணா ! " என்கிறாள் ஆண்டாள். திருத்தக்க செல்வமும் சேவகமும் - அந்தப் பறையை எங்களுக்குக் கொடுத்தால்,இலக்குமி பிராட்டி விரும்பத்தக்க உனது நற்குணங்களையும் வீரத்தையும் நாங்கள் பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தே- உன்னை அடைவதற்குத் தடையானவற்றைக் கடந்து வந்த வருத்தங்கள் மறைந்து, இன்பம் பொங்குமாறு இருப்போம். அன்னை மஹாலக்ஷ்மியென்னும் திருவைப் பரமன் தனது மார்பில் தங்கியிருக்கிறான். ஆண்டாள் கூறுகிறாள் " திருவாகிய தாயார் உன்னோடு இருப்பதனால் அனைத்துச் செல்வங்களுக்கும் நீ அதிபதியாக இருக்கிறாய். உன்னுடைய அருளால் உன்னைப் புகழ்ந்து பாடும் எங்களுக்கு, உனக்கும் பிராட்டிக்கு தொண்டு செய்யும் பேற்றை நீ வழங்குவாயாகில், நாங்களும் உன்னைப் போன்றே பெருஞ்செல்வம் படைத்தவர்களாவோம். அதையருளிய உன் பெருமையையும் பாடுவோம் !" என்று. "பாற்கடலிலிருந்து வெளிப்பட்டப் பெண்ணமுதாகிய திருமகள் கூட உன்னைத் தானே விரும்பி மார்பில் உறைகின்றாள். அவளைத் தாங்குகின்ற நீ, அவளுக்குரிய கருணை குணத்தோடு இருக்கிறாயா என்று அறிய விரும்புகிறோம் கண்ணா ! அதை மெய்ப்பிக்கும்படி, எங்களுக்கு நாங்கள் விரும்பும் பறையைக் கொடு !"
தத்வார்த்தம்- உட்பொருள் கருமவினை சூழ் இருண்டதாம் இகவுலகில் தருமத்தைக் காக்கவே அவதாரம் செய்திடும் பரமனைப் பெற்றதோ காயத்ரி மந்திரமே ! பேரருள் செய்கின்ற வடிவினன் இறைவனும் விரும்பி உறைவதோ எட்டெழுத்து மந்திரமே ! கருமத்தால் மண்ணிலே பிறந்திடும் சீவர்கள், பெருந்தொல்லை தருகின்ற சிற்றின்பம் தம்மை ஒருபோதும் விரும்பாமல் முன்னமவர் செய்த பெரும் பாவம் அவற்றோடு சேர்கின்றவற்றை கருணை மிகுந்த இறைவன் தன்னருளால் தீர்த்து வைப்பதைப் பற்றியே எண்ணுவார் ! , சரீரமென்கின்ற உடல்சார் இன்பமும்- தாம் உரியதாய்க் கொள்ளும் மனம்சார் இன்பமும் பெரிதென மதிக்கும் ஆன்மயின்பமும்- இவை சரியல்ல எல்லாமும் அரக்க இயல்பென்று தெரிந்து கொள்ளாத சீவர்கள் தம்மையே . இரக்கம் என்கின்ற தீயால் அவ்விறைவனும் எரித்து அருள்வதும் அடியவர் அறிகுவார் ! அரிய நற்குணங்கள் கொண்ட இறைவனை, சரணாகதம் என்னும் வழியினில் சென்று, அருச்சனை செய்துப் பாடிப் பணிந்துமே, திருவடிப் பேற்றினை நாடவும் செய்குவார் ! திருமகள் விரும்பும் குணங்களைப் பெற்ற, பரமனின் இயல்பினைப் பாடிப் பணிந்து, உருகிடும் அடியாரின் பக்திக்கு இரங்கி, பரமனும் தன்னடி சேர்த்திடுவான் எனில், கருமத்தினால் பெறும் பிறவிகள் என்னும் வருத்தம் தொலைந்த இன்பத்தை எண்ணி, வரத்தினைப் பெற்ற அடியார் மகிழ்வோடு பரமனின் திருவடித் தொண்டிலே ஆழ்வார் ! ஒருத்தி மகனாய்ப் பிறந்து - பிறப்பிறப்பிலாத இறைவன் மந்திரங்களுக்கெல்லாம் தாயென விளங்கும் காயத்ரி மந்திரத்தில் பிறக்கிறான் எனக் கொள்வது இறைநெறி. அம்மந்திரத்தின் விளக்கமாயுள்ளான் என்பது பொருள். தாயைக் குடல் விளக்கம் என்ற 5 பாசுரக் குறிப்பை நினைவு படுத்தலாம். ஓரிரவில் - , துன்பங்கள் என்னும் இருள் நிறைந்த இம்மண்ணுலகில்,, இறைவன் அவதாரம் செய்து லீலைகள் புரிகின்ற இம்மண்ணுலகில். ஸம்ஸாரமென்னும் இருள் தான் இரவு. மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பாவ புண்ணியங்களுக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கும் சீவாத்மாக்கள் தான் இந்த இரவில் வாடும் உயிர்கள். அவர்கள் மீதில் கருணை கொண்டே இறைவன் தன்னுடைய நிலையினின்று கீழிறங்கி, நமக்கு இரங்கி , தன்னுடைய தெய்வத்தன்மைகளை ஒளித்துக் கொண்டு அருள் செய்கிறான். இதை கோயில்களிலுள்ள சிலை வடிவங்கள் சொல்லும். ஆயினும் அதை வெறும் கல்லென்று சொல்பவர்களும் உண்டு தானே ? ஒருத்தி மகனாய் வளர -,காயத்ரி மந்திரத்தின் உட்பொருளாய் விளங்கும் அவனை அடைய , அவனது மூலமந்திரமாகிய எட்டெழுத்து மந்திரமே உதவும். (பிரணவம் + நமோ+நாராயணாய). அனைவராலும் புரிந்து கொள்ள முடியாத இரஹஸ்யமான ,உயர்ந்த மந்திரமாகிய காயத்ரியின் பொருளாக இருக்கும் இறைவன், எல்லோரும் எளிதில் கூறிப் பயனுறும் வகையில் எட்டெழுத்து மந்திர வடிவில் அருள் பாலிக்கிறான். ஒளித்து வளர- மண்ணுலகின் சிற்றின்பங்களில் சிந்தை பதிக்காமல், பேரின்பமாகிய இறைவனைப் பற்றியே எண்ணும் புண்ணிய ஆத்மாக்கள், (ஞானியர், யோகியர்,பக்தர், தொண்டர் ) ஆயர்பாடியில் உள்ள கோப,கோபியர்கள் இறைவன் மீது அன்பு கொண்ட அடியவர்களின் குறியீடே .அவர்களுக்கு இறைவன் லீலைகள் மூலம் அன்பால் அருள் (அறவருள் )செய்கிறான். தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த - இறைவனைப் பணிந்த அடியார்கள், தாம் முன்னர் செய்த பாவங்களையும், அறியாமல் இன்னும் செய்கின்ற பாவங்களையும் எண்ணிப் பொறுக்க முடியாதவர்களாகி கருணை மிகுந்த இறைவன் தன்னருளால் தீர்த்து வைப்பதைப் பற்றியே எண்ணுவார். கம்ஸன்- தாபத்ரயம் என்கிற இகவுலக தீநெறியில் அகப்பட்டு தீங்கு புரியும் சீவர்களின் குறியீடு . தாபத்ரயம் எனப்படுபவை : 1)ஆதி பௌதிகம்- உடல் சார்ந்த நுகர்புலன்களின் தேவைகளுக்கு அடிமையாகி சிற்றின்பங்களில் மூழ்குதல் 2) ஆதி தெய்விகம் - மனம் சார்ந்த உணர்புலன்களில் மூழ்கி அதையே பெரிதெனக் கொள்ளுதல். 3) ஆத்யாத்மீகம் - உடல்,மனம் சார்ந்த சிற்றின்பத் தொல்லைகள் ஆன்ம நிலையிலும் துன்பத்தைக் கொடுத்தல். தாபத்ரயம் பற்றி வேறொரு பார்வையும் சொல்கிறார்கள். ஆதி பௌதிகம் - நம் புறக்கண்களுக்குப் புலப்படக்கூடிய இவ்வுலகத்தின் மற்ற விலங்குகள், சக மனிதர்கள், இயற்கைப் பேரிடர்கள் ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்கள். ஆதி தெய்விகம்- நம் புறக்கண்களுக்குப் புலப்படாத மற்ற உலகத்திலுள்ளோர்களால், (மாந்திரீகம், பில்லி சூனியம்,பேய்,பிசாசு இவையெல்லாம் என்கிறார்கள் ) நமக்கு ஏற்படும் துன்பங்கள் ஆதி ஆத்மீகம் - நமக்குள்ளேயே இருந்து நமக்குத் துன்பம் விளைக்கின்றவைகள். அதாவது, னாய், சோம்பல், பயம், வலி போன்றவை. வயிற்றில் நெருப்பென்ன நின்ற- தாபத்ரயத்தில் உழன்று துன்பப்படும் உயிர்கள் மீதும் இரக்கம் கொண்டு, அவர்களின் தீவினைகளை அழிக்கும் நெருப்பாக இறைவன் இருக்கிறான். கம்ச சாணுர,முஷ்டிகர்கள்- இறைவனை விடுத்து உலகவின்பங்களில் மூழ்கி தீச்செயல்கள் புரிகின்ற இறை அறிவற்ற சீவர்களின் குறியீடு. இறைவன் அவர்களின் தீயகுணங்களை அழித்து அருள் (மறவருள்) செய்கிறான். உன்னை அருத்தித்து வந்தோம் - இறைவனின் இந்த இயல்பினை நன்கு அறிந்த அடியவர்கள், அவனைப் போற்றிப் பணிந்து சரணாகதி செய்து வீடுபேற்றினை வேண்டுவர்.அவன் ஸ்தோத்திரப் ப்ரியன். பறை தருதியாகில் - இறைவனும் அவர்களுக்கு அருளி வீடுபேறு வழங்கினால். வீடுபேறாவது, இறைவனுக்குச் செய்யும் தொண்டாகிய கைங்கர்யமே ! அதையும் இறைவனே நமக்கு அருள வேண்டும். திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி- செல்வங்களின் அதிபதியாகிய திருமகளும் விரும்புகின்ற , நற்குணச் செல்வங்கள் நிறைந்த இறைவனின் பெருமையினை அடியவர்கள் பாட. திருமகளுக்கு எவையெல்லாம் திருவைக் கொடுத்தனவோ, அதையெல்லாம் இறைவா எங்களுக்குக் கொடு. அவளது ஸௌந்தர்யம் (அழகு- அகம், புறம் இரண்டிலும்), ஸ்ரீ தனம் (செல்வநிலை), பிரேமை,பக்தி (திருமகளுக்குத் திருமால் மீதில் இருக்கும் அளவற்ற அன்பும், பக்தியும் )சேவகம் (இறைவனைப் பிரியாமல் அவனோடே இருந்து தாயார் செய்யும் தொண்டு)-- இவற்றை அடையும் தகுதியோடு (இறைவன் மீதில் உண்மையான அன்போடு) நாங்கள் வந்திருக்கிறோம், ஆகவே இதையெல்லாம் எங்களுக்குக் கொடு என்கிறாள் ஆண்டாள். வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தே - கர்மவினைகளால் மீண்டும் மீண்டும் அடைகின்ற பிறவிப்பிணியின் துன்பங்கள் தீர்ந்து இறைப்பணியில் மகிழ்ச்சியோடு ஈடுபடுவர் . நீ எங்களுக்கு இறைப்பணியென்னும் செல்வத்தைக் கொடுத்தால், நாங்கள் உன்னையும் உன் பிராட்டியான மஹாலக்ஷ்மியையும் திருத்தக்க செல்வமாக, என்றும் நிலையான செல்வமாக பெற்று, உங்களுக்கு சேவகம் செய்து, இதுவரை பிறவிகள் பல எடுத்த வருத்தமும் தீர்ந்து, பரமானந்த நிலையை அடைந்து மகிழ்வோம் என்று சொல்கிறாள். அப்படிச் செய்தால், (கைங்கர்யமாகிய பேற்றை அளித்தால், திருத்தக்க செல்வம் பெற்று )திருமகள் எப்படித் திருமாலுக்கு சேவகம் செய்து மகிழ்கிறாளோ, அப்படியே அடியார்களும், இறைவனுக்கு இடைவிடாது பணி செய்து தங்களது மற்றப் பிறவிப் பிணிகள் என்னும் வருத்தங்கள் நீங்கி, நிலைத்த ஆனந்தமாம் இறைவனோடே எப்போதும் இருந்து மகிழ்வடைவோம் என்பதே கருத்து.
இந்த பாசுரம் மந்திர ரூபமானது.ஒருத்தி, நெடுமால் என்ற சொற்கள் மந்த்ர பிரயோகங்கள். இந்த பாசுர உபன்யாசம் விளக்க ஒரு சின்ன சம்பவம் கூறுவதுண்டு.மலர்ந்த தாமரை மலரில் உட்கார்ந்து தேனைப் பெருகுகிறது வண்டு .அஸ்தமித்ததும் தாமரை மலர் மூடிக் கொள்ளுகிறது. இதழ்கள் வண்டை உள்ளே இழுத்தபோது தான் வண்டுக்கு உணர்வு வந்தது.சற்று நேரம் முன்னாலேயே மலரை வீட்டு நீங்கி இருக்கலாமே..தென் நுகரும் ஆசையில் மாட்டிக் கொண்டோமே என்று. ஆனால் ஒரு தெம்பு.எப்படியும் சூரியன் உதிப்பான். தாமரை மலரும். நாம் வெளியே வந்து விடலாம். ஆனால் என்ன நடந்தது?நடு இரவில் ஒரு யானை நீரில் இறங்கி நாளத்தோடு தாமரைச் செடியைப் பிடித்து இழுத்துப் பூவால் தன உடலை அழுத்தித் தேய்த்தது.காலையில் வெளியே செல்ல நினைத்த வண்டின் கதி அதோ கதி தான்.. ஆசைகளை மூழ்கி சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு முக்தி பெறுதலே பாசுரத்தின் நோக்கம். ஜெய்சாலா 42
தனது இறைத்துவத்தை நிலைநாட்டுவதற்கு தெய்வம் விரும்புவதில்லை, அப்படிச் செய்ய வேண்டிய அவசியமும் அதற்கு இல்லை. நிர்குணப் பரப்பிரம்மமாகவே இறைவன் இருக்கிறான். பாவச்சுமையை அதிகப்படுத்திக் கொள்ளும் சீவாத்மாக்கள் தாமே தான் தம்முடைய அழிவுக்குக் காரணமாகிறார்கள் . முற்றிலும் உண்மை .
[QUOTE="periamma, post: 3919488, member: 106297" முற்றிலும் உண்மை .[/QUOTE] புரிதலுக்கு நன்றி பெரியம்மா !