ஐம்புலன்களில் முதலாவதால் அவனைக் கண்டும், இரண்டாவதால் அவன் நாமம் குளிருமாறு கேட்டும், மூன்றாவதில் அவன் பெயரை நன்றாக உரைத்தும், நான்காவதின் உச்சியிலே கவனத்தைக் கொண்டும் ஐந்தாவது முற்றும் கரைவதினை உணர்ந்தும், ஆறாம் திருமுகங்களையே நன்றாய் தரிசித்தும், ஏழாம் வேற்றுமை உருபை பின்னுக்குக் கொண்டும், எட்டாம் எண் பெயரிலே முதலாகக் கொண்டும், ஒன்பது கிரகங்களும் செயும் கெடுதி யாவும், பட்டென நீக்கி விடும் பற்றானவன் தாளும் நெஞ்சிலே இடைவிடாது நிறுத்தி எந்நாளும் கொண்டிடுவோம், நன்றே உய்ந்திடுவோம் நாமும். குறிப்பு: 1. முதல் வரி கண்ணையும், இரண்டாவது காதையும், மூன்றாவது நாவையும், நான்காவது நாசியையும், ஐந்தாவது உடலையும் குறிக்கிறது. 2. ஆறாம் திருமுகங்கள் உடையவன் முருகன். 3. ஏழாம் வேற்றுமை உருபு 'கண்' ஆகும். எட்டாம் எண், 8ஐக் குறிக்கும். உணர்த்தும் இறைவன், எண்கண் முருகன் ஆவார். ஐஎல் வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். -ஸ்ரீ