கண்களின் விரிவில் வானமும் சிறிதெனத் தெரிய, காது மடல் சிகப்பில் அணிந்திருந்த பவழம் மங்க, அளவெடுத்துச் செய்த நாசி பளிச்சென்று விளங்க, அதிலிருந்த குறுவைரம் இருப்பினை வெளிப்படுத்த, செவ்விதழ்கள் நறுக்கியெடுத்து செய்ததாகத் தோன்ற, வெண்முல்லைச் சரமெனவே பல்வரிசையும் இலங்க. தங்கத்தினைப் பழிக்கின்றதாய் மேனி நிறம் பொலிய, உளதோ, இலையோ என ஐயம் தந்த இடையும் குழப்ப, அளகபாரம் கருத்தும், நீண்டும், சாட்டையாக இறுக, கண்டோரின் மனதையெல்லாம் அவளுருவம் பருக, குழந்தையவள் சிறுநடையாய் நடந்து அருகில் நிற்க, குமரகுருபரரின் பிள்ளைத் தமிழும் தொடர்ந்திருக்க, வந்த குழந்தை கைகள் கொட்டி மகிழக் கண்டவர்கள், குரலில் கிள்ளை நாணும் எனக் கட்டியம் சொன்னார்கள். யார் அந்தக் குழந்தை என்று வினா எழுந்தவர் கண் முன், மீனாட்சிக் குழந்தை சென்று மறைந்தாள் இமைத்திடுமுன். குறிப்பு: குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் இயற்றிக் கொண்டிருக்க சபையில் அன்னை மீனாட்சியே குழந்தையாக வந்து கேட்டாளாம். அது குறித்து எழுந்த கற்பனை இது. -ஸ்ரீ