கண்ணில் என்னைப் பார்த்தேன் கண்ணா உன்னில் என்னைப் பார்த்தேன் கண்டேன் அண்ட சராசரங்களும் கூடவே காதலி என்னையும் பார்த்தேன் காணும் கண்ணில் கலந்தாய் கண்ணா காதலி என்னில் கலந்தாய் வேணு கானம் இசைத்தே எந்தன் விரகம் நீயும் தணித்தாய் மெல்லத் துடித்ததென் உதடுகள் மாயவன் பேரைச் சொல்லியே கிள்ளிய பூப்போல் விழுந்த துந்தன் மடிமீ திந்த அல்லியே குன்றாக் காதல் ஒளியே கரையிலா இன்பக் கடலே என்றனை யாளும் இறைவா ஆனந்த வாழ்வு தர வா