நாகபுரியின் ஆரஞ்சுப் பழம் உந்தன் முகமோ? நாகலிங்கப்பூ நினைவு முகர்கையிலே வருமோ? கருநாவற்பழம் இரண்டு கொண்டவை உன் விழியோ? கருமை அடர்ந்து மையாகக் காணும் உன் முடியோ? அழகான வண்ணத்துப் பூச்சிகள் பலவற்றை, ஆங்காங்கே செல்கையில் நான் நோக்கியதுண்டு. அவை அத்தனையும் சேர்ந்தாலும் உன் தோற்றத்தில், அடிபட்டுப் போகும் என நான் நினைத்ததுண்டு. இனிப்பான கரும்பெல்லாம் உன் மழலை முன்னாலே, இகழப்பட்டதால், வாடி, தலை சாய்ந்திருக்குமே!. கசப்பான நினைவெல்லாம் உன் முகம் கண்டாலே, கசிந்தோட, அதனால் என் மனமும் மகிழுமே! நீ பிறக்கும் முன்பே ஒரு நெடும்பா இங்கே, எழுதப்பட்டு, உனக்காகக் காத்திருக்கிறது. பன்மடங்கு அதை விஞ்சும் வெண்பா நீயும், வருகின்ற நாளை மனம் விழைந்திருக்கிறது. உன் இயல்பில் நீ இருப்பதே எனக்குப் போதும், அதிலேயே, எனக்கெல்லாம் நிறையும் எப்போதும். என் கற்பனை ஈடேறும் அந்நாள் வந்திடும் போது, எனை விடவும் மகிழ்ந்திடுவார் உலகினில் ஏது? -ஸ்ரீ
முத்து முத்து மகளே முகம் காணாத மகளே மாதங்கள் பத்து மனதினில் சுமந்து கற்பனையில் பெற்ற கண்மணியே நான் உனக்கு கவிதையில் எழுதும் கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம் - பாடல் தான் நினைவுக்கு வருகிறது. மழலையை போன்ற அழகிய கவிதை .