என்றுனைக் கண்டேன்? தெரியாது. முன் எண்ணத்தில் நீயும் கிடையாது. என்புருகி நா உலரினும் தவறாது உன் நாமம் சொல்வதை நிறுத்தாது இருப்பார் பலர் என்பதை உணராது, கிடப்பார் பலர்; அவருள் நானுண்டு. வருவார்; இருப்பார்; போவாரென்று மாந்தரை வரையறுத்துக் கொண்டதுண்டு. வேணுவில் கருவண்டு துளையிடவும், அதில் நுழைகாற்றிசையாவது போல் என்னுள் நீ ஒரு நாள் நுழைந்திடவும், எண்ணம் இளகி, விழி சுரந்ததுவே! எங்கே நீ? என்றே தேடுபவன் எண்ணம் தவிப்பாக மொழியதிலே எங்கும் வெளிப்பட, பிறரும் பித்தன் என எங்கும் அவனை எள்ளினரே! குழந்தை என்பாருக்கவன் குழந்தை. தோழன் என்பாருக்குயிர்த் தோழன். ஞானி என ஏத்துவர், போதனையை நாளெல்லாம் பயின்றினும் அக்கள்ளன் அதற்கெல்லாம் அப்பால் வெகுசேய்மை இருப்பதனை உணர்ந்து தன் போதாமை எதைக் கொண்டும் நிறையாதெனுமுண்மை உறைத்தலின் பெற்றிடுவார் அவனண்மை. தந்தை என்றே அவனைக் கொள்வோம்! தன் செயலையும், விளைவையும் ஏற்பவனை தயங்காமல் அனுதினம் இறைஞ்சிடுவோம்! தளராமல் தொடர்ந்து நம் பணி செய்வோம்! உள்ளே ஒரு சிறு சுடரெரிய, பிறவியிருள் அதனாலே ஒழிய விளையாடும் பீலி அணிந்தவனை விரைந்தே தொழுவோம் நம் விழி குவிய!
அழகிய கவியியற்றி அந்தக் கண்ணனைக் கொண்டு தந்த கவிஞரே, @rgsrinivasan - உங்களுக்கென் மனங்கனிந்த ஜன்மாஷ்டமி வாழ்த்துகள் ! குழவியோ,கிழவனோ அன்றி இன்னுயிர்த் தோழனோ,ஞானியோ,பணியாளோ-காதல் மழையிலே நனைவிக்குமாய ஆயனோ, கள்வனேயோ ! அழைப்பவர் ஏதுரைப்பினுமவர் அன்பைக் கண்டு குழல் நுழை காற்றைப் போல் தொழுது நிற்பாராவர் மனம் நுழைந்து இழையும் மூச்சிலும் அவனையே எண்ணி விழையும் அன்பருக்குத் தன்னுள்ளங் குளிர்ந்தே குழைந்தருள்வான் ! போய பிழையாவும் புகுதருவான் ! ஆழிமழைக் கண்ணனென்பான் சேயாகி வந்த எந்தை !