சந்தேகங்களுக்கும் விளக்கங்களும் இடையில் சந்தோஷங்கள் தொலைப்பது சரியா ? உரத்த சிந்தனை, அவ்வளவே ! பேசாத வார்த்தைகளுக்கு அர்த்தமுண்டா ? உண்டென்று அறிய நேர்கையில் அதிகம் பேசி உறக்கமிழக்கிறேன் ! கேட்பது சுலபமென்று கேள்விகள் தொடுக்கப்பட்டால் விடை கொடுப்பது கடினமென்று மௌனமாதல் பிழையா ? வினாவிற்கும் விடைக்கும் இடைப்பட்ட காலத்தில் அலைபாயும் மனதுக்கு கடிவாளம் எப்படிப் போடுவது ? விடை கிடைத்தப் பின்னும் வருத்தம் விடைபெறாது இருப்பதை எவ்வாறு எடுத்துக் கொள்வது ? ஒவ்வொரு முறையும் என்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய தருணங்களைக் கண்டு அஞ்சுகிறேன் ! அச்சம் செயலாக்கம் குறித்தல்ல! அதன் பின்விளைவாய் ஏதோவொரு மனவருத்தம் நிகழும் என்றே ! எப்போதும் பொய் உரைப்பதில்லை என்றாலும் புண்படுத்தும் என்றுணர்ந்தால் சிற்சில மெய்யும் உரைப்பதில்லை ! நித்தமொரு அனுபவமென்று அறிந்திருந்தாலும் வாழ்வின் அவ்வப்போதைய நிகழ்வுகளைக் கடக்கையில் ஆச்சரியம் கொள்கிறேன் ! ஏட்டிலே இல்லாத எத்தனையோ பாடங்களை நினைவுகளாய் அவை வழங்குவதை வியந்து நோக்குகிறேன் ! கற்றதை அன்றாடத்தில் கடைபிடிக்க முயன்று அதில் வெற்றிகளும் அவற்றோடு தோல்விகளும் அடைகிறேன் ! விசித்திரங்களில் முதலிடம் வாழ்க்கைக்கே! அதிர்ச்சியும் ஆச்சரியமும் தவறாமல் வழங்கும், தினசரி வாழ்க்கைக்கே ! எண்ணங்களுக்கு வார்த்தை வடிவிட்டுப் படித்துப் பார்த்தேன் , சட்டென்று மனங்குளிர்ந்து இதழ் விரிந்தது ! குழப்பம் விடைபெற்றுக் கொண்டது ! தெளிவான சிந்தனை பிறந்தது! தொலைத்த நிம்மதி கிடைத்தது ! என்னுள்ளே ஏற்பட்டது என்னவென்று அறிந்து கொள்ள விழைகிறீர்களா ? உங்களிடமே கேட்டு உணருங்கள் ! Regards, Pavithra
உறக்கம் கலைந்து கவிதைப் பகுதிக்கு வந்திருக்கிறீர்கள் போல? எப்போதும் உண்ட மயக்கத்திலேயே இருந்தால் அப்படித்தான்,மண்டையில் போட்டு எழுப்பி விடுவோம் ! பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே !