எங்கிருந்தேனும் எதிர்பார்க்கா நொடியில் என் கண்ணில் பட்டு மறைகின்றாய். ஏக்கமது நிறைந்தே ததும்பிட விழியில் எதையோ உணர்த்திச் செல்கின்றாய். உனக்காய் எனை வருத்திய நாளெல்லாம் உளி பட்ட கல்லென வலிக்கிறது. ஊமையன் அக்கனவில் இரவெல்லாம் உளைந்திருப்பேனோ? மனம் துடிக்கிறது. இறையின் பிழையன்றே தண்டனையும் இல்லாதான் பெற்றதோர் மன்னிப்பும். இரையாவோமெனவே தெரிந்திருந்தும் இசைவோடிவ் விட்டில் தழல் நாடும். அசையாமல் நிலைத்ததோர் மனமென்றோ அகலாமல் நீ நெருங்கிட வாய்க்கும். அடையாமல் போயினும் உனையென்றோ அணுவேனும் அணுகுவேனெனத் தோன்றும். எத்தனை தான் சொன்னாலும் நிறைவாய் உரைத்தேனென உள்ளே உறைக்கவில்லை. இவ்வளவே நானெனும் பெருங்குறையை அத்தா! அறிவாய். ஒரு தாழ்வுமில்லை!
நல்ல கவிதை. தந்தமைக்கு நன்றி. “அசையாமல் நிலைத்ததோர் மனமென்றோ அகலாமல் நீ நெருங்கிட வாய்க்கும். அடையாமல் போயினும் உனையென்றோ அணுவேனும் அணுகுவேனெனத் தோன்றும்.” ‘சும்மா இரு; சொல்லற’ ஒன்றே போதும் பெம்மான் முருகனை நம்முள் உணர்வதற்கு என்றார் அருணகிரி. அக்கருத்தை வலியுறுத்தும் வரிகள். நன்று. அன்புடன், RRG
உங்கள் பின்னூட்டத்துக்கு, பாராட்டுக்கும் நன்றி Rrg. அருணகிரிநாதரின் அற்புதமான வரிகளை மேற்கோள் காட்டியதற்கும் நன்றி. -rgs