அழகன் கழுதை சரித்திரம் அவள் தன் கைப்பையில் ஒரு கழுதையை வளர்த்துவந்தாள். அவள் அழுதால் கழுதை கைகுட்டையை கொடுக்கும். சிரித்தால் அதுவும் சேர்ந்து சிரிக்கும். அலுவல் நேரங்களில் அது ஏதாவதொரு நாவலை வாசித்துக்கொண்டிருக்கும். மனிதர்களை கழுதைக்கூட்டம் என்பாள். கைப்பை கழுதையை அவள் என்றுமே கழுதை என்றதில்லை. அதற்கு 'அழகன்' என்றும் பெயரிட்டிருந்தாள். மழை நாட்களில் மட்டும் கைப்பையினுள்ளிருந்து வெளியே எடுத்து மடியில் வைத்துக்கொள்வாள். தன் இருபதாவது வயதிலிருந்து இருபத்தி மூன்றாவது வயதுவரை கழுதையுடனே கழித்தாள். காதலர் தினமொன்றில் நிகழ்ந்தேறிய திருமணத்தன்று வெளிவராமல் கைப்பையினுள்ளிருந்து வாழ்த்தியது. மறுவீடு சென்றவள் போகும் வழியில் கைப்பையை தூர எறிந்துவிட்டு கழுதைக்கூட்டத்தில் கலந்து மறைந்தாள். முட்கள் நிறைந்த புதரொன்றில் விழுந்து தனிமையில் தவித்த கழுதை ஓர் இரவில் விழித்துக்கொண்டு மனிதக்கூட்டம் நோக்கி சென்றது. -நிலாரசிகன்.
விருப்பமென்ற சுமையைத் தாங்கி ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்து தன் குரலை தானே ரசிக்கும் மனிதரைத்தான் கழுதை என்கிறாரோ?