மரகதப் பச்சை மாணிக்கம் ! மதுரையில் அவளது ஆதிக்கம் ! வழுதிக்கு வரமென வந்தவளாம் ! பழுது இல்லாத கோமகளாம் ! காஞ்சனை கனவில் கண்டபடி கடம்ப வனத்தில் வளருங்கொடி மும்முலை தாங்கிய சுந்தரியாம் ! முக்கண்ணன் மயங்கிய அந்தரியாம் ! ஒருபுறம் அண்ணண் கள்ளழகன் மறுபுறம் அரனவன் மணமகனாய் நடுவினில் நாயகி பூரணமாய்த் திருமணக் கோலத்தில் நிற்கின்றாள் ! சித்திரக்கவி சொல்லும் மண்டபங்கள் கீதம் இசைத்திடும் பெருந்தூண்கள் நற்றமிழ் வளர்த்த சங்கமந்தப் பொற்றாமரைக் குள அதிசயங்கள் ! சிற்பங்கள் பேசும் கோவிலிலே அற்புத அழகுடன் திகழ்கின்றாள் ! சொற்களைத் தாண்டிய ஞானத்தை விற்பன்னள் தொழ அருள்கின்றாள் ! முத்து விளைகின்ற நாட்டினிலே முத்தமிழ் வளர்த்தவர் கூட்டினிலே சித்திரை விழவுகள் கண்டபடி சித்தியை அருள்வாள் சிரித்தபடி ! தோளில் கிள்ளை சுமந்தபடி தாளை உலகங்கள் பணியும்படி நாளொரு வண்ணமும் புதியவளாய் ஆளுகிறாள் அன்னை மீனாக்ஷி ! Regards, Pavithra
மதிப்பிற்குரிய RGS @rgsrinivasan ! நாங்கள் மதுரை சென்று வந்த அனுபவத்தை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்று எண்ணிய செய்திப் பதிவு. சமீபத்தில் தாயகம் வந்திருந்த போது என் கணவரும் நானும் மதுரை சென்று வந்தோம். அப்பொழுது தான் சித்திரைத் திருவிழா முடிந்த மறுநாளென்பதால் பெருங்கூட்டம் இல்லையின்று பக்தர்கள் பேசிக்கொண்டார்கள். . அதற்கே மாலை 7.00 மணிக்கு தரிசன வரிசையில் காத்திருந்து அவள் ஸந்நதியை அடைந்த சமயத்தில் இரவு 9.20 ஆகிவிட்டிருந்தது. அருள்மிகு என்று சொல்லும் அரசாங்கம் நடத்தும் கோவில் நிர்வாகத்தில் பணம் செலுத்தி அதிவிரைவு வரிசையில் நிற்க எங்களுக்கு விருப்பமில்லை. நான் அருள்மிகுவை எதிர்த்து நீதிமன்றம் போன தில்லையம்பதியைச் சேர்ந்தவளில்லையா ? அது தான் ! சாதாரண வரிசையில் எங்களுக்குப் பின்னிருந்த உள்ளூர் தம்பதிகள் எங்களிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். உள்ளூரிலேயே இருந்தாலும் மீனாக்ஷியைப் பார்ப்பதற்கு முடிவதில்லை கூட்டம் காரணத்தாலென்று அங்கலாய்த்துக் கொண்டார்கள். வரிசையில் காத்திருந்து ஸந்நதிக்கு வந்தாலும் தரிசனம் கிடைக்குமா என்பது ஐயமே என்று கூறி எங்களைப் படபடக்க வைத்தார்கள். ஆயினும் அவளைக் காணும் ஆவலில் வந்திருக்கும் நமக்குக் கட்டாயம் தரிஸனம் கிடைக்குமென்று நாங்கள் நம்பிக்கையோடிருந்தோம்.அவள் ஸந்நதியில் உள்ளே நுழையும் போதில் உங்களது சிறுபிள்ளை கவிதையைப் பற்றியும், அதன் தொடர்ச்சியாய் நடந்த நம் தகவல் பரிமாற்றத்தைப் பற்றியும் கணவரும் நானும் பேசிக்கொண்டோம். மதுரைக்குச் செல்ல வேண்டுமென்ற எங்கள் அவாவை ஆமோதித்து "அவசியம் சென்று வாருங்கள் சீக்கிரமே !" என்று உத்வேகம் தரும்படி சொன்ன உங்களுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்துக் கொண்டோம். தர்ம தரிஸனமாக அன்னையை வணங்கியபின் அதர்மமாக அங்கிருந்த வாயில் காப்போன் அதிரடியாய்க் கேட்டதிற்கிணங்கி (இரசீது பெற்று வந்திருந்தாலும் இல்லை எங்களைப் போல் காத்திருந்து வந்தாலும் தெய்வத்தைக் காணவும் கையூட்டு தரவேண்டுமென்பது நம் நாட்டின் தலைவிதி போலும்) அவன் கைகளில் ரூ 100 ஐத் தந்து சற்றே நின்று அவளைக் கண்டோம். குருக்கள் அவள் தலை வட்டிலிருந்து மலர்ச்சரம் பிரஸாதமாய்க் கொடுத்தார். அவ்வமயம் கூட்டம் பன்மடங்கு குறைந்து உள்ளூர்க்காரர்கள் மட்டுமிருந்தனர். அர்த்தஜாம தீபாராதனைகள் மீனாக்ஷிக்கும் , சுந்தரேஸ்வரருக்கும் முடிந்தபின் சொக்கநாதர் மீனாக்ஷியின் பள்ளியறையில் எழுந்தருளும் போதில் அங்குக் குழுமியிருந்தோர் மண்டியிட்டுத் தெண்டம் சமர்ப்பித்ததைக் கண்டு நாங்களும் அவ்வாறே செய்தோம். பள்ளியறையில் ஸ்வாமியும் அம்பாளும் ஊஞ்சலாடி பக்தர்களைக் களிப்பித்தனர். தெய்வாதீனமாக உடன் தொழுதிருந்த வாசுகி என்ற உள்ளூர்ப் பெண்மணி தோழமையோடு எங்களுக்கு மதுரையின் பள்ளியறை நேரத்து ஆராதனையைப் பற்றியும் அப்போது கொடுக்கும் பால் மற்றும் சந்தனப் பிரஸாதம் பற்றியும் தெரிவித்துப் பெற்றுக்கொள்ளத் தூண்டினார். மேலும் இரவு அர்த்தஜாமம்,பள்ளியறை ஆராதனைகளை தம்பதி ஸமேதராய்ப் பார்ப்பது தான் விசேஷமென்று அவர் சொன்னதும் எங்களிருவருக்கும் சிலிர்த்தது. கோவில் வாசலில் விடைபெற்றுக் கொள்ளும்போதில் அவர் சொன்னார், இப்போது கண்ட தரிசனத்தோடு மறுநாள் விடியற்காலை திருப்பள்ளியெழுச்சி ஆராதனையையும் காண்பது மிகவும் புண்ணியம் தரும் என்று. எப்படியும் அன்றிரவு மதுரையில் தங்க ஏற்பாடு செய்திருந்தோமாகையால்,மறுநாள் வெகு சீக்கிரமே 4.00 மணி வாக்கில் அதிகாலை பக்தர்கள் வரிசையில் நின்று அருமையான தரிசனம் கண்டோம். அம்பாளின் கைவளையும் ,குங்குமமும் பிரஸாதமாய்ப் பெற்றோம். வெள்ளியம்பலத்தானைக் ,கால் மாற்றி ஆடிய ஆலவாயனைக் கண்டு களித்தோம். வெளிப்பிரகாரத்தில் உள்ள சிற்பங்களின் கலையழகை இரசித்தபடி பேசிக்கொண்டிருக்கையில், வேறோர் உள்ளூர்க்காரர் என்னை விளித்து அம்பாளின் பிராஸாதமாக மஞ்சளைக் கொடுத்து ஆனந்தத்தில் திக்கு முக்காடச் செய்தார். அவளது கருணையை எண்ணியபடியே பிரஹார வலம் வந்தோம்.எங்களுக்கு நேரம் மிகக் குறைவே இருந்தபடியால் முழுதும் கோவிலைப் பார்க்கமுடியவில்லை. காலைச்சிற்றுண்டிக்குப் பின் திருப்பரங்குன்றத்துக் குடைவரை கோவிலை தரிசிக்கச் சென்றோம். அழாகான முருகனை மணக்கோலத்தில் கண்டு மனமகிழ்ச்சியோடு ஊர் திரும்பினோம். மீண்டும் தமிழகம் வரும் போது அவளைக் காண அவளே அருள் புரிய வேண்டுகிறேன். என்றும் அன்புடன், பவித்ரா
உங்கள் அனுபவங்களை பகிர்ந்ததற்கு நன்றி பவித்ரா. மீனாட்சியம்மையை தரிசனம் செய்ய, கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீங்களும், உங்கள் கணவரும் இரு முறை தரிசனம் செய்தீர்கள். அர்த்த ஜாம பூஜையைக் காணும் பேறும் கிட்டியதென அறிய, மேலும் மகிழ்ச்சி. என்னால் அரை நாள் மட்டுமே அக்கோயிலில் இருக்க முடிந்தது. எனவே கோயிலை முழுமையாக இன்னும் சுற்றி பார்க்கவில்லை தான். பின்னாளில் ஒன்றிரண்டு முறை அன்னையை மட்டும் பார்க்க முடிந்தது. முடிந்தால் ஒரு முறை மதுரைக்கும், திருவானைக்காவலுக்கும் செல்ல வேண்டுமென ஆசை தான். உங்கள் கவிதை வரிகளும் அழகு. மீண்டும் நன்றி. -ஸ்ரீ.
அவளின் கருணைக்கு நன்றி ! ஆம் ! மதுரை கோவில் ஒரே நாளில் தரிசித்து முடியக்கூடியதல்ல. அத்துடன் கலையற்புதங்கள் நிறைந்த நம் பண்டைய வழிபாட்டுத் தலங்கள் எதையுமே இரசித்து, சிலாகித்து, தரிசிக்க நிச்சயம் நிதானமான கால அவகாசம் தேவைப்படும். பஞ்சபூத ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்து மகிழும் பேற்றை எனக்கருளிய இறைவனைத் தொழுது, மீனாக்ஷியாயும் அகிலாண்டேஸ்வரியாயுமுள்ள அன்னை உங்கள் ஆசையை சீக்கிரமே நிறைவேற்றித் தரட்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். உங்கள் எண்ணப் பதிவிற்கும் பாராட்டிற்கும் நன்றி, RGS !
நல்ல கவிதை. பள்ளியறை தரிசனம் கிட்டியது பெரும் பாக்கியம். எங்கள் அங்கயற்கண்ணியை இவ்வளவு அழகாக பாடியதற்கு மிக்க நன்றி
@PavithraS பவித்ரா நீங்கள் சொன்னதை கேட்டதும் மதுரைக்கு சென்று பள்ளியறை பூஜையையும் திருப்பள்ளி எழுச்சி பூஜையையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுகிறது .ஏழு ஆண்டுகள் மதுரையில் இருந்தேன் .சித்திரை திருவிழா பார்த்திருக்கிறேன் .ஆனால் இரவு நேர பூஜைக்கு சென்றது இல்லை .மீனாட்சியின் அருளால் என் ஆசை நிறைவேறும் என்று நினைக்கிறேன்
அன்புள்ள பெரியம்மா- உங்களுக்கு அப்படித் தோன்றும்படி செய்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி ! ஏழு ஆண்டுகள் அவளின் ஊரில் வாழ உங்களுக்குக் கொடுத்து வைத்திருந்தது பாக்கியமே ! பள்ளியறை நேரத்துப் பூசையைக் காண வேண்டுமென்கிற உங்கள் ஆசையை வெகு விரைவில் அந்த அன்னை நிறைவேற்றித் தரட்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். தங்களுக்கு என் தீபாவளி நமஸ்காரங்கள் !
@periamma @PavithraS iruvarukkum Namaskaram. netru iravu Meenakshi annai thiruvilai-adal onrai patri induslite snippet non fiction il post cheithullzhen, thalaippu - Meenakshi vs. Rose peter and His horse stallion. enna oru otrumai. thangal post cheiyya nanum adhey subject post cheidhulleyn. mudinthapodhu padithu thangal karuthai post cheiyavum. thamil font laptopil illathadhal tanglishil ezhuthi ulleyn. srimathukku mannikavum. Happy Deepavali