காதலிக்க நேரமுண்டு! கோயில்பட்டி போயுனக்கு கடல மிட்டாய் வாங்கி வந்தேன் தோப்பு ஓரம் ஒதுங்கி நாமும் தினம் தினமும் தின்னலாண்டி! கண்ணே... முறைப் பெண்ணே! உன்னைக் கண்டேன் காதல் கொண்டேன்! மணப்பாறை போயுனக்கு மணி முறுக்கு வாங்கி வந்தேன் - மனம் திருடி போனவளே மறுக்காம ஓடி வாடி! மானே! புள்ளி மானே!! உனக்கு நானே, தெள்ளுத் தேனே! கடலமிட்டாய், கை முறுக்கால் கணக்கு பண்ண பாக்கிற நீ காலமெல்லாம் குடும்பம் நடத்த காசு பணம் வேண்டுமய்யா மாமா! முறை மாமா!! முன்னேற முனை மாமா! என் தாய் மாமா!! முத்தாரம் வாங்க எண்ணி முத்தங்காடி போயி வந்தேன் - உன் முறுவலிக்கும் பல்லழகில் முத்துச்சரம் தோற்றதடி; முத்தம்மா என் முத்தம்மா! பதிலா முத்தமா தாரேன் மொத்தமா!! உனக்கு முத்தமா தாரேன் மொத்தமா!! முத்துச்சரம் எனக்கு வேண்டாம்; முத்தமும் இப்போ தரவும் வேண்டாம்; மூணு காசு சம்பாதிச்சு மொறயா முடிச்சு போட பாரு மாமா பொறு மாமா! முறை மாமா! முறைக்கலாமா? மூணு காசு என்ன கண்ணே மூவுலகே முறியடிப்பேன் - இப்போ அச்சாரம் தாரேன் - உன்னை அள்ளி அணைத்து சொல்லி தாரேன் முத்தம்மா எந்தன் பக்கம் வா; உன்மேல் பித்தானேன் நான் சுத்தமா! என்ன மறுக்காதே நீ மொத்தமா!! அச்சாரம் எடுப்பதற்கு அவகாசம் இப்போ எனக்கு இல்ல; உன் அவசரமும் புரிஞ்சுதானே அருகே வர மறுக்கிறேன் நான் கல்யாணம் பின்னே கச்சேரி - அதுக்கு முன்னாலே காசு சம்பாரி; வாங்காதே பேரு ‘சோம்பேறி’. கழனிக்கு போற புள்ளே காலமெல்லாம் உழைக்கிறயே (ஒரு நாள்) கழனிய விட்டு புட்டு காதலுக்கு நேரம் கொடு கண்ணாட்டி எந்தன் கருப்பட்டி- வரும் காலமெல்லாம் நீயே பொண்டாட்டி!! கழனியிலே உழைச்சாத்தான் கவளம் சோறு கிடைக்கு மையா; அந்த கவள சோத்துலதான் (என்) குடும்பமே பிழைக்குதய்யா! கஞ்சி தண்ணி குடிக்க கூட காசு பணம் வேணுமைய்யா! அக் காசும் நேர்மையாக சம்பாரிக்க வேணுமய்யா! காதலுக்கும் காலமுண்டு; கடமைக்கும் காலமுண்டு; கடமையை முடிச்சாத்தான் காதலும் இனிக்குமய்யா! மாமா, முறை மாமா!! மனசை என்றோ திருடி விட்டாய்! நானும் உனை எண்ணித்தான் நாளெல்லாம் தவிக்கின்றேன். உழைச்சு நீ முன்னேறினா உன் மனைவி என்று சொல்ல எனக்குமே பெருமை ஐயா; நம் வாழ்வு சிறக்குமய்யா! உழைப்பாய் நீ பொறுப்பாய்! உற்றோரும் பெற்றோரும் உன்னையே விரும்பி என்னை கட்டி வைப்பார் நிச்சயமே!! காதலிக்க நேரமுண்டு; கன்னியுண்டு, காளை யுண்டு; கல்யாணம் கட்டியபின் காதலுக்கு செய்வோம் தொண்டு!! வாழிய காதல்; வாழ்க இக்காதலர்! வாழ்க நலமுடன்; வாழ்க வளமுடன் அன்புடன், RRG (பி.கு.) ‘சோகக் கவிதையன்றி வேறு ஒன்றும் வரையாயோ?’ என நேசித்தோர் பலர் வினவியதால் விளைந்தது இது. வாசிப்போர் பெரும்பாலோர் வரவேற்பு சந்தேகம்- ஆயினும் வித்தியாச படைப்பினிலே எனக்கு ஓர் நிறைவு; உண்மை!