பாபா எப்போதும் உன்னுடன் இருப்பார் பாபா மறைந்த தினத்தன்று, பல பக்தர்கள் பாபா தங்களை நிராதரவாக விட்டுச் சென்றுவிட்டதாக பயந்தனர். அப்பொழுது பம்பாய் பெண்மணி ஒருவர் முன் தோன்றி "தாயே! நான் இறக்கவில்லை. நீ எங்கிருந்தாலும், என்னை நினைத்த மாத்திரத்தில் எந்த ஒரு நேரத்தில் நீ விரும்பினாலும் நான் அங்கே இருப்பேன் (உடலுடன் கூடியோ இல்லாமலோ)" என ஆறுதல் அளித்தார். தாமோதர் ராசனே என்ற பக்தருக்கும் பாபா அந்த உறுதிமொழியை அளித்தார். நரசிம்ம ஸ்வாமியை சந்தித்த ராசனே 1918-ல் பாபா மகாசமாதி அடைந்த பின்னரும் அவர் பல தடவைகள் பாபாவை சரீரத்துடன் நடமாடுவதைக் கண்டதாகவும், அந்த சரீரி தம்முடன் பேசியதாகவும் கூறினார். பாபா இன்றும் நம்முடன் இருக்கிறார் என்பதற்கு இதுவே அத்தாச்சி. தன்னை நம்பியவர்களுக்கு பாபா என்றும் உயிருடன் இருக்கிறார்.
பாபாவின் மீதான உங்களின் உண்மையான அன்பு சாய் பக்தர்களாகிய நாம் தினமும் குறைந்தது பத்து நிமிடமாவது பாபாவிற்காக ஒதுக்க வேண்டும். அன்றாட அலுவல்களுக்கு இடையே வெறும் பத்து நிமிடம் ஒதுக்குவது பெரும்பாலோருக்கு சவாலான காரியமே. பாபாவின் படத்தின் முன்னர் அமர்ந்து அவரது நாமத்தை பத்து நிமிடம் சொல்லுங்கள். வேறு எந்த ஒரு சிந்தனையும் இல்லாது பாபாவையே உற்று நோக்கிய வண்ணம் இருங்கள். காலை அல்லது மாலை உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யுங்கள். ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருக்கலாம், மனம் அலைபாயும். ஆனால் பயிற்சியும், பாபாவின் மீதான உங்களின் உண்மையான அன்பின் மூலம் இது சாத்தியப்படும். நாளடைவில் பாபாவின் உருவம் எப்போதும் கண்களில் இருக்க, பாபாவின் நாமம் மனதில் ஒளித்துக்கொண்டே இருக்கும். இன்று மிகவும் புனிதமான நாள், எப்போதும் நம்மை காக்கும் தெய்வத்தின் நாம ஜெபத்தை இந்த நன்னாளில் தொடங்குங்கள். பாபாவின் அருள் இருந்தால் மட்டுமே சாயி நாமத்தை சொல்லமுடியும். தொடர்ந்து சாயி நாம ஜபம் செய்பவர்கள் நிச்சயமாக பாபாவால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களே ! சந்தேகமே வேண்டாம். "ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி"
நீ செய்யும் ஒவ்வொன்றும் எனக்கு தெரியும் மதியப் பொழுது ஆரத்தி முடிந்த பிறகு ஒரு முறை பக்தனோடு பேசிக் கொண்டிருக்கையில் சாய்பாபா சொல்லியிருக்கிறார்; " உனக்கு எங்கு விருப்பமோ அங்கு இரு. என்ன தெரிந்தெடுக்கிறாயோ அதையே நீ செய். ஆனால் ஒன்று நினைவிருக்கட்டும். நீ செய்யும் ஒவ்வொன்றும் எனக்கு தெரியும். நான் தான் நடத்துனர். அசைவன அசையாவன என அனைத்திலும் நானே இருக்கிறேன். அனைத்து உணர்வுகளின் இயக்குனன். ஆக்குபவன், காப்பவன், அழிப்பவன். என் பக்கம் கவனம் முழுவதையும் பதித்து விடுவோனை எதுவும் அழிக்காது. ஆனால், என்னை மறந்து விடுபவனை மாயை அழித்தே விடும். புழு பூச்சி முதல் சுழலும் கோள்கள் உட்பட பிரபஞ்சங்கள் அனைத்துமே நான் அல்லது என் பிற வடிவங்கள்".
இவற்றிற்காக நீர் எம்மிடம் வரவேண்டியதில்லை நானா(பாபாவின் பக்தர்); பாபா, தாங்கள் எல்லாவற்றையும் அறிவீர்கள். தங்களுடைய பாதுகாப்பிலிருந்தும் கூடவா எங்களுக்கு இந்த துக்கங்கள் நேரவேண்டும்? [உறவினர்களின் பிரிவு,இழப்பு போன்றவை] பாபா: உமக்கு நெருக்கமானவர்களின் நலனை எண்ணிக் கொண்டு அதன் பொருட்டு நீர் இங்கு வருகிறீரென்றால், அது தவறு. இவற்றிற்காக நீர் எம்மிடம் வரவேண்டியதில்லை. இவை என் சக்திக்கு உட்பட்டவை அல்ல. இவை(குழந்தை பிறப்பது, உறவினர் இறப்பது போன்றவை) ஊழ்வினையைப் பொருத்தது. தேவாதி தேவனானவரும், உலகையே படைத்தவருமான, பரமேச்வரனால் கூட இவற்றை மாற்றிவிட முடியாது. அவரால் சூரியனையோ சந்திரனையோ நோக்கி, 'வழக்கமாக உதிக்கும் இடத்திலிருந்து இரண்டு கஜம் தள்ளி உதிப்பாய்' எனக் கூற இயலுமா?இயலாது, ஏனெனில் அவரால் முடியாதது மட்டுமின்றி, அவர் அப்படி செய்யவும் மாட்டார். அது ஒழுங்கின்மை, குழப்பம் விளைவிக்கும். நானா:அப்படி என்றால்,ஒருவரிடம் "உனக்கு குழந்தை பிறக்கும்" என தாங்கள் கூறுகிறீர்கள், அவருக்கு குழந்தை பிறக்கிறது. மற்றொருவரிடம் "உனக்கு வேலை கிடைக்கும்" என் சொல்லுகிறீர்கள், அவருக்கு வேலை கிடைக்கிறது. இவை எல்லாம் தங்களுடைய அற்புதங்கள் அல்லவா? பாபா: இல்லை, நானா. நான் எந்த சமத்காரமும் செய்வதில்லை. கிராமத்து ஜோதிடர்கள் சில தினங்கள் முன்னதாகவே பின்னர் நடக்கப் போவதைக் கூறுகிறார்கள். அவற்றுள் சில பலிக்கின்றன. நான் அவர்களை விட எதிர்காலத்தை தீர்க்கமாகப் பார்க்கிறேன். நான் கூறுவதும் நடக்கிறது.என் வழியும் ஒருவகை ஜோதிடத்தைப் போன்றதே. உங்களுக்கெல்லாம் இது புரிவதில்லை. உங்களுக்கு.என் சொற்கள் அற்புதங்களாகத் தோன்றுகின்றன; ஏனெனில் நீங்கள் எதிர்காலத்தை அறியமாட்டீர்கள். ஆகையால் நிகழ்ச்சிகளை நீங்கள் எமது அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தியாக முடிவு செய்து, எம்மிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுகிறீர்கள். பதிலுக்கு நான் உங்கள் பக்தியை இறைவனிடம் திருப்பி உங்களுக்கு நலம் உண்டாகச் செய்கிறேன்.