எத்தனையோப் பெரும்புகழுடைய தலைவர்களைக் கண்டது நம் பாரதத் திருநாடு . ஆனாலும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று பார்த்தால், இந்தக் காலகட்டடத்தில் இந்திய நாடு ஈன்றெடுத்தத் தவப்புதல்வர்களுள்,என் நெஞ்சம் கவர்ந்தவர்கள் இருவர். ஒருவர், மதிப்பிற்குரிய- மறைந்த-முன்னாள் குடியரசுத் தலைவர்- திரு. ஆ.ப.ஜெ. அப்துல் கலாம். இன்னொருவர் இன்று (16.08.2018) உயிர்நீத்த, நம் நாட்டின் முன்னாள் பிரதமர், பாரத இரத்னா, திரு.அடல் பிஹாரி வாஜ்பாயி. இருவருமே மெய்யான பிரம்மச்சாரிகள், சுயநலம் கருதா சுத்தமானவர்கள். நாட்டிற்காகத் தாம் பணி மேற்கொண்ட துறையின் மூலம் உண்மையான,கடினமான உழைப்பினை நல்கி பற்பல சாதனைகளைப் புரிந்தவர்கள். வாஜ்பாயி- அவர் சார்ந்த கட்சியின் பெரும் தூணாய் விளங்கியவர், சிறந்த தேச பக்தர், ஊழல் கறைபடியாக் கரங்களுக்குச் சொந்தக்காரர். தேச பக்தர், கவிஞர், பன் மொழி வித்தகர், வெளியுறவுத் துறை வல்லுநர், சமாதானப் புறா, நல்லொதொரு அரசியல்வாதி. இந்தப் புகழுக்கெல்லாம் சொந்தக்காரராய் விளங்கியவரின் மறைவிற்கு என் மனமார்ந்த இரங்கல். அவரது ஆன்ம சாந்திக்கு என்னுடைய பிரார்த்தனைகள். நான் வழமையாய் வாசிக்கும் தமிழ் நாளேட்டின் வாசகர்க் கருத்துப் பகுதியில் ஒருவர்க் குறிப்பிட்டிருந்தார் " நேற்றோ, அதற்கு முன் தினமோ மறைந்திருந்தால், இந்தியச் சுதந்திர தினத்தன்று நம் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருக்கும். ஆனால் சிறந்த தேச பக்தரான வாஜ்பாயி தன் மறைவில் கூட இந்தியத் தாயின் பொற்கொடிப் பட்டொளி வீசிப் பறக்கும் படியாய்ச் செய்துவிட்டார்!" என்று ! படித்ததில் பிடித்ததால் அக்கருத்தைப் பதித்தேன். வாஜபேயயாகம் செய்த குடி பிறந்தீர் ! பாரதத்தின் பிரதமராய் நல்லாட்சி தந்தீர் ! அமைதியாக அணு சோதனை நிகழ்த்தினீர்! கார்கில் போரில் வெற்றியுற்றுக் காட்டினீர் ! தங்க நாற்கரச் சாலைகளைக் காண்கையில், தங்களது பெயரெங்கள் நெஞ்சில் நிற்கும் ! உங்களது கவிதை தம்மைப் படிக்கையில், சிங்கமொத்த உங்கள் வீரம் பளிச்சிடும் ! சமாதானத் தூது செல்லும் குழுவிலே, நிதானமாய்ப் பேசும் உம்மை இணைப்பரே ! அசாதாரணச் சூழலென்ற போதிலும்-தாம் அசந்திடாமல் ஆட்சி செய்த நல்லவர் ! கூட்டணியின் ஆணவத்தின் பலனாய் அன்று, ஆட்சியினைத் தாம் இழந்த போதிலும், மாட்சிமை சிறிதும் குறையா வண்ணம், தாமுரைத்த சொற்களென் நெஞ்சில் நிற்கும் ! "கட்சியைத் தான் கைப் பிடித்தேன்!" என்று ஒருவர் சொல்கிறார்-அன்று, நாட்டுக் கென்றே வீட்டின் உறவைத் தாம் துறந்து தனித்து நின்றீர் ! அகவையொரு தொன்னூறும் நான்கும் வாழ்ந்தீர்! அகத்திலொரு அப்பழுக்கும் இல்லா திருந்தீர் ! முகத்திலொரு சாந்தியுடன் உலா வந்தீர் ! சகத்திலும்மைப் போல் மனிதர்க் குறைவே ஐயா ! பாரதத்தின் இரத்தினாமாய் சொலித்தீர்த் தாமே போர்க்குணத்தை இன்முகத்தால் உரைத்தீர்த் தாமே நேர்மையுடன் பொதுவாழ்வில் இருந்தீர்த் தாமே நேர்த்தியாக வாழ்ந்தின்று மறைந்தீர்த் தாமே ! காலனின்று உங்களுயிர்க் கொண்டு சென்றான்! காலம் உமையெப்போதும் நெஞ்சில் நிறுத்தும் ! ஆலமர விழுதுகளாய் உங்கள் தொண்டர் மாலவனின் மலர்ப்பரப்பி மாநிலம் காப்பார் ! Regards, Pavithra
நல்ல ஆன்மாக்கள் விண்ணை நாடி செல்கின்றனவே.இந்திய தாயின் உத்தம புத்திரரில் வாஜிபாய் அவர்களும் ஒருவரே .அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்
வாஜ்பாயி அவர்களின் 'சம்வேதனா' என்ற நூலில் இடம்பெற்ற ஹிந்தி மொழியில் அமைந்த கவிதை ஒன்று "க்யா கோயா க்யா பாயா ?" [எதை இழந்து எதைப் பெற்றேன்(அ) பெற்றோம்]. அமிதாப் பச்சன் அவர்களது குரலில் ஒலிக்கும் முன்னுரையோடு , ஷாருக் கான் அவர்களின் உணர்வுப் பங்கேற்பில்,கசல் வல்லுநர், ஜகஜித் சிங் அவர்கள் இசையமைத்துப் பாடிய காணொலி சார் இசை வடிவத்தின் இணைய இணைப்பு...