ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள் ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்த மாகுமே. ---------------திருமூலர் திருமந்திரம் ஆசை அழச் செயும் படிந்து தொழச் செயும் கீழே விழச் செயும் எண்ணம் கீழ்ச் செயும் நன்மை பாழ்ச் செயும் உணர்ச்சி தாழ்ச் செயும் வருத்தம் எழச் செயும் வன்மம் உழச் செயும் வலிமை இழச் செயும் பந்தம் ஆழ்ச் செயும் ஒன்றை ஏழ்ச் செயும் தொடர்ந்து ஊழ்ச் செயும் என்றேப் பற்பலர் சொல்லியிருக்கிறார் ! ஆசையறுத்தொரு புத்தனாகிடும் ஆசை கொள்வதும் அசட்டுச் செயலன்றோ ? Regards, Pavithra
அத்தனைக்கும் ஆசைபடுவதா ? ( pun intended) ... புத்தர் ஆவதற்கு ஆசைபடுவது தவறா ? அதுவும் ஆசை அல்லவா ? சும்மா இருந்திடல் முடியுமோ ? ஆசைபடுவதும் அனுபவமே. அனுபவம் அளிக்கும் பாடத்தை கற்றால் ஆசைகளை கடந்து விடலாமா? தங்கள் கவிதையின் தாக்கம் மிக ஆழம். நன்று பவி!
அழகான பின்னூட்டத்திற்கு நன்றி,லக்ஷ்மி ! குறும்பையும் இரசித்தேன் . எப்பொருளெனிலும் அதன் மெய்ப்பொருள் காணத் துணியாது நுனிப்புல் மேயும் சாதாரணர்கள் தாமே நாம் பலர் ? ஆகையால் ஆசையின் காரணமாய்ப் பெறும் அனுபவத்தின் பாடங்களை அறிய ஆசை கொள்பவர்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கக்கூடும் ? இருப்பினும் உலகத்தின் உயிர்களெல்லாம் இச்சை,கிரியை,ஞான சக்திகளால் உந்தப்படுபவையே. அவரவற்றின் சூழலையும் தேவையையும் பொறுத்தே அப்பரம்பொருள் இந்த மூன்று குணாதிசயங்களை நம்முள் பகிர்ந்தளித்திருக்கின்றது. இச்சையாகிய ஆசையின் தூண்டுதலால், கிரியையாகிய செயல் புரிந்து, அதனாலுண்டாகும் அநுபவ ஞானமென்னும் அறிவை அடைவதில் தான் சூட்சுமமே அடங்கியிருக்கின்றது. இம்மூன்றில் எதுவும் உயர்வென்றோ மற்றது தாழ்வென்றோ எப்படிக் கொள்ளக் கூடும்? ஆசையறுத்த புத்தனும் ஆசைக்கப்பாற்பட்ட சித்தனும் சொல்லியிருக்கும் எத்தனையோ தத்துவங்களுக்குள் மூழ்கி முத்தெடுக்கவெண்ணும் என்னாசையை என் செய ?
பின்னூட்டத்திற்கு நன்றி பெரியம்மா ! ஆம் ! ஆசை எதுவும் செய்யும் . ஆகவே தான் வள்ளுவர் வழிகாட்டியுள்ளார், பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு .