ஐந்து வயதுக் குழந்தைகளின் மத்தியிலே அமர்ந்திருந்தார் அம்முதிய ஆசிரியை. ஒன்று அவர் மடியிலே; மற்றொன்றோ தோளிலே! இரைச்சலுடன் இனித்திருந்தது வகுப்பறை. "நீ என்னவாகப் போறே? என்று கேட்டு பதில் பெற்றே அடுத்ததைச் சுட்டியவாறே தொடர்ந்தார் அமர்ந்தவாறே! சில படீரென்று தன் முடிவைச் சொல்ல, சில தயங்கி, பின் ஒருவாறு உரைக்க, சில ஒன்றும் தோன்றாது நின்று பின் அமர ஒன்று மட்டும் கேட்டது ஆசிரியை நிமிர. "நீங்க என்னவாகப் போறீங்க?" என்று அது கேட்க, ஆசிரியை தயங்காமல் சொன்ன வார்த்தைகளோ இன்றும் என் மனதில் நின்று நிலைத்திருக்க, முகம் மலரும் புன்சிரிப்பில் மெல்ல.
கேள்வியிலிருந்தேத் தொடங்கும் ஞானத் தேடலென்று வினவியதும் நீவீரோ ? அதையெண்ணி நகைத்தீரோ ? பாட்டியாவேன் என்றோ பதிலளித்தார்? அன்றி இரண்டாம் பால்யம் என்றோ பதிலளித்தார் ? என்னவாவேன் என்றவர் சொல்லியிருப்பார் ? இன்றைய பொழுதிலெந்தன் சிந்தை நிறைக்கும் அன்றைய அவரின் விடையைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தோடே என் நித்தியங்களில் மூழ்குகிறேன் !