Some popular writers very often write essays comparing Kamban with Valmiki,Thiruvalluvar, and others. .நமக்கும் அதுமாதிரி ஏதாவது விஷயம் கிடைக்கிறதா எனும் ஆவலில் கம்ப ராமாயணத்தைக் கையிலெடுத்தேன்.பெரிய கடல்.ஒன்றும் புரியவில்லை. சரி ( கடைசியிலிருந்து),மங்கலத்திலிருந்து ஆரம்பிக்கலாம் என்று பட்டாபிஷேகம் பற்றி படிக்க ஆரம்பித்தேன். யுரேகா ! என்று கத்துவதுதான் பாக்கி. கண்டு கொண்டேன்.கண்டு கொண்டேன். அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி வீச விரைசெறி குழலி ஒங்க; வெண்ணையூர்ச்சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டன் புனைந்தான் மௌலி சோழ தேசத்தில் முடி சூட்டும் விழா அன்று பரம்பரையாக வேளாளர் கிரீடம் காணிக்கையாக அளிக்கும் வழக்கம் உண்டு.சடையப்பனின் முன்னோர்கள் கிரீடம் அளித்ததாகப் பெருமையுடன் கூறுகிறான் கம்பன். இந்த பாட்டில் ஒரு அழகிய நயம் உண்டு.'வசிட்டனே புனைந்தான் மௌலி '-யாருக்கு எனக் குறிப்பிடப் படவில்லை. மாணிக்க வாசகரின் கதையில் ,சிவ பெருமான் பிட்டுக்கு மண் சுமந்தபோது,அரிமர்த்தன பாண்டியன் கூலியாளாக வந்த பெருமான் முதுகில் பிரம்பினால் அடிக்க உலகில் யாவரும் அடிபபட்டனர். அதே போல் கண்ணன் ஒரு வீட்டில் பாலைத் திருடிக் குடிக்க,அதைகண்ட இடைப் பெண் கண்ணன் முதுகில் சிறு குச்சி கொண்டு அடிக்க, அந்த அடி பதினான்கு உலகங்களிலும் யாவர் முதுகிலும் பட்டது என்கிறது திருவரங்கத்து மாலை. சிவ பிரானும் கண்ணனும் தாங்கள் வாங்கிய அடியில் அனைவருக்கும் பங்கு தந்தனர். ஆனால் ராமன் என்ன செய்தார் தெரியுமா? சித்தம் ஒத்தனன் என்றோதும் திருநகர்ச் செல்வமென்ன உத்தமத்தொருவன் சென்னி விளங்கிய உயர்பொன் மௌலி ஒத்து மெய்க்கு உவமைகூற ஓங்கு மூவுலகத் தோர்க்கும் தத்தமதுஉச்சியின்மேல்வைத்ததுஒத்தெனத்தளர்வுதீர்ந்தார் வேதமூர்த்தியான வசிட்டர் இராமபிரான் திருமுடியில் மகுடஞ் சூட்டியபோது அனைவரும் தத்தம் தலையில் மகுடம் சூட்டியதாக உணர்ந்தனர் .எல்லோரையும் மன்னராக்கிக் களிப்படைந்தான் ராமன். மஹாகவி பாரதியின் 'பாரத சமுதாயம் வாழ்கவே 'என்ற பாடல் காதில் ஒலிக்கிறது எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்திய மக்கள், எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க!( பாரத சமுதாயம்) கம்பன் அன்றே பாரதியின் 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்ற கருவுக்கு வித்திட்டு விட்டாரா? jayasala 42