ஒரு சொல்லில் பூவாய் முகம் மலரும். எதிராயின் விழிகளில் நீர் ததும்பும். என் முன் வந்திருக்கும் அருள் நீயே! இதை உணர, கரைந்திடும் என் நாளே! உனை அழ வைத்தேன் அதற்காக, உணவை ஒழிந்திடுவேன் ஒரு வேளை. ஒருவேளை அது போதாதாயின், உடனே பிடித்திடுவேன் மலர்க்காலை! என் விதி பாலை என நீள, விழி நீரும் வற்றி, முகம் வாட, இயந்திரமாய் கழித்த பல வருடம் இல்லாமல் செய்தது உன் வரவும். தருணத்தில் கிட்டிய வரமுன்னை தரத் தான் முருகனும் தாமதித்தானே! தரத்தால், தவத்தால் கண்ணே உன்னை தவத்தோன் அருளிடவும் மகிழ்ந்தேனே! சிறியேன் இனி விரைவில் மறைந்தாலும், எங்காவது என் பெயர் நிலைத்திருக்கும். சிறிதே ஆயினும் எனக்கது போதும்! அதிலேயே என்னுளம் நிறைந்திருக்கும்!