உடுக்கை யொத்த இடியொலியும்,மிடுக்காய் அந்த விடையேறும் அரனின் மூன்றாம் கண் தீப்பொறியாய் கண் பறிக்கும் மின்னலொளியும்,சடாமுடியில் தங்கும் தண்ணென்ற கங்கை ஒத்துக் கொட்டுகின்ற மழையும், சேர்ந்திசை வழங்குகையில் எழுப்புகின்ற தாள இலயம், ஆர்ப்பரிக்கும் மனதிற்குள் மௌனத்தைக் கொண்டு தரும் ! ஈசான்யம் மட்டுமல்ல திசையாவும் கேட்கும் வண்ணம், ஈசானுபவத்தின் ஒலி பிரணவத்தோடு மனதில் புகும் ! மெதுவாய்க் கேட்குமொலி மெல்ல,மெல்ல வேகமேறி அதுவே நாடியெங்கும் நர்த்தனிக்கத் தொடங்கும் போது , ஐம்புலன்கள் செயலிழந்து மனதின் ஆட்டம் நின்றுவிடும் ! அம்புலியைச் சூடியவன் தாண்டவமே தொடர்ந்து விடும் ! எங்கும் நிறையொலியை நம் செவிகளாலே கேட்பதில்லை! பொங்கும் அவனொளியைக் கண்கள் மூலம் பார்ப்பதில்லை ! மழையாய்க் கொட்டும் அவனருள் தனையும் உணர்வதில்லை ! குழைகின்றக் கருணையில் நனைய மனம் நினைப்பதில்லை ! இப்படியே இருந்துவிட்டால் பிறவி பெற்றும் பெருமையில்லை அப்பனவன் பொன்னடிக்கீழ் பணிந்து விட்டால் துன்பமில்லை ! வேட்கின்ற அன்பர்க்கெலாம் பார்ப்பதெலாம் அவன் உருவம் ! கேட்கின்ற ஒலியிலெல்லாம் நிறைவதுவும் இறைவன் நாதம் ! புறத்தெழும் ஆசையொலி நிறுத்திக் கொஞ்சம் உள்ளிருக்கும், அறத்திலுள்ள அன்பினொலி நாம் கேட்கத் தொடங்கிவிட்டால், உருவிலே உறைவதும், அருவமாய்த் திரிவதும், ஆதியந்தமிலா பரஞ்சோதியாய் ஒளிர்வதும்,பரமனேயென்பது நன்கு புரியுமே ! Regards, Pavithra
நான் மௌனமுற்றேன் என்று முதலில் சொன்னதும், நன்று உங்களின் 'ஐந்து' ப(க்)(த்)திமுத்து என்றதும், அங்கணன் குறிப்பினை உணர்ந்தே,நற்றமிழ்க் கவியே ! எங்கேனுமோர் குறிப்புண்டு, செந்தேனாம் உம் கவியில் ! அதைத் தேடிப் பி(ப)டிப்பதே வாசகர் எமக்குத் தொழில்! புதையலைத் தேடுதல்,அதை அடைவதினும் மேலன்றோ? இப்பத்தியை எழுதத் தூண்டியமைக்கு என் நன்றி !
Lovely one Pavithra. சிலருக்கு அகக்கண்ணில் காட்சி அளிக்கிறான். சிலருக்கு ஒலியில் உணர்த்துகிறான். விழிப்புடன் இருந்துவிட்டால் அவனருளோடு ஒலியிலோ ஒளியிலோ அவனை காண முடியும். நமச்சிவாய வாழ்க !
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி, லக்ஷ்மி ! ஆம். ஒளியிலும்,ஒலியிலும் ,மழைத் துளியிலும்,வெளியிலும், உள்ளிலும் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைத்தன்மையை, நமக்கேற்ற வழியைத் தேர்ந்தெடுத்துப்,பயணம் செய்தால் நாமும் உணரமுடியும், அடைய முடியும் . நிலையில்லாத நம் சுயத்தைப் பற்றிய எந்த நினைவுமின்றிக் ,கனவுமின்றி, சிவத்தைப் பற்றியே சிந்திக்கும் ஆழ்நிலை உறக்க நிலை வாய்த்துவிட்டால் , அப்பேரொளி(லி)யைப் ,பார்க்கவும் கேட்கவும், வழிவகுக்கும் விழிப்புநிலை எய்திடலாம்.
Hi, Very good poem. Your signature says it all. Thanks for sharing this lovely spiritual poem. Vaidehi