3) ஆண்டாள் பாடல் (மார்கழி நோன்பினால் விளையும் நன்மைகள் குறித்து) ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப, தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய். பாசுரப் பொருளுரை " வாமனனாய் வடிவம் தாங்கி வந்து , மஹாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் யாசகம் பெற்று, பின்னர் தனது அடியினால் உலகங்கள் அனைத்தும் அளந்து, மஹாபலிக்கும் முக்தியளித்த திரிவிக்கிரம உருவத்தைப் பெருமை பாடி, நாங்கள் நோற்கும் இந்நோன்பினால் ஏற்படும் நற்பலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளுங்கள் ! இந்நோன்பை நோற்பதால், மாதம் மூன்றுமுறை மழை பெய்து நாடு வளமாகும். வயல்களில் நெற்பயிர்கள் ஓங்கி வளரும். அந்த வயல்களில் தேங்கியுள்ள நீரில் வசிக்கும் மீன்கள் மகிழ்ச்சியோடு துள்ளி குதிக்கும். எங்கும் பூத்துக் குலுங்கம் மலர்களிடம் தென் குடித்த வண்டுகள், அம்மலர்களிலேயே மயங்கிச் சரியும். நன்கு கொழுத்திருக்கும் பசுக்களின் வளமான மடியைத் தொட்டுக் கறந்தால் , அப்பசுக்கள் இல்லையென்னாது வாரி வழங்கும் வள்ளலைப் போலப் பாலினைச் சுரக்கும். மார்கழி நோன்பு நோற்றால் இப்படியான செல்வநிலை எங்கும் நிறையும்." பாசுரக் குறிப்பு பாவை நோன்பெனக் குறிக்கும் சரணாகதி மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றிக் கூறுகிறாள். நல்ல குருவின் மூலம், சரணாகதம் செய்யும் வழி உபதேசம் பெற்று, இறைவனை அடையும் முறையை ஆண்டாள் காட்டித் தருகிறாள். குருவின் மூலமே இறைவனை அடைய வேண்டும் என்ற கருத்து திருப்பாவையில் அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆச்சார்யருக்கு இருக்க வேண்டிய இயல்புகள், அவர் இறை நெறியில் ஈடுபட எண்ணும் அடியவருக்கு செய்யும் உபதேசங்கள், காட்டித் தரும் அறிவு, பாதை இவையெல்லாம் பாசுரங்களின் உட்கருத்தாக இருக்கின்றன. அறிஞர் பெருமக்கள் தந்திருக்கின்ற இவ்விளக்கங்களை, என்னால் இயன்ற வரை வார்த்தைகளில் அடக்கித் தர முயன்றிருக்கிறேன். பிழை பொறுத்தருள வேண்டுகிறேன். அவதார பஞ்சகத்தின் உலகளந்த உத்தமன் வாமன(திரிவிக்கிரம) அவதார விபவ நிலை குறிக்கப்பட்டுள்ளது. கண்ணன் கீதையில் அர்ஜுனனுக்குச் சொன்ன ,வைணவ நெறியின் இரஹஸ்யத் த்ரயத்தில் ஒன்றான சர்மஸ்லோகத்தைக் குறிக்கும் பாசுரம். கண்ணன் சொன்ன சர்மஸ்லோகம் ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: (" நீ செய்யும் தர்மங்களே மோக்ஷ உபாயம் என்பதைக் கைவிட்டு, என் ஒருவனையே சித்தோபாயமாகப் பற்றிக்கொள், நான் உன்னை அனைத்து பாபங்களில் இருந்து விடுவிக்கிறேன்.")
பதார்த்தம்- சொற்பொருள் அரக்கன் செருக்கு அழிந்திடு வண்ணம், (அரக்கன்- இவ்விடம் குறித்தது அரசன் மகாபலியை) இரக்கம் கொண்டு அவன் உய்யுமாறு, திருக்குறள் அப்பனாய் மூவடி இரந்து, (வாமன உருவைத் திருக்குறள் (சிறிய)உருவெனச் சொல்வர்) திரி விக்கிரமனாய் உருவம் கொண்டு, திருவடி தூக்கிப் பேரருள் செய்திட்டக், கருணை நிறைந்த இறைவன் நாமம், கருத்தில் நிறைத்து இசைத்துப் பாடி, விரதம் தொடர நமக்குக் கிடைக்கும், அருமைப் பலன்கள் உரைக்கக் கேளீர் ! கருமுகில் சூழ்ந்து மாதம் மும்முறை, சரியளவு பெய்யும் மழையால் உறுபசி தீரும் வகையினில் நெற்பயிர் வளரும்! பெருஞ் செழிப்புடன் திகழும் வயல்களில், இருக்கும் மீன்கள் துள்ளி குதித்தாடும் ! கருவண்டுகளோ மலர்க் கள் துய்த்ததில், - இருவிழி மயங்கி உறக்கம் கொள்ளும் ! அருந்திறன் படைத்த ஆவின் இடையர், கரத்தால் அவற்றின் மடியைத் தொடவும், சுரக்கும் பாலால் நிறையும் குடமெனத், திருவும் பலவாறேப் பல்கிப் பெருகிடுமே ! வாமன அவதாரம்: மஹாபலி அரக்கனாயினும், சிறந்த விஷ்ணு பக்தன். பக்தப் பிரஹலாதன் வம்சத்தில் வந்தவன். அவன் தேவர்கள் தலைவன் இந்திரனிடமிருந்து கவர்ந்த உலகங்களையெல்லாம் மீட்பதற்காக, நாராயணானாகிய விஷ்ணு, காஷ்யப முனிவருக்கும் அதிதி தேவிக்கும் மகனாகப் பிறந்ததே, வாமன அவதாரம்.பாகவதனாகிய மஹாபலியின் பெருமை உலகறியச் செய்த அவதாரம் வாமன அவதாரம். மஹாபலியிடம், வாமனர் மூன்றடி நிலம் தானமாகக் கேட்க, அசுரர் குரு சுக்ராச்சாரியார் தடுத்தும் பொருட்படுத்தாத மன்னன் மஹாபலி, வந்திருப்பவன் பரமன் என்றுணர்ந்து, தன்னுடைய பேற்றினையெண்ணிப் பெரும் மகிழ்வோடு தானம் தந்தான். தானம் பெற்றதும், வாமன(சிறிய) உருவிலிருந்து மாற்றம் பெற்று, திரிவிக்கிரமனாய் வளர்ந்து ,பெரும் உருவெடுத்து, ஈரடியால் பூ ; புவ ,சுவ என்ற உலகங்கள் அளந்தார். மூன்றாவது அடியை மாவலிச் சக்கரவர்த்தியின் தலையில் பதித்து,அவனை உய்வித்தார். உலகங்கள் அனைத்திற்கும் ஈடானது பக்தன் இறைவன் மீது கொண்ட பக்தி என்று கொண்டு மூன்றாம் அடியை அவன் தலையில் வைத்தார். ஓங்கி உலகளந்த உத்தமன் - திரிவிக்கிரமன். பரந்தாமனாகிய விஷ்ணு, தன்னுடைய வாமன அவதாரத்தில் அனைத்து உலகங்களையும் தன் திருவடிகளால் அளந்த போது , இவர் நல்லவர் இவர் பொல்லாதவர் என்று வேறுபாடின்றி அனைத்துயிர்களுக்கும் தன் கருணையைப் பொழிந்தவன் ஆதலால் அவன் உத்தமன் என்று குறிக்கப்படுகிறான் . தீங்கின்றி திங்கள் மும்மாரி- ஒன்பது நாட்கள் வெயிலும் ஒரு நாள் மழையுமென முப்பது நாட்களுடைய மாதத்தில் அதிகமும் குறைவும் இல்லாது சரியளவில், மூன்று முறை மழை பொழிவது பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண் படுப்ப- தேனுண்ட பின் பூவிலே மயங்கும் வண்டுகள் ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகள - நன்கு வளர்ந்த நெற்பயிர் வயல்களில் தங்கும் நீரில் மீன்கள் துள்ளுகின்றன வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்- கறக்கக் கறக்கப் பாத்திரத்தை நிரப்பும் வகையில் பால் கொடுக்கும் செழித்தப் பசுச்செல்வங்கள் திங்கள் மும் மாரிபெய்து,ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகள,பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்- முல்லைத் திணையின் அறம், சோறு, பால், பொருள் போன்ற செல்வ வளம் குறிக்கப்படுகிறது.
தத்வார்த்தம் - உட்பொருள் மெல்லவோர் தேகநிலை அதனைக் கடந்து, வல்லதாம் மனதின் தத்துவமும் உணர்ந்து , சொல்லுதற் கரியதோர் ஆனந்த நிலையை, நல்லார் அல்லாரென்று வேற்றுமை இன்றி, எல்லாருமுற்றிட தன்னருள் நல்கும் இறை, . பொல்லா வினைகள் தனை அண்டாதிருக்க வல்லான்- ஒப்பென்று வேறொன்றும் தனக்கு இல்லான்-அவன் திருநாமங்களை வாயாரச் சொல்லிப் பணிந்து சரணம் அடைந்திடில், நல்லனவாம் பலன்கள் நாமும் பெறலாமே ! நல்வழியாம் இறைத் திருவடியைப் பற்றச் சொல்லித் தருவதிலே இன்புறும் ஆசானும், நல்லாசிரியர் வாய் மொழிந்த வழியினிலே செல்லும் உயர்வான நோக்குடை அடியாரும், நல்லதாம் இறைப் பெருமை உரைக்கின்ற நூல்களைக் கற்கின்ற பேறோடு- கோவிலுறை கல்லுருவில் விளங்கிடும் இறை வணங்கி, நல்லருளைப் பெறுதல் பலனுள் ஒன்றாமே ! வல்லதாம் விரதமிதை மேலும் நடத்துங்கால், பொல்லாதவை நீங்கி இதயமாம் கமலத்துள், நல்லமுதாய் பக்தியெனும் தேன் துளிர்த்திட, வல்லான் இறைவனுமே உடனே மகிழ்வோடு நல்லடியார் நெஞ்சில் உறைவதும் நற்பலனே ! எல்லா உயிர்களுக்கும் அன்னையெனத் திகழும் நல்லாவின் மடி போன்றே ஆசானென்பவரே ! வல்லதாம் அவ்வாவின் மடிசுரக்கும் ஒப்பற்றப் பாலாம் இறைநெறிகள் கறந்து கற்றுய்யும் நல்ல மாணவராய் இருந்து இறையருளின் செல்வம் சேர்க்கின்ற சரணாகத விரதமிதை நல்லமுறை நடத்திப் பலனையும் பெறலாமே ! ஓங்கு பெருஞ்செந்நெல் -சரணாகதம் செய்கின்ற எண்ணத்தோடு ஆசிரியரை அணுகிப் பயனுறும் மாணவர்களே, நன்று வளர்ந்த நெற்பயிர்கள் ஊடுகயல் உகள - சரணாகதம் என்னும் இரகசிய வழியை, மாணவர்களுக்குச் சொல்லித்தருவதில் ஆனந்தம் அடைபவர்கள் நல்லாசிரியர்கள் -- அவர்களே துள்ளும் மீன்கள். இருவரும் நன்றாய்த் துய்த்து அனுபவிக்கும் படியான இறை நூல்களைக் கற்றும், சிலையுருவில் உள்ள இறைவனை வணங்கியும் அடையும் இன்பம் ஒரு நற்பலன். மும்மாரி- ஆச்சார்ய உபதேசம் பெறுதல், திவ்யப் பிரபந்தப் பாசுரங்களைப் பாடுதல், திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனை வழிபடுதல் பூக்குவளை - இதயத் தாமரை; வண்டு - இறைவன்; பூவில் சுரக்கும் தேன் நாம் செய்யும் சரணாகதி, செய்த சரணாகதியால் மகிழ்ந்து இறைவன் நமை ஆட்கொள்வான். கண் படுப்ப - தன்னுடைய அருள் பெற்ற ஆச்சார்யர்களின் உபதேஸங்களால் இறையறிவு பெற்று ,சீவாத்மாக்கள் தத்தமது நெஞ்சில் தன்னை நிலைநிறுத்திச், சரணடைந்து விட்டனர் என்பதனை அறியும் இறைவன் , பக்தர்களின் இதயத்தில் ,கவலையின்றி, ஆனந்தாமாகத் துயில்கிறான். தேங்காதே சீர்த்த முலை பற்றி - ஸதாச்சார்யனை (நல்லாசான் ) நாடிப் பணியும் ஸத்ஸிஷ்யர்கள் (நல்ல சீடர்கள்) , அவர்கள் தரும் ஞானப் பாலைக் கறந்து பலனுறுகிறார்கள். வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பசுக்கள்- பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்காத ஆசிரியர்கள், அவர்கள் சொல்லித்தரும் சரணாகத இரகசியமே உயர்வான பால் ,பலன். நீங்காத செல்வம் நிறைந்து- குருவின் மூலம் உபதேஸம் பெற்று, திருவை முன்னிட்டுப் பரமனைச் சரணம் செய்து , இறைத்தொண்டு எனும் கைங்கர்யம். செய்யும் வாய்ப்புப் பெறலாம் என்கின்ற ஞானமே என்றும் நிலைக்கும் செல்வம் .இதுவே வைணவ நெறியின் இரஹஸ்யத் த்ரயத்தின் மூன்றாவது மந்திரமான சர்மஸ்லோகத்தைக் குறிக்கும். என்னைச் சரணாகதி செய்தால், உன்னை நான் பாவங்களிலிருந்து விடுக்கிறேன் என்று கண்ணன் சொன்னதே பலன், செல்வம்.
ஓங்கி உலகளந்த உத்தமன்- ஜீவாத்மாவானது,இறைவன் திருவடி அருளால், தேஹ நிலையான பூலோகம், மனோநிலையான புவலோகம் இவற்றைக் கடந்து விட்டால், தனது உண்மையான ஆனந்த நிலையான சுவ லோகத்தை அடைந்து (மஹாபலியின் தலையில் வைத்த மூன்றாவது அடியின் குறியீடு), மோக்ஷத்தைப் (வீடுபேறு) பெற்றுவிடும். இது இன்னாருக்குத் தான் கிட்டும், இன்னின்னார்க்குக் கிடையாது என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. வேறுபாடுகளின்றி,தன்னைச் சரணமடைந்த எல்லோருக்கும் ஆனந்த நிலையை அளிக்கவல்ல பெருங்கருணையாளன் பரமாத்மா. அவன் உத்தமன். இதுவே எங்கும் வியாபித்திருக்கக் கூடிய வாமனனாக வந்த திரிவிக்கிரம தத்வம். மஹாபலி - இறைவனை அடைய முயலும் சிறந்த நோக்கத்தைச் செல்வமாகப் பெற்றுள்ள ஜீவாத்மாவின் குறியீடு. பூ ,புவ ,சுவ என்ற மூன்று உலகங்களென்பது, நமது ஆத்மாவின் மூன்றடுக்கு நிலையின் குறியீடு. பூ : லோகம் என்பது , ஐந்து இந்திரியங்கள்,(மெய் ,வாய், கண்,மூக்கு,செவி )ஐம்பூதங்கள்,(நிலம், நீர்,நெருப்பு, காற்று,ஆகாயம்) ஐந்து கோஷங்கள் (அன்னம்,ப்ராணம் ,மனம்,விஞ்ஞானம்,ஆனந்தம் என்பதான ஐந்து அடுக்குகள்,போர்வைகள்) -இவற்றாலான நமது தேஹத்தின் (உடல்) குறியீடு. (தேஹ தத்வம்.) ஜாக்ரதம் -இந்த உடல் தான் தான் என்று தன்னைப் பற்றி ஆன்மா எண்ணுகின்ற சாதாரண நிலை. விழிப்பு நிலை. புவ :லோகம் என்பது - தேஹத்திலிருந்து இன்னும் உட்புகுந்த ,சுவாசம்,ப்ராண சக்தி (மனஸ் தத்வம்). ஸ்வப்னம் - ஒரு ஆன்மாவை மற்றவர் எப்படி உணர்கிறார் என்பதான நிலை. அது மனதைப் பொறுத்து அமைகிறது. நல்லவர், தீயவர் வல்லவர், அப்பிராணி போன்ற குண நலன்களை வைத்துப் பிறர் நம்மை அளவிடுகிறார். -இது ஒரு கனவு நிலை . சுவ : லோகம் என்பது மனத்திலிருந்து இன்னும் உட்புகுந்த, ஆனந்த நிலை. (மோக்ஷ தத்வம்) இதுவே சீவாத்மாவின் உண்மையான நிலை. இதிலிருந்தே, இறைவன் திருவடியருளால்,மோக்ஷம் என்பதான, வீடுபேறு வாய்க்கும். ஸுஷுப்தி - இதுவே ஆன்மாவின் உண்மையான நிலை. விழிப்பாகிய தேகம், கனவாகிய மனம் போன்றவற்றைக் கடந்து, நிலையான ஆனந்தத்தில் இருக்கும் ஆழ்நிலை உறக்கம் போன்றது. ஜீவாத்மாவின் இந்த மூன்று நிலையைக் கடந்து இறைவன் திருவடி அருள் பெற்றால், முக்தி கிடைக்கும் என்பதே வாமன அவதாரக் குறியீடு. ஆன்மாவானது,ஜாக்ரதம் ,ஸ்வப்னம்,ஸுஷுப்தி ஆகிய மூன்று நிலையைக் கடந்த பின்னே,நான்காவது நிலையாக துரிய நிலையை,(பௌத்த மதத்தின் 'ஷூன்யம்' இதன் சாயலே !) அதாவது ஆழ்நிலைக்கும் அப்பாற்பட்டப் பேரானந்த நிலையை, ஸமாதி என்று கொள்ளலாம் ,அடைந்துவிடும் என்ற தத்துவத்தை மாண்டூக்ய,சாந்தோக்கிய போன்ற உபநிடதங்கள் உரைக்கின்றன.
ஆம் பெரியம்மா, ஆன்றோர்கள் திருப்பாவைக்கு அளித்திருக்கும் விளக்கங்கள் மிக அருமையானவை ! ஆண்டாளைப் படிக்கப் படிக்க, அவளது சொற் பிரயோகங்களின் காரண காரியத்தை ஆராயும் எண்ணம் மிகுகிறது. வாமன அவதாரக் குறியீட்டை அப்படித்தான் தேடித் தேடித் தெரிந்து கொண்டேன் ! ஆண்டாள் எவ்வளவு சிறந்த அறிவாளி ! பெண்களுக்கு அவள் சிறந்த எடுத்துக்காட்டு, முன்மாதிரி ! உங்கள் மனப்பூர்வமான பாராட்டிற்கு மிக்க நன்றி ! என்னிடம் எவ்வளவோ குறைகள் உண்டு,பெரியம்மா ! ஆயினும் என்னைப் பற்றி எனக்குள்ள ஒரு ஆறுதலான விஷயம், எனது உழைப்பு. எனக்கு அதிருஷ்டத்தில் பிடிப்பில்லை . முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தருமென்று நான் திடமாக நம்புபவள் . மகிழ்ச்சியாக இருந்தாலும், மன வருத்தத்தோடு இருந்தாலும், ஏதோ ஒரு வேலையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வது எனக்குப் பிடித்திருக்கிறது. அப்படிப்பட்ட முயற்சியினால் பிறருக்கு உதவியாக என்னால் எட்டுணையெனும் செயலாற்ற முடிந்தால், அதுவே எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ! என்றும் அன்புடன், பவித்ரா
அன்புள்ள பவித்ரா, உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.இவ்வளவு முயற்சி எடுத்துக் கோதை நாச்சியாரையும் ஓங்கிய உத்தமியாக்கி விட்டீர்கள். ஆரபி ராகத்தில் இந்த பாடலை வசந்த குமாரி அவர்கள் பாடும்போது சொக்கித் தான் போவோம். எனக்கு இந்த பாட்டைக் கேட்கும் போதெல்லாம் ஒரு சந்தேகம் வரும். முதல் செய்யுளில் வ்யூஹ அவதாரம் எனப்படும் ( நாராயணனே நமக்கே பறை தருவான்) என்று பாடினாலும்,இரண்டாவது செய்யுளில் பாற்கடலில் துயிலும் அவதாரத்தைக் குறிப்பிட்டாலும், முதல் முதலில் தசாவதாரத்தில் அவள் வாமனாவதாரத்தைக் குறிப்பிடுவானேன்? நரசிம்மரே, ராமரோ, க்ருஷ்ணரோ - பற்றி ஏன் முதலில் சொல்லவில்லை/ அப்படி என்ன சிறப்பு இந்த வாமனாவதாரத்தில் ? எம்பாரின் இந்த 3ம் பாட்டு வ்யாக்யானத்துக்கு அவ்வளவு கும்பல் சேரும் ஸ்ரீரங்கத்தில். இப்போது விஷயத்துக்கு வருவோம். பெரிய வாச்சான் பிள்ளையின் வ்யாக்யானம் குறிப்பிடத் தகுந்தது. 1.மிக எளிமையான லக்ஷணங்களான தண்டம், குடை, கௌபீனம் ( கோவணம் ).வெளிப்புற தோற்றம் மட்டும் அல்ல .வாமனின் திருப்தி.தன சிறிய காலால் மூன்று அடி மண் வேண்டுகிறான் . 2.அதன் பின் வருவது அரசனின் கொடை குணம்.அரசன் பிரம்ம சாரியிடம் செலுத்தும் மரியாதை,உண்மை, உயிரையும் ஈயும் தன்மை. 3.வைணவத்தின் பிரதான அம்சமான குரு மஹிமை.குரு என்ன சொன்னாலும் அது சரியாகவே இருக்கும்.சுக்ராச்சாரியார் மிகச் சரியாக வாமனை 'ஹரி' என்று அடையாளம் காட்டுகிறார்.வாமன அணிந்துள்ள பூணூல் மட்டுமல்ல. அவரைச் சூழ்ந்துள்ள ஒளி வட்டம் அவரை அடையாளம் காட்டுகிறது. 4.ஆனால் மஹாபலி குருவை மதிக்காமல் தானம் செய்ய த் தொடங்கவே குரு அவனை' நீ செல்வம் அனைத்தும் இழப்பாய்' என சபிக்கிறார். குரு சாபம் என்றுமே பொய்ப்பதில்லை. 5.பிறவியில் அரக்கனாயினும் பக்தியில் சிறந்த மஹாபலிக்கு முக்தி அளிக்கிறார். ஹிரண்ய சிபுவின் பேரன் ஆனாலும் தாத்தா செய்த முட்டாள்தனத்தை அவன் செய்யவில்லை. நரசிம்ம அவதாரத்தில் தாத்தா அடைந்த கோர மரணம் அவன் கண் முன்னால் வர, பணிந்து போவதே உத்தமம் என்று உணர்ந்து இறைவன் திருவடிகளைத் தலையால் ஏற்று உயரிய பதவியை அடைகிறான். . 6.The surrender is not surrendering your wealth and other worldly possessions, but the surrender of the Self. That wonderful golden thought was brought forth in Vamana avatar. 7.ஒருவருக்கு இறைவன் முக்தி அளிக்கும்போது முதலில் அவர் எடுத்துக் கொள்வது அவனது உடைமை களைத்தான்.ஒருவர் செல்வத்தை இழக்கும்போது அதை விட மேலான ஒன்று அவர்களுக்காகக் காத்திருக்கிறது என்று பொருள். 8.ராமாவதாரத்திலும் கிருஷ்ணாவதாரத்திலும் இல்லாத சிறப்பு வாமனனுக்கு உண்டு.ராமனும் கிருஷ்ணனும் அரக்கர்களை வதைத்துப் பாடம் புகட்டினார். வாமனன் குருவாக மாறி மகாபலியின் கர்வத்தை அடக்கி ஆட்கொண்டார். குரு மட்டுமே ஈசன் அடிகளை நோக்கி நம்மை அழைத்துச் செல்ல வல்லவர். 9.முதலில் வாமன அடியெடுத்து வைத்த இடம் சத்யலோகம். பிரம்மா ஹரியை வரவேற்று பாதங்களை நீரால் அபிஷேகம் செய்தார். அந்த நீர்தான் வாமணி கட்டை விரலிலிருந்து பெருகி கனகையாக பிரவாகித்தது என்பது வைணவர் நம்பிக்கை.வாமனனுக்கு ஏற்றம் அளித்து கங்கையின் பெருமையையும் உலகுக்குள் உணர்த்திவிட்டாள் பாவை ஆண்டாள் . அடேயப்பா ஓங்கி உலகளந்த உத்தமனுக்கு இவ்வளவு சிறப்பு சூட்டத்தான் முதலில் 'வாமனின் பெருமையைப் புகழத் தொடங்கினாள் போலும். எந்த இலக்கியத்தையும் commentaries -வ்யாக்யானங்களுடன் படிக்கும்போது மெருகு கூடும். பவித்ரா,ரொம்ப போர் அடித்து விட்டேன். காரணம் கோதையின் பால் கொண்ட காதல்.மன்னிக்கவும். ஜெய்சாலா 42
சரியாகச் சொன்னீர்கள். எனக்கும் உயர்ந்த விஷயங்களை உள்ளடக்கிய புத்தகங்களைப் படிக்கப் பிடிக்கும். என்ன செய்வது, நான் இருக்கும் இடத்தில், நினைத்த நேரத்தில், விரும்பும் புத்தகங்களைப் பெற இயலவில்லை. தாயகம் வரும் பொது நிச்சயம் என் ஆசையில் சிறிதளவேனும் நிறைவேற்றித் தர வேண்டுமென இறைவனை இறைஞ்சுகிறேன். அம்மையீர், தாங்கள் எவ்வளவு பெரியவர் , இப்படிச் சொல்லலாமா ? நான் உங்களை அப்படி எண்ணுவேனா ? இப்பதிவுகளை இத்தளத்தில் பதிப்பிக்கக் காரணமே, தங்களைப் போன்ற அனுபவசாலிகளின் அருமையான பின்னூட்டங்களை எதிர்பார்த்துத் தானே ! இதை நான் முன்பும் கூறியுள்ளேன், இப்போதும் சொல்கிறேன். தங்களைப் போன்று , நேரிடையாகப் பெரியோர்களின் உபன்யாஸங்களைக் கேட்டோரும் , வியாக்கியானப் புத்தகங்களைப் படித்தோரும், எனக்கும், ஏனைய வாசகர்களுக்கும், நுட்பமான செய்திகளை எடுத்துக் கூறினால் தானே நல்ல தெளிவு கிடைக்கும். எங்களுக்கு அது எவ்வளவு பெரிய உதவி ? இயன்ற போதெல்லாம்,இப்பதிவில் தொடர்ந்து தாங்கள் அன்பு கூர்ந்து விளக்கங்களைப் பகிர்ந்து கொண்டு,எனக்கு அறிவு புகட்ட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். ஆண்டாளை உத்தமியாக்க நான் யார் ? அவள் உத்தமனின் தேவியல்லவா ? நமக்குத் தாயல்லவா ? இவ்வளவு பெரிய வார்த்தைகளுக்கு நான் சிறிதும் ஏற்றவள் அல்லள் . தங்களின் ஆசீர்வாதமாகவே இதை எடுத்துக் கொள்கிறேன். மிக்க நன்றி ! என்றும் அன்புடன், பவித்ரா
@jayasala42 , Respected Madam, Sincere apologies. I just realized my quotes got interchanged. Totally unintentional, hope you understand. Regards, Pavithra