Dear IL-ites I have planned to write some of the important slokas of Thirumandhiram from the various 9 thanthirams composed by Thirumoolar during 5th Century AD in Tamil... It has lot of signficance in day to day life and its the real composition of the Vedas translated to Tamil by Thirumoolar.... Hope all would get benefitted by the grace of Lord Shiva here... aum namashivAya !!!
ஆங்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ் சாங்குகின் றானவ னாதிஎம் ஆருயிர் ஆங்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்து ஆங்குகின் றான்அவன் ஆவ தறிந்தே. (ப. இ.) உயிர்கள் இறந்தபின் வினைக்கீடாக அச்சுமாறிப் பிறக்கும். அச்சுமாறுதல் - பருவுடம்பு மாறுதல். பருவுடம்பு மாறுதலாவது ஆண் பெண்ணாக மாறலாம்: பெண் ஆணாக மாறலாம்; அம்மட்டோ? உயர் திணை அஃறிணையாகவும் மாறலாம்; இவ்வகை மாறுதல் என்க. திணைபால்கள் சேரும் வினைக்கீடாமாறி, அணைபிறப்பாம் மக்கட்கறி. இறந்தவுயிர் நுண்ணுடம்பாகிய புரியட்ட வடிவத்துடன் மீண்டும் கருவில் பிறக்கும். புரியட்டவடிவம்; தன்மாத்திரைஎன்று சொல்லப்படும் ஓசை, ஊறு, ஒளி, சுவை நாற்றம் என்ற ஐந்து, மனம், எழுச்சி, இறுப்பு என்ற மூன்று ஆகிய எட்டுங்கூடிய வடிவம். இவ்வடிவம் படைப்புக் காலந்தொட்டுப் பேரொடுக்க காலம் வரை எவ்வகை மாறுதலும் எய்தாது. எல்லாவுயிர்க்கும் வேறுபாடின்றி ஒன்றுபோல் உள்ளது. இதனையே திருவள்ளுவ நாயனார் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று அருளினர். பின்னர் வழங்கப்படுவதும் மாறப்படுவதுமாகிய பருவுடம்பே செய்யும் வினைக்கீடாக வேறுபடும். அதனையே திருவள்ளுவ நாயனார். 'சிறப்பொவ்வா, செய்தொழில் வேற்றுமை யான்' என்று அருளினர். இவ்வேற்றுமையுடம்பு பெரும்பூதம் ஐந்து, அறிதற் கருவி ஐந்து, செய்தற் கருவி ஐந்து, வளிபத்து ஆகிய இருபத்தைந்து பொருள்களாலாயது. அவை திருவருளால் அமைக்கப்பெறுவன. அவற்றைத் தான் முன் பிரிந்த இருத்தைந்தென்று ஓதினர். இவ்விருபத்தைந்துந்தான் பருவுடம்பு ஆகும். இறப்பும் பிறப்பும் பருவுடம்பிற்கேயாம். இப்பருவுடம்பின் கண் முன் நுண் உடம்புடனே பிரிந்து சென்ற ஆருயிரை வினைக்கீடாகப் புகச் செய்கின்றனன். இவற்றைத் திருவருள் கருப்பையினுள் உயிர்க்குயிராய் நின்று அமைக்கின்றது. அதுவே சிவபெருமான் ஆவதறிந்து அமைக்கின்றான் என்பதாகும்.
அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச் செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப் பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப் பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே (ப. இ.) நுண்ணுணர்வான் அறியப்படுகின்ற மூலாதாரத்துக்கு மேல் அகட்டுத் தீயும் நீரும் நிறைந்துள்ள கருப்பையில் அறிவோடு கூடிய உயிர் தங்கிய கருவுடன் வெவ்விய இளங்காலை முடக்கித் தலையுடன் சேரத்து ஓம் வடிவமாய் அமைக்கின்றனன். கருப்பையினுள் சுமையாக நின்ற அவ்வுயிர் வெளிப்போமாறு திருவுளங்கொண்டு முந்தித் தவங்கிடந்து தாங்கிய அன்னை வயிற்று முந்நூறு நாளாகிய பத்துத் திங்களும் நீங்கும் சுமையாக வைத்தருளினன். பறிகின்ற - நீங்குகின்ற. பாரம் - சுமை.
இன்புறு காலத் திருவர்முன் பூறிய துன்புறு பாசத் துயர்மனை வானுளன் பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும் அன்புறு காலத் தமைத்தொழிந் தானே எக்கால்த்தும் நீங்காது மிக்குறும் எழில் இன்பம் மக்கட்பேறு ஒன்றான்மட்டும் உண்டாம். அதனை, எய்துதற்கு மனையறம் பேணும் இயல்புடையிருவராகிய கணவனும் மனைவியும் விரும்பிக் கடவுளைக் கைதொழுது அவ்வழி முயலுதல் வேண்டும். அங்ஙனம் முயலுங்கால் இருவர்மாட்டும் ஒருவாப் பேரன்பு உண்டாகும். அவ்வன்பின் பெருக்கால் இருவரும் அகம்புறம் ஒத்துக்கூடுவர். அக் கூட்டத்துறுபயனால் கருவுறும். அக்காலத்து அருள்வெளியாகிய வானத்து வீற்றிருந்தருளும் சிவபெருமான் ஆருயிர் கருவிற் புகுமாறு திருவுள்ளங் கொள்வன். தொன்மையிலேயே ஊறிப் பொருந்திப் பொதிந்துள்ள துன்பவாயிலாம் ஆணவத்தை அறவே அகற்றுதற்கு ஆக்கிக்கொடுத்தருளும் உடல் அருவுடல். அருவுடல் என்றாலும் நுண்உடல் என்றாலும் ஒன்று. மாறிப் பிறக்கும் உயிர்கட்கு அவ்வுயிர்களின் வினைக்கீடாகப் பொருந்தும் பண்பும், வாழ்நாளும், நிலவுலக வாழ்க்கையில் ஏற்படும் செல்வ வறுமைகளும், கருவினுள் பதித்தருளினன்.
கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ் புருடன் உடலில் பொருந்துமற் றோரார் திருவின் கருக்குழி தேடிப் புகுந்தது உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே. (ப. இ.) பிறவாப் பெருநெறிபற்றிய திருவடியுணர்வு கைவந்த சிவனடியார் கருவை ஒழிந்தவராவர். அவர்கள் பருவுடலுக்கெனக் கண்டறிந்த (436) இருபத்தைந்து பொருள்களும் அவ்வுண்மையினைக் காணாதாரைப் பொருந்தும். அவர்களே மற்றோரார் என ஓதப்பட்டவராவர். திருமகளனைய வாழ்க்கைத் துணைவியின் கருவில் துணைவனது வெண்ணீர் ஓடிவிழுந்தது, ஆங்குள்ள செந்நீருடன், அதுகலப்புற்றது. அதனால் ஆண்பெண் என்னும் இரண்டாகிய வடிவங்களுள் ஒன்றாகத் திரிபுற்று வளர்ந்தது. வெண்ணீர் - சுக்கிலம். செந்நீர் - சுரோணிதம். Thirumanthiram - 439
விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி ஒழிந்த முதல்ஐந்தும்1 ஈரைந்தொ டேறிப் பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்2 ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே. (ப. இ.) வாழ்க்கைத் துணைவராங் காதலர் அன்புற்று இன்புறும் வாயிலாம் மகப்பெறுதற் பொருட்டுக் கூடிய கூட்டத்து இலிங்கமாகிய உருவுடம்புக்கு வாயிலாம் வித்துப் புகுந்தது. அதனை ஏற்றுக்கொள்ளும் பொருட்டுக் கருவழியாகிய யோனி விரிந்தது. நுண்ணுடலில் தங்கியிருந்த ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் நுண்மை ஐந்தும் அறிதற் கருவி ஐந்து, செய்தற் கருவி ஐந்து ஆகப் பத்தினுடன் கூடிய மழையாகப் பொழியும் நீர்முதலாகச் சொல்லப்படும் பூதங்கள் ஐந்தும் தோன்றின. அவற்றால் போற்றப்படும் கரணங்களும் கூடின. புருவ நடுவிலும் உச்சியிலும் நின்று உணரும் தொழிலும் இடையறாது நிகழ்வதாயிற்று. அறிதற் கருவி; செவி, மெய், கண், நாக்கு, மூக்கு. செய்தற் கருவி; வாய், கால், கை, எருவாய், கருவாய், கரணம்; எண்ணம், மனம், எழுச்சி, இறுப்பு. அறிவு நிகழ்தற்கு நிலைக்களம் புருவநடுவும் உச்சியும் என்ப. Thirumanthiram - 440
பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவுந் தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல் மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங் கூவி அவிழுங் குறிக்கொண்ட போதே. (ப. இ.) பூவினகத்துத் தங்கியிருக்கும் நறுமணத்தை ஓவாது சுழலும் காற்று வெளிப்படுத்தி உலகத்தில் கொண்டுவந்து பரப்பி நிலைப்பிக்கும். அதுபோல் அருவுடம்புடன் கருவிற் கூடிய ஆருயிரை அங்குப் பொருந்திய காற்றுக்கள் பத்தினுள் சிறிது சிறிதாக வளர்ந்து பெருகும் மென்மையமைந்த உயிர்க்காற்று பிறக்கும் குறிப்பு ஏற்பட்டதும் உடனொத்துப் பொருந்தி வெளிக்கொணரும். இதற்கு உயிர் பிரியுங்காலத்துத் தொழிற்காற்று என்று கூறுவாருமுளர். கருவுற்பத்தி நிலைக்களத்து அங்ஙனம் கூறுதல் பொருந்தாதென்க.
ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும் மாற எதிர்க்கில் அரியவன் றானாகும் நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும் பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே. (ப. இ.) சிவனை மறவாத்திருவுடைக் காதலிருவர் கலந்து கூடுங்கால் தோன்றும் வித்தாகிய விந்து நடுநாடி வழியாக ஒலியாற்றல் என்னும் நாதசத்திக்கு மேற்பட்டு எதிர்த்துச் செல்லுதல் சிறப்புடைத்து. அங்ஙனம் செல்லின் அது வாயிலாகப் பிறக்கும் பிள்ளை சிவ வடிவாகத் தோன்றும். அதுபோலன்றி அமைதியாக எதிர்த்தால் செயற்கருஞ் செய்கை செய்யும் சீரியோனாகத் தோன்றும். சமமாகச் சென்றால் தனக்குத்தானே ஒப்பாகிய பேரறிவுப் பிள்ளையாகத் தோன்றும். மேற் கூறிய முறையில் ஒத்த பெருமைவாய்ந்த மைந்தனும் சிவவுலகப் பேரரசு திருவருளால் ஆளும் பெற்றியனாவன். நிகர்போதம் - சிறந்த அறிவு ; திருவடியுணர்வு.
ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப் பாயுங் கருவும் உருவா மெனப்பல காயங் கலந்தது காணப் பதிந்தபின் மாயங் கலந்த மனோலய மானதே. (ப. இ.) அண்டங்கள் பலவற்றையும் பொருந்தி வினைக்கீடாக உழன்று வருந்திய உயிர் இருவராய்க் கலந்து இல்வாழ்க்கையராய் நல்லறம் பேணுகின்றனர். அவ்விருவருடைய அரும்பெரும் பண்புகளால் தோன்றும் கருவும் உருவாகும். அங்ஙனம் உருவாவதற்குத் தாயினுடைய உணவுச் சாரமும் வேண்டும். அவ்வுணவுச் சாரம் மருந்தனைய பல மசாலை எனப்படும் காயம் கலந்ததனால் ஆகும். அவ்வுணவு உடலாந்தன்மை யுண்டாகப் பதிந்தபின் சொல்லொணாப் பெருவேட்கையுடன் கூடி இருவர் உள்ளமும் ஒன்றுபட்ட பெறுபேறே அறிவறிந்த மக்களாகும். சாயத்து - நிறத்தால்; ஈண்டுப் பண்பால். காண - சாரமாய்த் தோன்ற. பதிந்தபின் - தங்கியபின், மாயம்கலந்த - பெருவேட்கை சேர்ந்த. மனோலயம் - உள்ளத் தொருமை. Thirumanthiram - 443