சில கடைகளில் சிறிய போர்டு ஒன்று வைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்திருப்போம் . அதில் “இன்று ரொக்கம், நாளை கடன் “ என்று எழுதி இருக்கும். இப்பொழுதெல்லாம் இரண்டு இரண்டரை மாதங்களாக செய்தித்தாள்களில் நாம் தினமும் பார்க்கிறோம் : “அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் அனல் காற்று வீசும்” “இன்றும் நாளையும் வெப்பம் அதிகமாக இருக்கும்”. “வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரு வாரம் கழித்து உருவாகலாம்”. கிட்டத்தட்ட தினமும் இதே செய்தி தான். இதையே படித்துப் படித்து உடலிலும் மனதிலும் புழுக்கம் அதிகமாகி விட்டது. நேற்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று டிவியில் பார்த்தேன், ரொம்பவும் சந்தோஷப் பட்டேன், ஆனால் இடியுமில்லை மழையும் இல்லை; வானம் கொஞ்சம் cloudyயாக இருந்தது,அவ்வளவுதான். தண்ணீர் பிரச்சினை வேறு. வருணபகவான் கண் திறந்தால் தான் உண்டு. மழையும் அளவின்றி பெய்தால் அதுவும் கஷ்டம்தான். மகரிஷி சுவாமிகள் சொன்னது போல ஆறு, குளம், ஏரி எல்லாம் நிரம்பி மழை அளவோடு பெய்ய வேண்டும். ஏதோ இன்றைக்குத்தான் இப்பொழுதுதான் நன்றாக இருட்டிக் கொண்டு மழை “இதோ வரேன் இதோ வரேன்” என்கிறது. வந்தால் சரிதான். welcome. குழந்தைகளிடம் “Rain rain go away, come again another day “ என்ற பாட்டை இப்பொழுதைக்குப் பாட வேண்டாம் என்று சொல்லி வைத்திருக்கிறேன் . ம்..ம்... வருடம் முழுவதும் தினமும் ஏதோ ஒரு அரை மணி அல்லது ஒரு மணி நேரத்திற்கு மழை பெய்தால் நன்றாகத்தான் இருக்கும். எல்லாம் அவன் கையில் தான் இருக்கிறது.
நேற்றைக்கு முன் தினமும் நேற்று இரவும் லேசான மழை பெய்து பூமியை சிறிதளவு நனைத்திருந்ததைப் பார்த்து என் மனமும் சிறிது குளிர்ந்தது. காரணம் எங்கள் குடியிருப்பில் கீழே நாங்கள் தொட்டிகளில் வைத்திருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலை மிச்சமானது. புஷ்பவல்லி